ஆட்டோமொபைல்
மூன்றாவது காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா லாபம் 5 சதவீதம் உயர்வு
இந்திய சந்தையில் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் லாபம் 5 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் 1983-ஆம் ஆண்டில் இந்திய செயல்பாடுகளை தொடங்கியது. குருகிராம், மானேசர் ஆகிய இடங்களில் இதன் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அண்மைக் காலமாக இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, வருவாய் மற்றும் லாப வளர்ச்சி நிலவரங்கள் திருப்திகரமாக இல்லை.
இந்நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.1,587 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது சுமார் 4.1 சதவீதம் உயர்வாகும். அப்போது அது ரூ.1,524 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 5 சதவீதம் உயர்ந்து ரூ.20,721 கோடியாக உள்ளது.
சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.19,680 கோடியாக இருந்தது. இதர வருவாய் ரூ.784 கோடியாக இருக்கிறது. மொத்த லாபம் 8.9 சதவீதம் உயர்ந்து ரூ.2,102 கோடியாக உள்ளது. வரிச் செலவினம் ரூ.441 கோடியாக இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம், டிசம்பர் காலாண்டில் மொத்தம் 4,37,361 கார்களை விற்பனை செய்து இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தை விட இது 29 சதவீதம் உயர்வாகும். உள்நாட்டில் இதன் விற்பனை 2 சதவீதம் உயர்ந்து 4,13,698-ஆக இருக்கிறது. இதே காலத்தில் ஏற்றுமதி 23,663-ஆக உள்ளது.