search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அருள்மிகு மாசாணி அம்மன் ஆலையம்
    X

    அருள்மிகு மாசாணி அம்மன் ஆலையம்

    • மருத்துவச்சியோ ஏதோ கெடுதி நடப்பதற்கான அறிகுறி கனவாக கண்டது போல் திடுக்கிட்டு எழுந்தாள்.
    • மனைவி காளி தேவியின் அம்சம் ஆவார்.

    ஆனைமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இளம் கணவன் மனைவி வாழ்ந்து வந்தார்கள். இனிதே வாழ்ந்த இல்லாள் நிறைமாத கர்ப்பிணியானாள். ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பினால் பிரியமனமின்றி அவள் தன் தாய்வீடு செல்லாமல் கணவருடனே இருந்தாள்.

    பிள்ளை பேறுகாலம் நெருங்கி விட்டது. இடுப்பு வலி ஆரம்பித்தது. மனைவியின் வேதனையைக் கண்ட கணவன் மருத்துவச்சியை அழைத்து வர புறப்பட்டான். ஆனால் மனைவியை தனியாக விட்டுவிட்டு செல்வதற்கு மனமில்லை. துணைக்கு ஒருவரும் இல்லை.

    நன்றாக இருட்டி விட்டது. பகலிலே செல்வதற்கே அச்சமாக இருக்கும் அடர்ந்த காடு, திருடர்கள் துஷ்டர்கள் பயம் வேறு அதிகம். என்ன செய்வது என்று யோசித்தான். அவளுக்கோ பேறுகால வேதனை அதிகமானது.

    கணவனின் தவிப்பை புரிந்து கொண்ட அவள் கணவனை பார்த்து, இனியும் நான் இங்கிருப்பது சரியல்ல. என் தாய்வீடு இரண்டு கல் தொலைவில் உள்ளது. அந்த ஊரில் தெய்வீகத் தன்மையுடையவளும் தர்ம சிந்தனையும் கொண்ட ஒரு மருத்துவச்சி இருக்கிறாள் அவள் முக்காலம் உணர்ந்தவள். பின்வருவதை முன் சொல்லும் ஆற்றல் உடையவள். என்னை அங்கு அழைத்துச் செல்லுங்கள். நான் மெதுவாக நடந்து வருகிறேன் என்றாள்.

    அவள் சொல்வது அவனுக்கு சரி எனப்பட்டது. இருவரும் புறப்பட்டார்கள். மெதுவாக நடந்து ஒரு கல் தொலைவு சென்றார்கள். மை இருட்டாக இருந்தது. ஆந்தைகளின் அலறலும், கோட்டான்களின் சத்தமும் அச்சத்தை அதிகப்படுத்தியது. அவளுக்கோ பிரசவ வலி அதிகமானது.

    கால்கள் பின்னின் ஓரடி எடுத்து வைப்பதும் கடினமாக இருந்தது. அவன் கைதாங்கலாகப் பிடித்து கொண்டான். ஆனாலும் வேதனை அதிகமானதால் என்னால் இனி நடக்க முடியாது என்று உட்கார்ந்து விட்டாள். அவன் என்ன செய்வது என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தான். ஊரை நெருங்கி தான் விட்டார்கள். அதோ விளக்கொளி தெரிந்தது.

    ஆனால் அவளோ வேதனை தாங்க முடியாதபடி, என்னால் நடக்க முடியாது, நீங்கள் வரும் வரை நான் பத்திரமாக இருக்கிறேன், நீங்கள் சென்று வாருங்கள், என்று கணவனை அனுப்பி வைத்தாள்.

    அவனும் வேறு வழியின்றி மிகுந்த மனக்கஷ்டத்துடன் உன் விருப்பப்படியே சென்று வருகிறேன் நீ தைரியமாக இரு என்று கூறி விரைந்து வெளிச்சம் வந்த திசை நோக்கிச் சென்றான்.

    அங்கு சென்று விசாரித்து மருத்துவச்சியின் வீட்டுக் கதவை தட்டினான்.

