search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த கேரட் கோசுமல்லி
    X

    சத்து நிறைந்த கேரட் கோசுமல்லி

    பயத்தம் பருப்பையும், பச்சை காய்கறிகளையும், அப்படியே பச்சையாக கலந்து சாலட் போல் செய்யப்படும் கோசுமல்லி என்கிற கோசும்பரி உடல் நலத்திற்கும் உகந்தது.
    கோசுமல்லி அல்லது "கோசும்பரி" என்று அழைக்கப்படும் இது தென்னிந்திய திருமணம், விசேஷ விருந்துகளில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஊறவைத்த பயத்தம் பருப்பையும், பச்சை காய்கறிகளையும், அப்படியே பச்சையாக கலந்து சாலட் போல் பரிமாறுவார்கள்.

    செய்வது மிகவும் சுலபம். உடல் நலத்திற்கும் உகந்தது. இதை காரட், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் செய்வார்கள். எல்லாக் காய்களையும் சேர்த்தோ அல்லது ஒரே காயை பயன்படுத்தியோ செய்யலாம். ஆனால் பெரும்பாலும் விருந்துகளில், கேரட் கோசுமல்லிதான் இடம் பெறும்.

    தேவையானப்பொருட்கள் :


    கேரட் (நடுத்தர அளவு) - 2
    பயத்தம் பருப்பு - 1/2 கப்
    பச்சை மாங்காய் (துருவியது அல்லது சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    பச்சை கொத்துமல்லி தழை - சிறிது
    தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவைக்கேற்றவாறு



    செய்முறை :

    பயத்தம் பருப்பை ஒரு மணி நேரம் தண்னீரில் ஊற வைக்கவும்.

    கேரட்டைக் கழுவி, தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும். அல்லது மெல்லிய சிறு துண்டுகளாக் (தீக்குச்சி போல்) நறுக்கிக் கொள்ளவும்.

    கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விடவும். (விதையை நீக்கி விட்டால், காரம் குறைந்து விடும். மிளகாயையும் கூட சாப்பிடலாம்).

    ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, மாங்காய்த் துண்டுகள், உப்பு போட்டுக் கலக்கவும்.

    தாளிக்கும் கரண்டி அல்லது ஒரு சிறு வாணலியை அடுப்பிலேற்றி, அதில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, கேரட் கலவையில் கொட்டவும்.

    ஊற வைத்துள்ள பருப்பை, தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, கேரட்டுடன் சேர்க்கவும்.

    அத்துடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×