தனுசு - ஆண்டு பலன் - 2024
null

புத்தாண்டு ராசிபலன்கள்-2024

Published On 2023-12-29 10:07 GMT   |   Update On 2023-12-29 11:33 GMT

ஆன்மீக நாட்டம் நிறைந்த தனுசு ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

2024 ஆங்கிலப் புத்தாண்டில் வருட கிரகங்களில் முயற்சி ஸ்தான அதிபதி சனியின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது. ஏப்ரல் 21ல் குருபகவான் 6ம்மிடம் சென்றாலும் பார்வை பலத்தால் பல நன்மைகள் வழங்குவார். சுக ஸ்தான ராகுவும் தொழில் ஸ்தான கேதுவும் தொழில் மேன்மையை வழங்கப் போகிறார்கள்.

குருவின் சஞ்சாரபலன்கள்

ஏப்ரல் 21, 2024 வரை ராசி மற்றும் நான்காம் அதிபதி குரு பஞ்சம ஸ்தானத்தில் நின்று ராசியை பார்ப்பதால் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களைத் தரப்போகிறார்.மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சோதனைகள் முடிவிற்கு வரும்.

ஏப்ரலில் 6ம் மிடத்திற்குச் செல்லும் குரு பகவான் 5ம் பார்வையால் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் 12ம்மிடமான விரய ஸ்தானத்தையும் 9ம் பார்வையால் தன ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். தன்னம்பிக்கை தைரியம் கூடும். தொழில், உத்தியோகத்தில் வெற்றிகள் குவியும். தொழில் வியாபாரத்தில் லாபம் பல மடங்காக உயரும்.நல்ல வருமானம் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணமான தம்பதியினர் இடையே நெருக்கம் கூடும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். வாழ்க்கையில் கடந்த காலங்களில் நடந்த கசப்பான சம்பவங்கள் மாறி நன்மை தரும் ஆண்டாக 2024-ம் ஆண்டு அமையப்போகிறது.

பண விசயத்தில் நிலவிய கெட்ட பெயர்கள் நீங்கப்போகிறது. அரசு போட்டி தேர்வு எழுதியவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். எவ்வளவு வருமானம் வந்தாலும் வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். விரயத்தை சுப செலவுகளான சொத்து, நகை வாங்கவும், குடும்பத்திற்கு சுப நிகழ்வு நடத்தவும் பயன்படுத்தினால் சிறப்பான வெற்றிகள் தேடி வரும் சனியின் சஞ்சார பலன்கள் தனுசு ராசிக்கு 2, 3ம் அதிபதியான சனி பகவான் 3ம்மிடமான சகாய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். 3ம் பார்வையால் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 12ம்மிடமான அயன, சயன விரய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும். விருப்பமும் கனவுகளும் நிறைவேறும். குடும்ப உறவுகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு ஆனந்தமாக இருப்பீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும்.

தடைபட்ட சொத்துக்கள் மீதான வாடகை மற்றும் குத்தகை பணம் கிடைக்கும்.சகோதர வழியில் நிலவிய கருத்து வேறுபாடு மறைந்து ஆதாயம் ஏற்படும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என அவரவரின் தசாபுத்திக்கு ஏற்ப இடமாற்றம் ஏற்படும். தகவல் தொடர்புகள் மூலம் ஆதாயம் ஏற்படும். தொலைந்த கை மறதியாக வைத்த ஆவணங்கள், முக்கிய பொருட்கள் கிடைக்கும்.

சிலர் உயில் எழுதலாம் அல்லது குடும்பத்தில் பாகப்பிரிவினை நடக்கும்.நீண்ட காலமாக தடைபட்ட அனைத்து மங்கல நிகழ்வுகளும் நடைபெறும்.பாக்கிய பலன்களும், புண்ணிய பலமும் கூடும். குல தெய்வ, குடும்ப தெய்வ, முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

நவகிரகங்களில் நிழல் கிரகமான ராகு பகவான் சுக ஸ்தானத்திலும் கேது பகவான் தொழில் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார். முறையான திட்டமிடுதல் நிரந்தர வெற்றியைக் குவிக்கும்.புதிய தொழில் முயற்சிகள் தேடி வரும்.வழக்குகள் ஒத்திப் போகும்.எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள் அல்லது ஒதுங்கிப் போவார்கள்.செய்தொழில் விருத்தியாகும். தொழில் நிமித்தமான வெளிநாட்டுப் பயணம் திருப்திகரமாக அமையும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு உத்தியோகத்திலிருந்து விடுபட்டு சொந்த தொழில் துவங்கும் எண்ணம் தோன்றும்.

தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய கருத்து வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஏற்படும். புதிய வேற்று மத நண்பர்கள் நண்பிகள் கிடைப்பார்கள்.குடும்பத்துடன் விருந்து உபசாரங்கள், கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரப் பொருள் சேரும். சொத்துக்கள் சேரும்.மனக் கவலைகள் அகலும்.உங்களது ஆலோசனையை குடும்பத்தினர் ஏற்பார்கள்.குடும்ப உறவுகளிடையே இணக்கமான சூழல் நிலவும். நிலுவையில் உள்ள வாடகை வருமானம் வரும். நோய்,நொடிகள் நிவர்த்தியாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சுகமும் சந்தோஷமும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

மூலம்

அதிர்ஷ்டம் அரவணைக்கும் வருடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் பல்வேறு சுப பலன்கள் உண்டாகும். தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும். தொழில் போட்டிகள் நீங்கி திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். வீடு கட்டத் தேவையான கடன் அல்லது புதிய தொழில் கடன் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடம் இருந்த வேற்றுமை மறையும். ஊடகங்களில் பணி புரிவர்களின் தனித்திறமை வெளிப்படும்.