    மருத்துவச்சியோ ஏதோ கெடுதி நடப்பதற்கான அறிகுறி கனவாக கண்டது போல் திடுக்கிட்டு எழுந்து கதவைத் திறந்தாள். அவன் தன் மனைவி பற்றி கூறி உதவிக்கு அவளை அழைத்தான். உடனே அவள் மருத்துவத்திற்கான பொருட்களை எடுத்துக் கொண்டு தயாரானாள்.

    அதற்குள் அக்கம் பக்கத்தில் விசாரித்து அந்த ஊர் நாட்டாமை, பூசாரி மற்றும் விவரமான சில ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தான்.

    அதற்குள் மருத்துவச்சியும் கதவை பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள். அனைவரையும் அழைத்துக் கொண்டு அவன் விரைந்து நடந்தான்.

    ஆனால் அவன் மனைவியை அங்கு காணவில்லை. அப்பொழுது கடவுளே இது என்ன சோதனை நான் கண்ட கனவு நிஜமாகியதே என்று மருத்துவச்சி கதறிக் கொண்டு ஓர் இடத்திற்கு ஓடினாள். அங்கே மிகவும் கோரமான காட்சியைக் கண்டார்கள். அவன் மனைவி இறந்து கிடந்தாள்.

    கதறி அழுத அவன் மருத்துவச்சியை நோக்கி தாயே என் மனைவியும் குழந்தையை இப்படி கோரமாக இறந்து கிடப்பதற்கும், நீங்கள் ஏதோ கனவு கண்டதாகச் சொன்னீர்களே அதற்கும் என்ன சம்பந்தம்? என்று வேதனையுடன் கேட்டான். இதைக் கேட்டதும் அந்த மருத்துவ மூதாட்டி தான் கண்ட கொடூரக் கனவு பற்றி கூறினாள்.

    உங்கள் மனைவி காளி தேவியின் அம்சம் ஆவார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், இந்த காட்டுப்பகுதியில் வந்த போது அரக்கன் ஒருவன் அவளை வழிமறித்தான். அந்த அரக்கனிடம் இருந்து தப்ப அவள் ஓடினாள். அப்போது ஓடும் வேகத்தில் அங்கு கிடந்த மாட்டுச்சாணியில் கால் வைத்து வழுக்கி விழுந்து விட்டாள். துரத்திக் கொண்டு வந்த வஞ்சகன் அவளைத் தொட முயன்றான்.

    காளிதேவியை, உலக ரட்சகி, ஜெகன் மாதா என்று தெரிந்தும் அவளின் கையைப் பிடித்தான். அவ்வளவுதான். மேகம் திரண்டு மின்னலடித்து மின்னல் தாக்கிய அவன் கண் குருடாக அலறிக் கொண்டு ஓடினான். என்ன நடந்தது? என்று உணரும் முன் அவள் கீழே சரிந்தாள்.

    கர்ப்பத்தில் இருந்த சிசுவும் உயிரற்று வெளியில் வந்தது. அவள் உடலிருந்து ஆவி ஜோதி ரூபமாகி வானளாவி நின்றது. அதில் கோடி சூரியப்பிரகாசமாய் ஒளிர்ந்தது. மேல் எழும்பிய ஜோதி, காளி போல் ஆக்ரோஷமாக சுழன்று அவனை பிடித்து இழுத்து நெஞ்சைப் பிளந்து கொண்டு வந்து அப்பெண்ணின் காலடியில் போட்டது. இப்படித்தான் நான் கனவு கண்டேன் என்று அந்த மருத்துவச்சி கூறினாள்.

    இதை கேட்ட கணவன் அழுது புலம்பினான். இந்த அடர்ந்த காட்டில் என் மனைவியை தனியே விட்டு இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டனே! தெய்வமே இது என்ன சோதனை, என் மனைவியையும் குழந்தையையும் இப்படி பறிகொடுத்துட்டேனே என்று கண்ணீர் விட்டான்.

