ஆட்டோமொபைல்
ஹோண்டா

இந்தியாவில் மீண்டும் பணிகளை துவக்க ஆயத்தமாகும் ஹோண்டா மற்றும் யமஹா

Published On 2020-04-28 11:47 GMT   |   Update On 2020-04-28 11:47 GMT
ஹோண்டா மற்றும் யமஹா நிறுவனங்கள் இந்திய சந்தையில் மீண்டும் பணிகளை துவங்க ஆயத்தமாகி வருகின்றன.



ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா மற்றும் யமஹா மோட்டார் நிறுவனங்கள் இந்திய சந்தையில் தங்களின் வாகன உற்பத்தி பணிகளை துவங்க ஆயத்தமாகி வருகின்றன. இருநிறுவன ஆலைகள் அமைந்துள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டதும் மீண்டும் பணிகளை துவங்க இருக்கின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க மார்ச் 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு காரணமாக இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்து வருகின்றன. 

தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஆலையில் பணிகளை துவங்க அனுமதி பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் யமஹா நிறுவனம் அரசு விதிக்கும் புதிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு உற்பத்தி பணிகளை மீண்டும் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



எனினும், உதிரிபாகங்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் ஊரடங்கு காரணமாக முடங்கி இருப்பதால் ஹோண்டா மற்றும் யமஹா நிறுவனங்கள் தங்களது பணிகளை துவங்க சில காலம் ஆகும் என கூறப்படுகிறது. இதுதவிர வெளியூர்களில் வசிக்கும் ஊழியர்கள் திரும்ப சில காலம் ஆகும் என்பதால், பணிகளை உடனடியாக துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், நாடு தழுவிய ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் உற்பத்தி சார்ந்த சில பணிகள் கடும் கட்டுப்பாடுகளுடன் துவங்க அனுமதி வழங்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News