search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சுயம்பு விநாயகர் வளரும் அதிசயம்
    X

    சுயம்பு விநாயகர் வளரும் அதிசயம்

    • காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் ஆலயத்தில், கருவறையில் விநாயகர் உள்ள இடத்தை சுற்றி எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும்.
    • சிறு கிணற்றில் இருந்து வெளிப்பட்ட விநாயகர் அதே இடத்தில் வழிபடுவதால், அந்த கிணற்று தண்ணீர் ஊற்றெடுத்து ஓடுவதாக கருதப்படுகிறது.

    தமிழ்நாட்டில் எத்தனையோ சுயம்பு தலங்கள் உள்ளன. அந்த 'சுயம்பு'கள் கவசம் போட்டு வைத்து வழிபடப்படுகின்றன. எந்த ஒரு சுயம்பு மூர்த்தமும் வளர்ந்ததாக வரலாறு இல்லை.

    ஆனால் காணிப்பாக்கத்தில் சுயம்பு வடிவில் வெளிப்பட்ட விநாயகர் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்தபடி உள்ளார். இது ஒரு அதிசயமான நிகழ்வாக இத்தலத்தில் கருதப்படுகிறது.

    சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சுயம்பு வெளிப்பட்ட போது முனைப்பகுதி மட்டுமே தெரிந்தது. அதில் கடப்பாரைபட்ட வடு இன்றும் உள்ளது.

    அந்த சுமய்பு வளர, வளர விநாயகர் வடிவம் பெற்றது. தற்போது விநாயகரின் தொப்பை வரை தெரிகிறது.

    இந்த சுயம்பு விநாயகர் மீது ஆந்திர மாநிலம் அரகோண்டா கொல்லப்பள்ளியைச் சேர்ந்த சித்தையா என்பவரது மனைவி லட்சுமியம்மா மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவர் 1947-ம் ஆண்டு சுயம்பு விநாயகருக்கு ஒரு வெள்ளி கவசம் செய்து கொடுத்தார்.

    சுமார் 50 ஆண்டுகள் அது பயன்படுத்தப்பட்ட நிலையில் சுயம்பு விநாயகர் வளர்ந்து விட்டார். எனவே லட்சுமியம்மா செய்து கொடுத்த வெள்ளி கவசம் பயன்படுத்த முடியாதபடி சிறியதாகி விட்டது.

    இதைத் தொடர்ந்து கடந்த 2005-ம் ஆண்டு சித்தூர் தொகுதி எம்.பி. ஆதிகேசவலு நாயுடு புதிதாக வேறொரு பெரிய வெள்ளி கவசம் செய்து கொடுத்தார்.

    தற்போது அந்த வெள்ளி கவசத்தையும் கடந்து சுயம்பு விநாயகர் வளர்ந்து வருகிறார்.

    சுயம்பு விநாயகர் வளர்வது காணிப்பாக்கம் மக்களிடம் மட்டுமின்றி ஆந்திராவில் உள்ள விநாயக பக்தர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது. சுயம்பு விநாயகருக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளி கவசங்கள் கண்ணாடி கூண்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ரூ.100 பிரத்யேக தரிசன பாதை தொடங்கும் பகுதியில் அந்த வெள்ளி கவசங்களை காணலாம்.

    தீர்த்த கிணறில் பணம்

    காணிப்பாக்கம் கோவில் பிரகாரத்தின் ஒரு பகுதியில் அதாவது ஐம்பொன் சிலைகள் உள்ள சன்னதி அருகில் ஒரு தீர்த்த கிணறு உள்ளது. அந்த கிணறு சுயம்பு விநாயகருடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

    இரும்பு கம்பி சட்டத்தால் அந்த கிணறை மூடி வைத்துள்ளனர். சுயம்பு விநாயகரை தரிசனம் செய்து விட்டு, பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள், அந்த தீர்த்த கிணற்றுக்குள் பணத்தை அள்ளி, அள்ளி போடுகின்றனர்.

    இப்படி காணிக்கை செலுத்தினால், விநாயகர் நமக்கு எல்லா வகை செல்வங்களையும் அள்ளி தருவார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

    பவித்திர தீர்த்தம்

    காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் ஆலயத்தில், கருவறையில் விநாயகர் உள்ள இடத்தை சுற்றி எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும். சிறு கிணற்றில் இருந்து வெளிப்பட்ட விநாயகர் அதே இடத்தில் வழிபடுவதால், அந்த கிணற்று தண்ணீர் ஊற்றெடுத்து ஓடுவதாக கருதப்படுகிறது.

    மழை காலங்களில் பகுதா நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சமயத்தில் சுயம்பு விநாயகரை சுற்றியும் அதிகமாக பெருகும்.

    இதைத்தான் தீர்த்தமாக எடுத்து பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள். விநாயகர் பாதம் பட்ட இந்த தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே இதை பவித்திர தீர்த்தம் என்கிறார்கள்.

    காணி நிலம் வேண்டுமா? காணிப்பாக்கம் செல்லுங்கள்...

    ஒருவர் தன் வாழ்நாளில் சொந்தமாக இடம் வாங்கி, வீடு கட்டி, அதில் நிரந்தரமாக வசிப்பது என்பது பெரிய விஷயமாக கருதப்படுகிறது. எல்லாருக்குமே அந்த கொடுப்பினை அமைந்து விடுவது இல்லை.

    லட்சக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் கூட நல்ல இடம் தேடி அலைவதைப் பார்த்திருப்பீர்கள். எனவே காணி நிலம் கிடைத்தாலும் அது கடவுள் கிருபையால் கிடைக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

    பெரும்பாலானவர்கள் அந்த காணி நிலம் கிடைப்பதற்கு கூட வாய்ப்போ, அறிகுறியோ இல்லையே என்று மிகவும் வருதப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

    அப்படிப்பட்டவர்கள் இனி கவலைப்பட தேவை இல்லை. அவர்களின் கவலையைப் போக்க காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் உள்ளார்.