    அங்கு கூடி இருந்தவர்கள் அதிர்ச்சியுற்று செய்வதறியாது திகைத்து நின்றார்கள். அப்பொழுது அவர்கள் எல்லோரையும் பார்த்து ஞானிக்கு நிகரான மருத்துவ முதாட்டி இறந்து போன தாயும் சேயும் சாதாரணமானவர்கள் அல்ல. இவர்கள் அம்மனின் அவதாரம். இவர்கள் சாதாரணமாக பிறக்கவில்லை.

    வானத்தில் இருந்து மண்ணிற்கு தேவதைகள் போல தேரில் வந்தவர்கள். விண்ணகத்திலுள்ள தேவர்களும் முனிவர்களும் பூமாரி பொழிவது என் அகக்கண்களுக்குத் தெரிகிறது. இவர்கள் அவதார நோக்கம் நிறைவேறியபடியால் மீண்டும் தெய்வமானார்கள் என்றாள்.

    மாட்டுச்சாணியில் வழுக்கி விழாமல் இருந்திருந்தால் வேறு ஏதாவது நடந்திருக்கலாம் என்று அங்கிருந்த நாட்டாமைக்காரர் கூறினார். அதற்கு மூதாட்டி, அய்யா அது அப்படி இல்லை இவளின் மானிடப் பிறவி எடுத்து இந்த சாணியை மிதித்தால் இது சாப விமோச்சனம் அடைந்தது என்று கூறினாள்.

    சாணிக்கு சாப விமோச்சனமா? அது எப்படி? என்று அந்த ஊர் பூசாரி கேட்க, மீண்டும் மருத்துவ மூதாட்டி ஒரு விளக்கம் அளித்தாள்.

    முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருபாற்கடலை கடைந்த போது அதில் இருந்து காமதேனு கற்பகவிருட்சம் போன்ற பல அரிய பொக்கிஷங்கள் கிடைத்தன.

    அதில் காமதேனுவையும், கற்பக விருட்சத்தையும், வெள்ளையானை (ஐராவதம்) ஆகியவற்றை தேவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதைக் கண்டு பொறுக்காத அசுரர்கள் காமதேனுவை கைப்பற்ற ஆசை கொண்டு அதை இழுத்துச் செல்ல முயன்றார்கள். இதை உணர்ந்த காமதேனு பார்வதி பரமேஸ்வரனை தியானித்து அடைக்கலம் வேண்டி சரணடைந்தது. அதற்கு இரங்கி பார்வதி பரமேஸ்வரரும் அஞ்சாதே என்று கூறி ஒரு நந்தவனத்தில் அடைக்கலம் கொடுத்தார்கள்.

    இதற்கிடையில் தேவர்கள் தங்கள் காமதேனுவை காணாமல் தேடி அலைந்தார்கள். முடிவில் பார்வதி பரமேஸ்வரனிடம் முறையிட எண்ணி தவம் இருந்தனர். இது கண்ட பார்வதி தேவியும், காமதேனுவைப் பார்த்து உன்னை அழைத்துச் செல்ல தேவர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூற அப்பொழுது காமதேனு அசுரர்கள் பிடித்து இழுத்த போது ஏற்பட்ட பயம் காரணமாக பார்வதி தேவியின் முன்தான் சாணம் போட்டதை இழிசெயலாக கருதி வருத்தப்பட்டது.

    அதற்கு பார்வதிதேவி, நீ செய்த இச்செயல் வருந்தத்தக்கதல்ல. இது நான் இந்த பூமியில் அவதாரம் எடுப்பதற்காகவே நடந்தது என்றாள்.

    காமதேனுவும் மகிழ்ந்து தேவியிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தது. தாயே ஈஸ்வரி பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல உன் அவதாரத்தோடு என் பெயரும், இந்த நந்தவனமும் புனிதமாக விளங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

    தேவியும் ஆகட்டும் என அருள்பாலித்து மேலும் காமதேனுவிடம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் எப்படி உருமாறி அவதாரமெடுத்து வந்தாலும் மக்கள் அடையாளம் கண்டு என்னை போற்றி வழிபடுகிறார்களோ, அதுபோல் உன் அம்சமாக வழிவரும் பசுக்களால் போடப்படும் சாணமும், கோமியமும் புனிதப் பொருளாக கருதப்படும்.

