ஆட்டோமொபைல்
ஏமாற்றம் அளித்த ஏப்ரல் 2020 - ஆட்டோமொபைல் வரலாற்றில் இது முதல் முறை
ஆட்டோமொபைல் துறையின் வாகனங்கள் விற்பனை வரலாற்றில் முதல் முறையாக இந்த சுவாரஸ்யம் அரங்கேறி இருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் முதல் முறையாக ஒரு வாகனமும் விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மூலம் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மார்ச் மாத மூன்றாவது வாரம் முதல் அனைத்து வித வியாபாரங்கள் மற்றும் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டன.
நாடு தழுவிய ஊரடங்கு ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்டு பின் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊரடங்கு முடியும் வரை நிறுத்தி இருக்கின்றன.
டிவிஎஸ் மோட்டார், மாருதி சுசுகி, மஹிந்திரா என முன்னணி ஆட்டோமொபைல் நிறுவன தலைமை அதிகாரிகள், ஊரடங்கு காரணமாக வாகனங்கள் விற்பனை மிக மோசமான நிலையை சந்திக்கும் என தெரிவித்து இருந்தனர். மேலும் இதே நிலை மே மாதம் வரை நீடிக்கும் என்றும் தெரிவித்து இருந்தனர்.
மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு, மக்களின் புதிய வாகனங்கள் வாங்கும் திட்டத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. சில மாநிலங்களில் உற்பத்தி ஆலை பணிகளை படிப்படியாக துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், வாகனங்களை விற்பனை செய்வோர், விநியோகம் மற்றும் இதர பணிகளை மேற்கொள்வோர் பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருப்பதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவசரமின்றி பணிகளை செய்யலாம் என்ற நிலையிலேயே இருக்கின்றன. மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், உற்பத்தி பணிகள் மே மாத மத்தியில் தான் துவங்கும் என வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தெரிவித்து இருக்கின்றன.