    ஒருமுறை காணிப்பாக்கம் சென்று சுயம்பு விநாயகரை தரிசனம் செய்து உங்கள் உள்ளக்குமுறல்களை அவர் காலடியில் கொட்டி விட்டு வந்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் சுயம்பு விநாயகர் சும்மா இருக்க மாட்டார்.

    உங்கள் மீதுள்ள கிரக தோஷங்களை விரட்டியடித்து உங்கள் விக்கினங்களை விலக செய்து, மனதில் மகிழ்ச்சியை தருவார். அஷ்ட ஐஸ்வர்யங்களையும் உங்களை நோக்கி தேடி வரச் செய்வார்.

    அப்புறம் நீங்கள் காணி நிலம் மட்டுமல்ல, பல, பல காணி நிலங்களை வாங்கி குவிக்க முடியும். இது சுயம்பு விநாயகரை புகழ்ந்து எழுத வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதல்ல.

    காணிப்பாக்கம் தலத்துக்கு சாதாரணமாக வந்து சென்ற பலர் இன்று, தங்கள் சொந்த வாகனத்தில் வந்து செல்லும் அளவுக்கு வசதி வாய்ப்புகளை சுயம்பு விநாயகர் உயர்த்தி இருக்கிறார் என்று தேவஸ்தான அதிகாரிகள் ஆதாரங்களுடன் சொன்னதின் அடிப்படையில் இந்த குறிப்பு தரப்படுகிறது.

    எனவே காணி நிலம் இல்லையே, நிம்மதியாக தூங்க, தூங்கி, எழுந்திருக்க ஒரு வீடு இல்லையே என்று வருத்தப்படாதீர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது காணிப்பாக்கம் சென்று வாருங்கள். சுயம்பு விநாயகர் உங்களை உச்சத்துக்கு கொண்டு போவதை கண் கூடாகப் பார்ப்பீர்கள்.

    சுற்றுலாவாகவும் செல்லலாம்...

    சமீபகாலமாக முக்கிய கோவில்களுக்கு சென்று வருவதை ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் ஒரு சுற்றுலா போல மாற்றி விட்டனர். நமது கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இப்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் அடிக்கடி ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.

    மகன்களும், மகள்களும் வெளிநாடுகளில் செட்டில் ஆகி விட்ட நிலையில் பலருக்கும் ஆன்மீக சுற்றுலா ஒன்றுதான் பொழுது போக்குவதாகவும் அதே சமயத்தில் புண்ணியத்தையும் மன நிறைவையும் தருவதாக இருக்கிறது. இன்னும் சிலர் வாடகை கார் அல்லது சொந்த காரில் பழமையான ஆலயங்களை தேடிச் சென்று வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    மொத்தத்தில் கோவில்களை தேடி செல்லும் ஆன்மீக சுற்றுலாக்கள் அதிகரித்து விட்டது. இதை உணர்ந்தே தமிழக அரசின் சுற்றுலா கழகம் தினமும் ஆன்மீக சுற்றுலாக்களை நடத்தி வருகிறது.

    இந்த போட்டியில் தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களும் சேர்ந்து கொண்டு பல வகை ஆன்மீக சுற்றுலாக்களை நடத்துகின்றன. இத்தகைய ஆன்மீக சுற்றுலாவுக்கு மிக, மிக ஏற்ற இடமாக காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் தலம் உள்ளது.

    ஏனெனில் காணிப்பாக்கம் விநாயகர் தலத்தை சுற்றி காஞ்சிபுரம், வேலூர், திருப்பதி, சுருட்டப்பள்ளி, காளஹஸ்தி ஆகிய புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த புண்ணியத் தலங்களுக்கு மிக எளிதாக சென்று வரும் வகையில் திட்டமிட்டு சுற்றுலா பயணத்தை அமைத்துக் கொண்டால் விநாயகர், சிவன், பெருமாள், அம்பிகை, முருகன் ஆகியோர் தலங்களை ஒருங்கே தரிசனம் செய்து விட்டு வர முடியும்.

    சோளிங்கர் வழியாக ஆந்திரா மாநிலத்துக்குள் செல்லும் போது எல்லையில் மவுன குரு சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு முக்தி அடைந்த மவுனகுரு சுவாமிகளின் அருளை இந்த ஜீவ சமாதியில் சென்று தியானம் செய்தால் பெறலாம்.

    'இருந்தும் இல்லாமல் இரு' என்ற தத்துவத்தை உணர்த்தும் இந்த ஜீவசமாதி அழகுற அமைக்கப்பட்டுள்ளது. மவுன குரு சுவாமிகள் ஜீவசமாதிக்கு பின்புறத்தில் மகான்களின் விக்கிரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

    மற்றொரு பக்கத்தில் சங்கு- சக்கரத்தாரியாக பெருமாள் உள்ளார். திருப்பதி ஏழுமலையானைப் பார்த்தது போலவே உள்ளது. இங்கு பெருமாளை வழிபட்டால் திருப்பதியில் ஏழுமலையானை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்று கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளனர்.

    இந்த வளாகத்தின் மற்றொரு பகுதியில் மயிலை குருஜி சுந்தரராம் சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அங்கும் அமைதியாக அமர்ந்து தியானம் செய்து விட்டு வரலாம்.

    இந்த ஆன்மிக சுற்றுலா நிச்சயம் புண்ணியம் தருவதாக இருக்கும்.

    Next Story
    ×