    தேவர்களும், மானுடர்களும் அவைகளை துஷ்ட நிவாரணியாக பூஜாதிகாரியங்களுக்குப் பயன்படுத்துவார்கள். உன் அம்சமாக பூமியில் விளங்கும் பசுக்களை கோமாதா என அனைவரும் வணங்குவார்கள் என்று ஆசீர்வதித்தாள்.

    காமதேனுவும் அன்னையின் அன்பான அருள்வாக்கினால் பயம் தெளிந்து மகிழ்ச்சியுடன் வணங்கி விடைபெற்றுச் சென்றது. காமதேனுவை தேவர்களிடம் கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியாகச் சொன்னாள்.

    இந்த காடே அந்த நந்தவனம். அம்பிகையின் அவதாரமான இந்த பெண் இங்கு கிடந்த புனிதமான சாணியில் வழுக்கி விழுந்து நமக்கெல்லாம் அடையாளம் காட்டி நாம் பூஜிக்கும் அம்மனாக அவதரித்துள்ளாள் என்றாள்.

    மேலும் இந்த பெண் பிறவியில் பிரியவிரதன் மகளாகப் பிறந்து அம்பிகையின் குழந்தையாக ஆட்கொள்ளப்பட்டாள் என்றும் மருத்துவ மூதாட்டி கூறினாள். அப்படியா அது என்ன கதை என்று அனைவரும் கேட்டனர். அதற்கும் மூதாட்டி விளக்கம் அளித்தனர். அப்பெண்ணின் கணவன் பிரியவிரதன் யோகமார்க்கமே சிறந்ததென்று இல்லறம் ஏற்காமல் வாழ்ந்து வந்தான். இது கண்ட பிரியவிரதனின் தந்தை மகனிடம் நீ இல்லறம் ஏற்காவிடில் உனக்கு பிதுர்க்கடன் செய்ய கூட புத்திரபேறு இல்லாமல் போய்விடுமே என்றான்.

    ஆனால் மகனோ திருமணத்தை மறுக்கவே பிரிய விரதனின் மனம் மாறியது. அவனுக்கு திருமணமானது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் புத்திர பாக்கியம் இல்லை.

    இதனால் கவலையடைந்த பிரியவிரதனும் அவன் மனைவி மாலதியும், புத்திர காமேஷ்டி யாகம் செய்து ஈஸ்வரியை தியானிக்க, தாயும் அருள் கனிந்தாள். மாலதி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியானாள்.

    அவளுக்கு பேறுகாலத்தின் போது தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்த சிசு, வானத்தை பார்த்த விழிகளுடன் மல்லாந்து இருந்து அது வெறித்துப் பார்த்தபடி உயிரற்றுக் கிடந்தது. இது கண்டு பெற்றோர் துடித்தார்கள்.

    அழுது புலம்பி அந்த ஆதிபராசக்தியிடம் முறையிட்டார்கள். குழந்தையை அம்மன் காலடியில் போட்டான் பிரியவிரதன். திருமணம் வேண்டாம் என்றிருந்த என் மனதை மாற்றி என்னை சம்சாரசாகரத்தில் வீழ்த்தி பாசவலைக்குள் போட்டாயே நான் என்ன பாவம் செய்தேன்? இந்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. என் உயிரையும் எடுத்துக்கொள் என புரண்டு அழுதான்.

    கருணை உள்ளம் கொண்ட சக்திதேவி மனம் இரங்கி ஜோதி ரூபவதியாக காட்சியளித்தாள். பிரிய விரதா மனம் கலங்காதே. இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் இல்லறம். இக்குழந்தை என்னுடைய அம்சமாக உனக்கு வந்து பிறந்துள்ளது. என் அருளால் இது உயிர்பெறும். உனக்கு நீ விரும்பியது போல் ஆண் குழந்தை பிறக்கும்.

