search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஸ்ரீ பிரியா காதல் திருமணம்: லதாவின் தம்பியை மணந்தார்
    X

    ஸ்ரீ பிரியா காதல் திருமணம்: லதாவின் தம்பியை மணந்தார்

    நடிகை ஸ்ரீபிரியா, நடிகை லதாவின் தம்பி ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    நடிகை ஸ்ரீபிரியா, நடிகை லதாவின் தம்பி ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    ராஜ்குமாரும் நடிகர் ஆவார். "காஷ்மீர் காதலி'' உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

    ஸ்ரீபிரியா -ராஜ்குமார் காதல் திருமணத்துக்கு, இரு குடும்பத்தினரின் சம்மதத்தை பெறச் செய்வதில் முக்கிய பங்கு எடுத்துக் கொண்டவர் நடிகை ராதிகாவின் தாயாரான கீதா.

    இலங்கையைச் சேர்ந்த கீதா, தமிழ்நாட்டுக்கு வந்து நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவியானார். ராதிகா பிறந்த நேரத்தில் மைலாப்பூர் வாரன் ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். ஸ்ரீபிரியாவின் தாயார் அந்த குடியிருப்புக்கு சொந்தக்காரர்.

    அடிக்கடி தன் சொந்த பூமியான இலங்கைக்கு சென்றுவந்த கீதா, தன் பிள்ளைகளுக்கு புது டிரெஸ் எடுத்து வருவார். அப்போது ஸ்ரீபிரியாவுக்கும் அவர் அக்காவுக்கும்கூட புதிய துணிகள் எடுத்து கொடுத்தார். இப்படி ஒரு குடும்பமாய் பழக நேர்ந்த அந்த நாட்களை நினைவு கூர்ந்தார், ஸ்ரீபிரியா.

    "ராதிகா பிறந்திருந்த நேரத்தில் எனக்கு 3 வயது. இந்த வகையில் எனக்கும் ராதிகாவுக்கும் 3 வயது வித்தியாசம். இந்த வகையில் நான் வளர்ந்த அதே இடத்தில்தான் ராதிகாவும் வளர்ந்தார். சிறுவயதிலேயே நாங்கள் நல்ல தோழிகளாக இருந்தோம். எங்கள் நட்பு பிரிக்க முடியாமல் இறுகிய நேரத்தில் கீதாம்மா மறுபடியும் குடும்பத்துடன் இலங்கைக்கு போய்விட்டார்கள். ராதிகா என்னைப் பிரிந்த இழப்பு, என் சின்ன வயதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

    நானும் வளர்ந்து நடிக்க வந்தேன். படங்களும் `ஹிட்'டாகி வளர்ந்த நிலையில், "ஆட்டுக்கார அலமேலு'' படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது டான்ஸ் மாஸ்டர் புலிïர் சரோஜா என்னிடம், "ராதிகான்னு ஒரு புதுப்பொண்ணு இலங்கையில் இருந்து வந்திருக்கு. இப்ப பாரதிராஜாவின் "கிழக்கே போகும் ரெயில்'' படத்துல நடிச்சிக்கிட்டிருக்கு. அந்தப்படத்தில் அவர் பாடற "பூவரசம்பூ பூத்தாச்சு'' பாட்டுக்கு நான்தான் மாஸ்டர்'' என்றார். அப்போதே என் சிறு வயதுத்தோழி மறுபடியும் கிடைத்து விட்ட சந்தோஷத்தை எனக்குள் உணர்ந்தேன்.

    "என் தங்கை''

    மறுபடி எங்கள் குடும்பங்கள் கைகோர்த்தபோது முன்பிருந்த அதே அன்பு மீண்டும் நிரந்தரமாகியது.

    "ராதிகா என் தங்கச்சி'' என்று நான் சொல்லிக் கொள்கிற அளவுக்கு நாங்கள் ஒரே குடும்பம் மாதிரி ஆனோம்.

    ராஜ்குமாரை (கணவர்) நான் விரும்பிய நேரத்தில் எங்கள் வீட்டில் ராஜ்குமார் பற்றி நல்லவிதமாய் சொல்லி எங்கள் காதலை திருமணம் வரை கொண்டு வந்தவர் கீதாம்மாதான்.

