search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனந்த விரதத்தை பற்றி அனந்தனே சொன்ன திருக்கதை
    X

    அனந்த விரதத்தை பற்றி அனந்தனே சொன்ன திருக்கதை

    அனந்த விரதத்தைப் பற்றி அனந்தனே சொன்ன அதியற்புத திருக்கதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்..
    கிருத யுகத்தில், வேத சாஸ்திரங்களில் கரை கண்டவரும் வசிஷ்ட கோத்திரத்தில் பிறந்தவருமான சுமந்தன், தன் மனைவி தீட்சா தேவியுடன் மனமொத்து நல்வாழ்வு நடத்தி வந்தார். அவர்களுக்கு சீலை என்ற மகள் இருந்தாள். சீலை பிறந்த கொஞ்ச நாள்களில் தீட்சா தேவி மரணமடைந்தாள்.
    ‘மனைவி இல்லாவிடில் நாம் செய்யும் தர்ம - கர்ம அனுஷ்டானங்களுக்குக் குறை வருமே!’ என்று எண்ணிய சுமந்தன், கர்க்கசை என்பவளை மறுமணம் செய்தார். கர்க்கசை கடினமான மனம் கொண்டவள். மூத்தாள் மகளான சீலையிடம், மறந்து போய்க்கூட அன்பு செலுத்தாதவள். ஆனால், சீலையோ பெயருக்குத் தகுந்தாற்போல, மிகுந்த சீலத்துடன் விளங்கினாள்.

    சீலைக்குத் திருமணப் பருவம் வந்ததும் கௌண்டின்யர் என்பவருக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தார் சுமந்தன். கல்யாணம் முடிந்ததும் சுமந்தன், ‘மாப்பிள்ளைக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் கர்க்கசையிடம், ‘‘மாப்பிள்ளைக்கு என்ன கொடுக்கலாம்?” என்று கேட்டார். அவளோ திடீரென்று எழுந்து அறைக்குள் நுழைந்து கொண்டு, ‘‘இங்கு ஒன்றும் இல்லை. போங்கள்” என்று கத்தியவாறு கதவைச் சாத்திக் கொண்டாள்.

    வேறு வழியற்ற நிலையில் சுமந்தன் கொஞ்சம் கோதுமை மாவை மாப்பிள்ளையிடம் தந்து, ``இது வழியில் உபயோகப்படும். வைத்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி மணமக்களை வழியனுப்பி வைத்தார்.

    கௌண்டியன்யர் சீலையுடன் தனது ஆசிரமத்துக்குக் கிளம்பினார். சூரிய உதய காலம். வழிப்பயணத்தைச் சற்று நிறுத்திய கௌண்டின்யர் அங்கிருந்த ஒரு குளத்தில், சந்தியாவந்தனம் முதலான அனுஷ்டானங்களைச் செய்வதற்காகப் போனார்.

    அன்று அனந்த விரத தினமானதால் பெண்கள் பலர், சிவப்பு நிற ஆடை அணிந்து, பய பக்தியுடன் தனித்தனியாக அனந்த பத்மநாப ஸ்வாமியை பூஜை செய்து கொண்டிருந்தனர். மெள்ள அவர்களை நெருங்கிய சீலை, “நீங்கள் என்ன விரதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? இதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்றாள்.

    அந்தப் பெண்களும் அனந்த விரதம் குறித்த நியதிகளை வழிமுறைகளை விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.

    உடனே சீலை அங்கேயே நீராடி, தகப்பனார் தந்த கோதுமை மாவைப் பயன்படுத்தி, அங்கிருந்த பெண்களின் உதவியுடன் விரதம் தொடங்கி நோன்புக் கயிற்றைக் கட்டிக்கொண்டு முறைப்படி விரதத்தை முடித்தான். அதன்பின் மனத்திருப்தியுடன் கணவருடன் அவரது ஆசிரமத்தை அடைந்தாள்.

    அனந்த விரதம் அளவற்ற ஐஸ்வர்யங்களைச் சீலைக்கு அளித்தது. நவரத்தினங்களும் தங்கமும் அவள் உடலை அலங்கரித்தன. வருடம் தவறாமல் சீலை, அனந்த விரதம் அனுஷ்டித்தாள். அனந்தமான பலன்களுடன் ஆனந்தமான வாழ்வை அனுபவித்தாள்.

    செல்வ மயமான வாழ்வு கௌண்டியன்யரின் சிந்தனையை மாற்றியது போலும். ஒருநாள் சீலையின் கையில் கட்டப்பட்டு இருந்த நோன்புக் கயிற்றைக் கண்ட கௌண்டியன்யர், அந்த நோன்புக் கயிற்றையும் அவளையும் அவமானப்படுத்தினார்.

