search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்ததை படத்தில் காணலாம்.
    X
    தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்ததை படத்தில் காணலாம்.

    இராஜாவூர் தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல வரலாறு

    இராஜாவூர் தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தில் சிறப்புற்றுத் திகழும் தூய மிக்கேல் அதிதூதர் குருசடியில் பலவகை நோயாளிகள் தங்கள் பிணிகள் நீங்கி நலம் பெற நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கின்றனர்.
    முத்தமிழும் முக்கடலும் முத்தமிடும் குமரி மண்ணில் நாகர்கோவிலுக்கு கிழக்கே 15 கிலோ மீட்டர் தூரத்தில் சுசீந்திரம், தோவாளை ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது இராஜாவூர். கி.பி. 1542-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடி வந்திறங்கி 1545 வரை கிழக்குக் கடற்கரை, குமரிக் கடற்கரை மற்றும் திருவிதாங்கூர் கடற்கரைப் பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திகளைப் போதித்து கிறிஸ்தவ மறையை காலூன்றச் செய்த தூய பிரான்சிஸ் சவேரியாரால் மனந்திருப்பப்பட்ட கிறிஸ்தவர்களில் பலர் பல ஊர்களிலிருந்தும் பிழைப்புத் தேடி இராஜாவூருக்கு வந்து குடியேறியதாக வரலாறு உள்ளது.

    கி.பி. 18-ம் நூற்றாண்டு முதலே இராஜாவூர் இறைமக்கள் தூய மிக்கேல் அதிதூதருக்குச் சிறியதோர் ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்துள்ளனர். கி.பி. 1919-ம் ஆண்டு கொல்லம் ஆயர் மேதகு பென்சிகர் ஆண்டகை உதவியுடன் ஆலயம் பெரிதாகக் கட்டப்பட்டு, குருகுல முதன்மைதந்தையால் அர்ச்சிக்கப்பட்டது. 1926-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் நாள் இராஜாவூர் தனி பங்காகச் சிறப்பு பெற்றது.

    தற்போதைய அழகுறு ஆலயம் 8-12-1991 அன்று கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் தர்மராஜால் அடிக்கல் நாட்டப்பட்டு, ஜூபிலி ஆண்டு 2000-ம் மே மாதம் 6-ம் நாள் அர்ச்சிக்கப்பட்டுள்ளது. ஜூபிலி ஆண்டின் தொடக்கத்தில் கோட்டாறு ஆயர் லியோன் தர்மராஜ் கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள ஏழு திருத்தலங்களில் ஒன்றாக இராஜாவூரையும் அறிவித்துள்ளார்கள். இவற்றுள் தனிச்சிறப்புப் பெற்று விளங்குவது இராஜாவூர் தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலமே.

    இத்திருத்தலத்தில் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்டோருக்கு நோயிலிருந்து நற்சுகம், பொல்லாத நோய்களின் சொல்லொணா தொல்லைகளிலிருந்து விடுதலை, மன அமைதியைக் கெடுத்து குடும்பத்தை இருகூறாக்கும் மனநோயிலிருந்து மகிழ்ச்சிகரமான மாற்றம், குடும்பங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் பலவகைப் பிணிகள், பிரச்சினைகளுக்குப் பரிகாரத் தீர்வு ஆகிய புதுமைகள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன.

    தூய மிக்கேல் அதிதூதரின் அருள்நாடி குமரிமாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் பக்தர்கள் தினமும் இராஜாவூர் வந்து, செல்கின்றனர். இத்திருத்தலத்தில் சிறப்புற்றுத் திகழும் தூய மிக்கேல் அதிதூதர் குருசடியில் பலவகை நோயாளிகள் தங்கள் பிணிகள் நீங்கி நலம் பெற நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கின்றனர்.

    சனிக்கிழமைதோறும் மாலை 5 மணிக்கு நடைபெறும் நவநாள் திருப்பலியிலும், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நவநாள் மற்றும் சிறப்பு நற்கருணை ஆசிர்வாதத்திலும், 11 மணிக்கு தூய மிக்கேல் அதிதூதர் குருசடியில் திருப்பயணிகளால் நடத்தப்படும் சிறப்பு செப வழிபாட்டிலும் கலந்துகொள்ள பல ஊர்களிலிருந்தும் மக்கள் விழாக் கூட்டமெனத்திரண்டு வந்து, நன்மைகள் பெற்றுச் செல்கின்றனர். சனிக்கிழமைகளில் சிறப்பு பஸ்களும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் இத்திருத்தலத்தின் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவில் எண்ணற்ற மக்கள் கலந்துகொண்டு உடல், உள்ள நலம்பெற்றுச் செல்கின்றனர். அனைத்துச் சமயங்களின் சங்கமாக நம்பிக்கையில் அணிதிரளும் பக்தர்கள் அடைகின்ற அற்புதங்கள் ஆச்சரியத்துக்குரியவையாகும்.

    அன்றியும் நோயுற்றோரைப் பராமரிக்க மனநோயாளிகளுக்குச் சிறப்பு மனநல மருத்துவ உதவி முதலியவையும் இத்திருத்தலத்தில் அமைந்துள்ளன. ஏழைகள் மற்றும் நோயாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. பங்கின் வளர்ச்சிக்காக பங்கு அருட்பணிப்பேரவை, பங்கு நிதிக்குழு, 21 அன்பியங்கள், பல்வேறு பக்த சபைகள் மற்றும் இயக்கங்கள் பணியாற்றி வருகின்றன. இத்திருத்தலத்திற்கு நீங்களும் வந்து இறையாசீர் பெற்றுச் செல்ல உங்களை அன்புடன் அழைக்கிறோம். இறை ஆசீர் உங்களுடன் இருப்பதாக!

    பங்குத்தந்தை, பங்குப் பேரவை மற்றும் பங்கு இறைமக்கள்.
    Next Story
    ×