search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கந்தசஷ்டி கவசம் பிறந்த தலம் சென்னிமலை
    X

    கந்தசஷ்டி கவசம் பிறந்த தலம் சென்னிமலை

    • நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள கொடுமணல் கிராமத்தில் “பெரும்வெளிர்’ இனத்தவர் வாழ்ந்தனர்.
    • இவர்கள், பண்ணையக்காரர்களிடம் மாடு மேய்க்கும் வேலைபார்த்தனர்.

    கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய தலம், ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்குள்ள முருகனை வணங்கினால் பிறந்த பயனை அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.

    தல வரலாறு:

    நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள கொடுமணல் கிராமத்தில் "பெரும்வெளிர்' இனத்தவர் வாழ்ந்தனர். இவர்கள், பண்ணையக்காரர்களிடம் மாடு மேய்க்கும் வேலைபார்த்தனர். ஒரு காராம்பசுவின் மடியில் தினமும் பால் இல்லாமல் இருந்ததை, ஒரு வேலையாள் கவனித்து பண்ணையாரிடம் கூறினார். மாடு ஒரு குறிப்பிட்ட இடத்தில், மடியில் இருந்த பால் முழுவதையும் தானாகவே சொரியவிட்டதை பண்ணையார் கவனித்தார். அந்த இடத்தைத் தோண்டியபோது, ஒரு சிலை கிடைத்தது. அதன் முகம் பொலிவுடன் இருந்தாலும், இடுப்புக்கு கீழ் சரியான வேலைப்பாடின்றி இருந்தது. அக்குறையைப்போக்க அந்தப் பகுதியை சிற்பியைக் கொண்டு உளியால் வேலையைத் துவக்கினார். உளிபட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டது. பணியை நிறுத்திவிட்டனர். "ஆண்டவர் அப்படியே இருக்க பிரியப்படுகிறார்", என்று சென்னிமலையின் மேல் பிரதிஷ்டை செய்தனர். இவருக்கு "தண்டாயுதபாணி" என்ற திருநாமம் இட்டனர்.

    தம்பிக்கு முதல் பூஜை:

    எல்லா கோவில்களிலும் விநாயகருக்கு முதல் பூஜை உண்டு. இங்கோ மூலவர் முருகனுக்கு நைவேத்ய பூஜை முடிந்த பின்பே, சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும். முருகன் ஞானப்பழத்தால் கோபித்து வந்து மலைமேல் வீற்றிருப்பதால், அவரை சாந்தப்படுத்தும் வகையில் தொன்று தொட்டு இவ்வாறு நடக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவுக்கென தனித்தேர் உள்ளது. நொய்யல் ஆறு, சென்னிமலையிலிருந்து 3 கி.மீ., தூரத்தில் ஓடுகிறது. கோவிலின் தென்புறம் உள்ள மாமாங்க தீர்த்தம், கோடையிலும் பொங்கி வழியும். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி மகிழ்வித்து முருகப்பெருமானிடம் படிக்காசு பெற்ற தலம்.

    கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம்:

    "துதிப்போர்க்கு வல்வினைப்போம், துன்பம்போம், நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும் நிமலன் அருள் கந்தசஷ்டி கவசம் தனை" என்று முருக பக்தர்கள் மனம் உருகி பாடும் கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள், காங்கேயத்தை அடுத்த மடவிளாகத்தைச் சேர்ந்தவர். இவர் மைசூர் தேராச உடையாரின் காரியஸ்தர். கவசத்தை அரங்கேற்றம் செய்ய வேண்டிய இடம், சென்னிமலை தான் என்பதை முருகனின் அருளாணையால் உணர்ந்தார். அதன்படி அங்கே அரங்கேற்றினார். "சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்ற புகழ்மிக்க வரியை அதில் எழுதியுள்ளார். "சிரம்" , "சென்னி" என்ற வார்த்தைகள் தலையைக் குறிக்கும். மலைகளில் தலையாயது சென்னிமலை என அவர் போற்றியுள்ளார். அடிவாரத்திலுள்ள நஞ்சுண்டேஸ்வரர், பட்டாலி பால்வெண்ணீஸ்வரர் கோவில்கள் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

    Next Story
    ×