ஒரு சிலர் வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் செய்ய நேரும். வீண் அலைச்சல் விரயம் தொடரும். கொடுக்கல், வாங்கலில் சிரத்தை தேவை. விரயத்தை சுபமாக்க முயற்சிப்பது நலம்.மனைவி வழிச் சொத்தை உயில் மாற்றம் செய்வதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும். அரசியல் பிரமுகர்களின் சொல்வாக்கு செல்வாக்கு ஓங்கும் சிவனுக்கு இளநீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

பூராடம்

சந்தித்த சோதனைகள் சாதனைகளாக மாறும் வருடம். நண்பர்களின் ஆதரவால் தடைப்பட்ட செயல்கள் நிறைவடையும்.தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரம் விருத்தி அமையும். வெளிநாட்டில் கல்வி, வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஏழரை சனி காலத்தில் தூக்கத்தை தொலைத்தவர் களுக்கு இனி நிம்மதியான தூக்கம் வரும்.

இழந்த பணத்தை திரும்ப பெறப்போகிறீர்கள். அசையும், அசையா சொத்து வாங்குவது, விற்பது பராமரிப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டு.பெற்றவர்களால் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளால் பெற்றோர்களுக்கும் பெருமை சேரும். ஆரோக்கியம் சீராகி வைத்தியச் செலவுகள் குறையும்.கரும்புச்சாறு அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

உத்திராடம் 1

பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும் வருடம்.வாழும் இடத்திற்கேற்ப உங்களை மாற்றிக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்கும் ஆற்றலை பெறுவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சித்திக்கும். உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். தொழில் லாபம் வியாபாரிகளின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

சொத்து சேர்க்கை ஏற்படும். ஆன்மீக பயணங்கள் புனித யாத்திரைகள் செல்ல முயற்சி செய்யலாம். பலகாலமாக தீர்க்க முடியாத பூர்வீக சொத்து தொடர்பான வில்லங்கம் முடிவுக்கு வரும். மன வேதனை மற்றும் அவமானப்படுத்திய வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.பழைய கடன்கள் அடைபடும். திருமண முயற்சிகள் சாதகமாகும்.பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடவும்.

திருமணம்

சுய ஜாதக தோஷத்தாலும் கோட்சார கிரகங்களாலும் தடைபட்ட திருமணம் குருவருளாலும் பெரியோர்களின் நல்லாசியாலும் இனிதே நடைபெறும்.

பெண்கள்

இயற்கையிலேயே அழகான உங்களை ராசிநாதனான குருவே பார்ப்பதால் மேலும் அழகு பெறுவீர்கள். உடல் தேஜஸ் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகழ்ச்சி தரும். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முழு தைரியத்தோடு வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். புதிய அணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவனுக்கோ , மனைவிக்கோ திடீர் அதிர்ஷ்டமாக தாத்தா பாட்டி வீட்டுச் சொத்து பெரும் பணம் போன்றவை கிடைக்கும். லாட்டரி, பங்குச் சந்தை, புதையல், உயில் மூலம் ஆதாயம் கிடைக்கலாம்.

வியாபாரிகள்

சிலர் முன்னோர்கள் செய்த தொழிலையே சீர்திருத்தி செய்யலாம். தொழில் ஸ்தான கேது என்பதால் மிகப் பெரிய முதலீட்டில் மிகக் குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்கள் தங்கள் சுய ஜாதகத்தை பரிசோதித்து அதில் உள்ள தசாபுத்தி மற்றும் கோட்ச்சார கிரகங்களின் சாதக பாதகம் அறிந்து தொழிலை நடத்தினால் சிறப்பாக இருக்கும். தசாபுத்தி சரியாக இல்லாத போது தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.

உத்தியோகஸ்தர்கள்

உங்களின் செயல்பாடுகள் வியக்க தக்க வகையில் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பல்வேறு அனுகூலமான பலன்கள் நடைபெறும். பணிகளை விரைவாகவும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைக்கும். அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்

பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். கோட்சார குருபகவான் அடுத்த ராகு கேது பெயர்ச்சி வரை சாதகமாக இருப்பதால் இக்கட்டான சூழ்நிலையில் உறுதியான முடிவெடுக்க முடியும். கட்சிக்காக உழைத்த உழைப்பு விருட்சமாக வளர்ந்து பலன் தரும் காலமாகும்.உங்கள் பின்னால் ஒரு கூட்டமே திரண்டு நின்று பக்க பலமாக இருக்கும்.

பரிகாரம்

வெற்றிலையில் பாக்குடன் நாட்டு சர்க்கரை வைத்து வியாழக் கிழமை இஷ்ட,குல தெய்வம் , தட்சிணாமூர்த்தி , மகான்கள் சித்தர்கள் ரிஷிகள் ஜீவசமாதியை வழிப்பட்டால் கவலை ஊழ்வினை சாபம் நீங்கும்.

Similar News