    சீலை பதறினாள். ‘‘ஸ்வாமி! இது கயிறு அல்ல. அனந்த பத்மநாப ஸ்வாமியையே நான் தரித்து இருக்கிறேன். அந்த ஸ்வாமியின் அனுக்கிரகத்தால் அல்லவா, இவ்வளவு செல்வங்களும் நமக்கு வாய்த்தன” என்றாள். ஆனால், அவள் சொன்னவற்றை கௌண்டின்யர் செவிமடுக்கவில்லை. மிகுந்த கோபத்துடன், மனைவியின் கையிலிருந்த கயிற்றை இழுத்து அறுத்து, எரியும் தீயில் போட்டார்.

    சீலை துடித்தாள். ``அந்த சரடு (கயிறு) அனந்தனின் வடிவம் அல்லவா? அது எரிந்தால் நமது குலமும் வீடும் எரியுமே” என்று கூவியபடி தீயில் இருந்த சரடை எடுத்து அது எரிவதற்குள் பாலில் போட்டாள்.

    நாள்கள் கடந்தன. கௌண்டின்யரின் செல்வம் குறையத் தொடங்கியது. அவரிடம் இருந்த பசுக்களை யாரோ திருடிச் சென்றனர். அவரது வீடு தீப்பிடித்துச் சாம்பலானது. உறவினர்களுடன் சண்டை ஏற்பட்டது. மற்ற எவரும் கௌண்டின்யரிடம் பேசாத ஒரு நிலை உண்டானது.

     கௌண்டின்யர் துயரக் கடலில் மூழ்கினார். மனைவியை அலட்சியப்படுத்தி மாதவனை அவமதித்தால் வந்த வினை இது! என்பதை உணர்ந்ததால், ‘`அனந்தா.. அனந்தா... எங்கே போனாய்? என்னை கைவிட்டு விடாதே” என்று கத்தியபடி காட்டுக்குள் ஓடினார். கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம், ``அனந்தனைப் பார்த்தீர்களா?” எனக் கேட்டார்.

    அவர் போகும் வழியில், பழங்கள் நிறைந்த மாமரம் ஒன்று இருந்தது. “மாமரமே! அனந்தனைப் பார்த்தாயா?” என்று கேட்டார். “இல்லை!” என்று பதில் வந்தது. கொஞ்ச தூரம் போனதும், ஒரு பசு மாட்டைப் பார்த்தார். ஏராளமாகப் புல் இருந்தும் அதை மேயாமல் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தது அந்த பசு. அதனிடமும், “அனந்தனைப் பார்த்தாயா?” என கௌண்டின்யர் கேட்க, “இல்லை!” என்ற பதிலே வந்தது. இதேபோல் தான் பார்த்த காளை, யானை ஆகியவற்றிடமும் இதே கேள்வி கேட்டு இதே பதில் பெற்றார் அவர்.

    கௌண்டின்யரின் மனம் சோர்வுற்றது. உடல் தளர்ந்தது. நாக்கு உலர்ந்தது. “அனந்தா! அனந்தா!'' என்று கதறினார். அப்போது அவர் முன்னால் தரிசனம் தந்த ஸ்வாமி ஐஸ்வர்யம், தர்ம புத்தி, வைகுண்ட பிராப்தி ஆகிய மூன்று வரங்கள் தந்தார்.

    ஸ்வாமியைத் துதித்து வணங்கிய கௌண்டின்யர், தான் வழியில் கண்ட மாமரம் மற்றும் விலங்குகள் குறித்துக் கேட்டார்.

    “நீ பார்த்த மாமரம், போன பிறவியில் சிறந்த ஒரு பிராமண வித்வான். மாணவர்கள் பலர் வேண்டிக்கேட்டும் கர்வம்பிடித்த அவர், தான் கற்ற கல்வியை எவருக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை. அதனால் மரம் ஆனார். அடுத்தது பசு, போன பிறவியில் அது நற்குலத்தில் உதித்த பணக்காரன். யாருக்கும் ஒரு பிடி அன்னம்கூட தானம் செய்யாததால், அவனே பசு மாடாகப் பிறந்துள்ளான். இந்தப் பிறப்பில் புல் இருந்தாலும் மேய முடியாமல் அலைகிறான்.

    அடுத்தது காளை. அது போன பிறவியில் கர்வமுள்ள ஒரு அரசனாக இருந்தது. விளையாத (களர்) பூமியை தானம் செய்த பாவத்தால், அவன் இப்போது காளையாகத் திரிகிறான். அடுத்தது யானை. அந்தணனாக இருந்த ஒருவன், தான் செய்த தர்மத்தை விலை பேசி விற்றுப் பணம் பெற்றதால் இப்படி யானையாகப் பிறந்திருக்கிறான்!” என்று விவரித்த ஸ்வாமி அங்கிருந்து மறைந்தார். மனம் மாறிய கௌண்டின்யர் வீடு திரும்பினார். தன் மனைவி சீலையுடன் சேர்ந்து, அனந்த விரதம் செய்து, இழந்த செல்வங்களைப் பெற்று மங்கல வாழ்வு வாழ்ந்தார்.
    Next Story
    ×