    அதுவரை இப்பெண் குழந்தையை அன்போடு வளர்த்துவா. குறிப்பிட்ட காலத்தில் அவள் என்னோடு ஐக்கியமாவாள். பிறகு காமதேனுவின் வேண்டுகோளுக்கேற்ப மறுபடியும் என் அம்சமாக தர்மத்தை காக்க இப்பூமியில் அவதரிப்பாள் என கூறி அருள்புரிந்தாள்.

    அதன்படி மாலதியின் குழந்தையாக அவதரித்து இன்று மண்ணில் துஷ்டனை சம்ஹாரம் செய்து தர்மத்தை காக்கும் பொருட்டு காமதேனுவின் மாட்டுச்சாணத்தில் வழுக்கி விழுந்து தெய்வமானாள்.

    இவள் அன்னை பராசக்தியின் அவதாரம். மக்கள் குறை தீர்க்கும் அருள் உடையவளாகவும், பிணி தீர்க்கும் மருந்தாகவும் வையகம் போற்றும் மாபெரும் வடிவாகவும், வடிவாம்பிகையாகவும், நீதி வழங்கும் துலாபாரமாகவும் விளங்குவாள் என கூறினாள்.

    இது கேட்டு அங்கு கூடி இருந்தவர்கள் ஆறுதல் அடைந்தார்கள். அப்பெண்ணின் கணவனும் சற்று மனதை தேற்றிக் கொண்டு, அவள் தெய்வப்பிறவி உலகை ரட்சிக்க வந்தவள் என்று எண்ணி மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.

    விதிக்குட்பட்டதுதான் மனிதப்பிறவி தெய்வமே மனிதன் அவதாரம் எடுத்தாலும் விதிவசத்திற்குற்பட்டு மனித அவஸ்தை பட்டுத்தான் தீர வேண்டும். அதன்படி இப்பொழுது அக்கிரமத்தையும், அதர்மத்தையும் செய்து வந்த இந்த கொடிய அரக்கனை வேரறுத்து சம்ஹாரம் செய்தாள்.

    இவள் பராசக்தியே. இப்பெண் தெய்வத்தை மாதர்குலமே போற்றிக் கொண்டாடும். நாம் அனைவரும் இந்த மாபெரும் சக்தியைத் துதித்து வணங்குவோம் என அனைவரும் கைதொழுதனர். அம்மனுக்குரிய மஞ்சள் பட்டாடை அணிவித்து சமாதானப்படுத்தினார்கள்.

    அனைவருக்கும் அருள்புரியும் பொருட்டு பராசக்தி தேவி, தியானம், ஜெபம், நிஷ்டை சமாதி முதலிய நான்கு நிலைகளில் ஒன்றான சமாதி நிலையில் வைத்து மண்மேடையாக்கினார்கள். அதன் மேல் அம்மன் உருவத்தை மண்ணால் செய்து வைத்துவிட்டு வந்தார்கள்.

    ஆனால் மக்கள் அந்த பக்கம் செல்லவில்லை. சமாதி என்று நினைத்து பயந்தார்கள். இவ்வாறிருக்க ஒரு நள்ளிரவில் சாமக்கோடாங்கி ஒருவன் பூஜை நடத்த மயானத்திற்கு சென்றான். அப்பொழுது அந்த அம்மன் சமாதியான இல்லத்தில் ஓர் அரிய காட்சியைக் கண்டான். மெய்சிலிர்த்தான்.

    தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், காளி பைரவியும் அங்கு வழிபாடு செய்வதை பார்த்து அந்த அம்மனின் மகாசக்தியை ஊர் மக்களுக்கு சொன்னான். பிறகு ஊர்க்காரர்கள் அனைவரும் அங்கு சென்று வழிபட ஆரம்பித்தார்கள். நாளடைவில் அது மாசாணி தலமாக மாறி புகழ்பெற்றது.

    Next Story
    ×