ஆன்மிக களஞ்சியம்
null

குலசை தசரா விழா

Published On 2023-06-10 09:21 GMT   |   Update On 2023-06-10 09:23 GMT
  • வரமுனி முழுமையான அசுரனாக மாறி மகிஷாசூரனாக மூன்று உலகத்திலும் வலம் வந்தான்.
  • அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் நவராத்திரி திருவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

தசரா விழா தோன்றியதற்கான காரணத்தை விளக்கும் புராணக்கதை ஒன்று உண்டு.

முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவன் தான் பெற்ற தவத்தின் பயனாக வலிமை மிக்கவனாகி ஆணவத்தால் தன் அறிவுக்கண்ணை இழந்திருந்தான். ஒரு நாள் இவனது இருப்பிடம் வழியாக மகா மகத்துவம் பொருந்திய அகத்திய மாமுனிவர் சென்றார். அப்போது அவரை மதிக்கத்தவறியதுடன் அவமரியாதையும் செய்தான், இதனால் அகத்தியர் மனம் நொந்து வரமுனிக்கு எருமைத்தலையும் மனித உடலும் பெற்று அலைவாயாக என்று சாபம் கொடுத்தார்.

செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கோரிய உடன், சாப விமோசனமாக இறைவியின் கையால் உன் உடல் அழிந்து சாபவிமோசனம் கிடைக்கும் என்றார்.

எருமைத்தலை பெற்ற வரமுனி மீண்டும் கடுமையான தவங்கள் பல புரிந்து மூன்று உலகங்களையும் ஆளும் வல்லமை பெற்றிருந்தான். இதனால் பூமியில் தவம் புரியும் முனிவர்கள் முதல் தேவர்கள் வரை அனைவருக்கும் எல்லையில்லா துன்பம் கொடுத்து வந்தான்.

வரமுனி முழுமையான அசுரனாக மாறி மகிஷாசூரனாக மூன்று உலகத்திலும் வலம் வந்தான்.

தேவர்களும் முனிவர்களும் சிவனிடம் சென்று முறையிட, அவர் அன்னை பார்வதியை நோக்கி தவம் செய்யுங்கள் உங்களுக்கான தீர்வை அன்னை தருவாள் என்றார் சிவன். தேவர்களும் அன்னையை நோக்கி விடா முயற்சியுடன் கடும் தவம் புரிந்தனர்.

முனிவர்கள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராதபடி அன்னை மாய அரண் ஒன்றை உருவாக்கி எந்த இடைஞ்சலும் இல்லாமல் வேள்வியை நடத்தும்படி கூறினாள். அவர்கள் நடத்திய வேள்வியில் பெண் குழந்தை ஒன்று தோன்றியது.

இந்த குழந்தை லலிதாம்பிகை என்று அழைக்கப்பட்டது. 9 நாட்களில் இந்த குழந்தை முழுமையான வளர்ச்சியடைந்து 10 நாள் பராசக்தி லலிதாம்பிகை என்ற பெயரில் மகிஷாசூரனை வதம் செய்யப்புறப்பட்டாள்.

மகிஷாசூரனை அழித்த 10- ம் நாள் தசரா பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் நவராத்திரி திருவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

முதல் மூன்று நாட்கள் மலைமகளாகவும், அடுத்து வரும் மூன்று நாட்கள் அலைமகளாகவும், இறுதியில் வரும் மூன்று நாட்கள் கலைமகளாகவும் காட்சி அளிக்கிறாள் அன்னை. மகிஷாசூரணை வதைத்ததால் அன்னை மகிஷாசூரமர்த்தினி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.

Tags:    

Similar News