ஆட்டோமொபைல்
ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விற்பனையை துவங்கிய மெர்சிடிஸ் பென்ஸ்
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கி இருக்கிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலக நாடுகளை மிக கடுமையாக பாதித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க மே 3 ஆம் தேதி வரை நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் ஏற்படும் பாதிப்பில் இருந்து ஓரளவு தப்பிக்க மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கி இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பென்ஸ் வாகனங்களை மட்டும் ஆன்லைனில் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அறிவிப்பின் படி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அனைத்து வாகனங்களும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவவர் சந்தோஷ் ஐயர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக மெர்சிடிஸ் நிறுவனம் தனது 2020 சி கிளாஸ் மாடல்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுக்கு மாற்றாக புதிய பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை வழங்கியது. இந்த என்ஜின் 201 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு 9ஜி டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.