ஆட்டோமொபைல்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 500 கோடி டாலர்கள் இழப்பை எதிர்நோக்கும் ஃபோர்டு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஃபோர்டு நிறுவத்திற்கு 500 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்நிறுவனம் கணித்திருக்கிறது.
ஃபோர்டு மோட்டார் கோ நிறுவனம் இரண்டாவது காலாண்டு இழப்பு 500 கோடி டாலர்களாக இருக்கலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் காலாண்டு இழப்பு 200 கோடி டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தனை இழப்புக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பே காரணமாக கூறப்படுகிறது.
வருவாய் இழப்பு ஏற்பட்ட போதும், நிறுவனத்தின் கையிருப்பு தொகையை கொண்டு இந்த ஆண்டு இறுதி வரை சமாளிக்க போதுமானதாக இருக்கும். எனினும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான வருவாய் கணிப்புகளை வெளியிடுவது சரியானதாக இருக்காது என ஃபோர்டு நிறுவன மூத்த நிதி அலுவலர் டிம் ஸ்டோன் தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு முதன்மை அதிகாரிகளின் ஊதியத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளையும் ஃபோர்டு நிறுவனம் மேற்கொண்டு இருக்கிறது. இதுதவிர எதிர்கால திட்டங்கள் சார்ந்த பணிகளையும் ஃபோர்டு நிறுவனம் நிறுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக ஃபோர்டு தானியங்கி வாகன சேவைகள் ஓராண்டு தாமதமாக வெளியாக இருக்கிறது. இதுதவிர ரிவியன் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்க இருந்த ஆடம்பர எலெக்ட்ரிக் வாகனத்திற்கான பணிகளையும் ஃபோர்டு நிறுத்தி வைத்திருக்கிறது.