search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடி மாதம் ஆண்டவனுக்கே அர்ப்பணம்
    X

    ஆடி மாதம் ஆண்டவனுக்கே அர்ப்பணம்

    • ஆடி மாதமானது பூமாதேவி அவதரித்த மாதமாகும்.
    • ஆடிப்பூரத்தில் தேவியார் பக்குவமடைந்ததாகப் புராணம் கூறுகிறது.

    சூரிய பகவான் தை மாதத்திலும் ஆடி மாதத்திலும் தன் ரதத்தை திசை மாற்றிச் செலுத்துகிறான். சூரியன் தை மாதத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் போது உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. ஆடி மாதம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் போது தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது. இந்த ஆடி மாதப் புண்ணிய காலத்தில் புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் விலகும் என்பர். எனினும் ஆடி மாத முதல் மூன்று நாட்கள் நீராடக்கூடாது என்றும் கூறியுள்ளனர். அந்த முதல் மூன்று நாட்கள் 'நதி ரசஜ்வாலா'' எனப்படும். இந்த மூன்று நாட்கள் நதிகளுக்குரிய தீட்டு நாட்களாகும்.

    ஜீவநதியான கங்கையில் எப்பொழுதும் நீர் ஓடிக் கொண்டிருப்பதால் ஆடி மாதம் புதிதாக நீர் வரும் வாய்ப்பு இல்லை. மற்ற ஆறுகளில் பழங்காலத்தில் ஆடி மாதத்தில் புது நீர் வரும். அந்த நீர் பெரும்பாலும் கலங்கலாகவும் அழுக்காகவும் இருக்கும். எனவே ஆடி முதல் தேதியை ஒட்டி வரும் புதிய நீர் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால், அந்தச் சமயத்தில் நதிகளில் குளிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது. ஆனால், கடல், கோவில்களில் உள்ள புனிதக் குளங்களில் நீராடலாம்.

    ஆடி மாதமானது பூமாதேவி அவதரித்த மாதமாகும். மேலும், ஆடி மாதத்தில்தான் பார்வதிதேவி ஒரு கல்பத்தில் அவதாரம் செய்தாள் என்று புராணம் கூறுகிறது. ஆடிப்பூர நட்சத்திரத்தில்தான், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் துளசி வனத்தில் கோதை ஆண்டாள் அவதரித்தாள். ஒவ்வொரு ஆடி மாத வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை பெண்களுக்கு மிகச் சிறப்பான நாள். இந்த நாளில் அம்மனை வழிபடுவது குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும். ஆடிப்பூரத்தில் தேவியார் பக்குவமடைந்ததாகப் புராணம் கூறுகிறது. அதனால் அன்று அம்மன் கோவில்களில் வளைக்காப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    இந்நாளில் அம்பாளுக்கு கண்ணாடி வளையல்களை சமர்ப்பித்து வழிபட்டால் சுமங்கலி பாக்கியம் நீடிக்கும்; கன்னிப் பெண்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி மாதத்தின் சிகரமாகத் திகழ்வது ஆடித்தபசு விழா. நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆடித்தபசு விழா பத்து நாட்கள் நடை பெறும். தவமிருந்த அன்னைக்கு இறைவன் சங்கர- நாராயண ராகக் காட்சி தந்த நாள் ஆடி பௌர்ணமி நாளாகும். காவேரிக் கரையோர மக்கள் ஆடி 18 அன்று காவேரி அன்னையை வழிபாடு செய்வார்கள். காவேரி அம்மனுக்கு இந்தச் சமயத்தில் மசக்கை ஏற்பட்டிருப்பதாக ஐதீகம்.

    அதனால் சித்திரான்னங்களான புளியஞ் சாதம், தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், பாயசம் மற்றும் கலவைச் சாதம், பழம், வெற்றிலைப் பாக்கு, காதோலை, கருகமணி என்று காவேரி நதிக்குப் படைத்து, சிறிதளவு ஓடும் காவேரி நதிக்கு சமர்ப்பிப்பார்கள். காவேரி நதியை வழிபடும்போது, மஞ்சள் தடவிய நூலினை வைத்துப் படைத்து, பிறகு பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது மணிக்கட்டிலும் அணிந்துகொள்வது வழக்கம்.

    ஆடி 18 அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கநாதர் காவேரித் தாயாருக்கு மரியாதை செய்வார். காலையில் சுமார் பத்து மணிக்கு ஸ்ரீரங்கம் தென்புறத்தில் உள்ள அம்மா மண்டபம் காவேரிப் படித்துறைக்கு எழுந்தருள்வார். பிறகு மாலையில் கோவிலிலிருந்து யானையின்மேல் மங்கலப் பொருட்களான புடவை, ரவிக்கைத் துணி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பழம், தாம்பூலம், கருகமணி ஆகியவற்றைக் கொண்டு வருவார்கள்.

    அந்த மங்கலப் பொருட்களை பெருமாள்முன் சமர்ப்பித்து பூஜைசெய்து, பின் காவேரித் தாயாருக்கு பூஜை செய்து காவேரி நதியில் சமர்ப்பிப் பார்கள். இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும், பெருமாள், வெளி ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, அங்கு ஸ்ரீஆண்டாளின் மாலையை மாற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்வார். இந்த விழாவில் கலந்துகொண்டால் வாழ்க்கையில் என்றும் வசந்தம் வீசும் என்பர். முருகப் பெருமானுக்கும் ஆடி மாதம் உகந்த மாதமாகும். ஆடி கிருத்திகை அன்று முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்துக் கோவில்களிலும் விழாக் கோலம் காணும்.

    ஆடி மாதப் பௌர்ணமி நாளில் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்ததாகக் கூறுவர். அன்று வைணவத் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடி மாத சுக்ல தசமியில் திக்வேதா விரதம் கடைப்பிடித்து, திக்தேவதைகளை அந்தத் திசைகளில் வழிபட்டால் நினைத்தது தடையின்றி நடைபெறும்.

    ஆடி மாத வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை துளசி பூஜை செய்து வந்தால் சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடுவதுடன் வளமான வாழ்வு கிட்டும். ஆடி மாத சுக்ல துவாதசியில் மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வ வளம் பெருகும். மேலும் ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று அன்னதானம் செய்தால் புண்ணியம் கூடுவதுடன், பசித்த வேளைக்கு உணவு தேடிவரும் என்பர். கருடபஞ்சமி, நாகபஞ்சமி ஆகியவையும் ஆடி மாதத்திற்கு சிறப்பினைக் கூட்டுகின்றன. ஆடி மாத சிறப்பு நாட்களில் விரதம் கடைப்பிடித்து இறைவழிபாட்டில் ஈடுபட்டால், வளமான வாழ்வு என்றும் நிரந்தரம்!

    Next Story
    ×