    எனக்கு திருமணமாகி 6-வது மாதத்தில் அபார்ஷன் ஆனது. முதல் குழந்தை இப்படி ஆகிவிட்ட ஒரு தாய்மையின் வேதனையை அப்போது அனுபவித்தேன். இந்த சமயத்தில் ராதிகாவின் தம்பி மோகனின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. பிறந்த அந்தக் குழந்தையை குளிக்க வைத்து கையில் வாங்கிய கீதாம்மா அதைக் கொண்டு வந்து என் கையில் கொடுத்தார். "இதே மாதிரி ஒரு குழந்தை அடுத்த வருஷம் இதே நேரம் உன் கையிலும் இருக்கும்'' என்று `அருள் வாக்கு' மாதிரி சொன்னார்.

    அருள்வாக்கு என்று ஏன் சொன்னேன் என்றால், அவர் சொன்னதுபோலவே நடந்தது. ஒரே வருடத்திற்குள் என் மகள் சிநேகா பிறந்து என் தாய்மையை அர்த்தமுள்ளதாக்கினாள்.

    குழந்தையை இழந்த தாயிடம் அந்த மாதிரி சமயங்களில் சென்டிமென்டாக யாருமே தங்கள் வீட்டு குழந்தையை கொடுக்கமாட்டார்கள். ஆனால் அந்த மாதிரியான தடைகளையெல்லாம் எண்ணிக் கொள்ளாமல் தன் பேரக்குழந்தையை மகனிடம் கொடுப்பதற்கு முன்பு என்னிடம் கொடுத்து வாழ்த்தினாரே, அந்த அன்பு யாருக்கு வரும்? இப்போதும் எங்கள் இரு குடும்பத்தினரிடையே அன்பு அப்படியே நீடிக்கிறது.''

    நெகிழ்ச்சியுடன் சொன்னார், ஸ்ரீபிரியா.

    சினிமாவில் நடித்து புகழ் பெற்ற நிலையில், திருமணத்துக்குப் பின் 10 வருடங்கள் நடிக்காமல் இருந்தார் ஸ்ரீபிரியா. அதற்குப் பிறகு, அவர் தொட்டது சின்னத்திரை சீரியல்கள். "விடுதலை'', "மறக்க முடியுமா?'', "சாரதா'', "விக்ரமாதித்தன்'', "சிந்துபாத்'' என சீரியல்களை தொடர்ந்தவர், இப்போதும் "இம்சை அரசிகள் தொடரை தயாரித்து நடித்தும் வருகிறார்.

    இந்த பிசியிலும் தோழி ராதிகா தயாரித்த "சின்ன பாப்பா பெரிய பாப்பா'' காமெடித் தொடரில் "சின்ன பாப்பா''வாக வந்து காமெடி செய்து சின்னத்திரை வட்டாரத்திலும் நடிப்புக்காக பெயர் பெற்றார் ஸ்ரீபிரியா.

    முதலில் இந்தத் தொடரை தயாரிக்க இருந்தவர் ஸ்ரீபிரியா. இந்தியில் வெளியான "தூது மேமே'' நகைச்சுவைத் தொடர், ரொம்பவும் பிரபலமானது. இந்த தொடரை பார்க்கும் ரசிகர்கள் அதை இப்பவும் முதலிடத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு மவுசு குறையாமல் இப்போதும் அந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

    இந்த தொடர் பற்றி கேள்விப்பட்ட ஸ்ரீபிரியா அதை பார்த்தார். பார்த்ததுமே வெற்றி பெறக்கூடிய தொடர் என்பது தெரிந்து தமிழில்  அதை தயாரிக்கும் உரிமைக்கு முயற்சித்தார். அப்போது தான் கொஞ்சம் முன்னதாக அந்த உரிமையை ராதிகா பெற்றுக்கொண்டதை அறிந்தார்.

    இதன் பிறகு தோழிகள் சந்தித்தார்கள். "நான் தயாரிக்கிறேன். நீங்கள் நடியுங்கள்'' என்று ராதிகா சொல்ல, தொடரில் "சின்னபாப்பா''வாக வந்து காமெடி துவம்சம் செய்தார், ஸ்ரீபிரியா.

    இந்த "சின்ன பாப்பா'' கேரக்டரில் தொடர்ந்து 2 வருடம் நடித்தார். பிறகு சொந்த தொடர் தயாரிப்பில் ஈடுபட்டதால், நடிப்புக்கு நேரமின்றி விலகிக்கொண்டார். அதன் பிறகு "சின்ன பாப்பா'' கேரக்டரில் ஊர்வசியின் சகோதரி கல்பனாவும், அவரைத் தொடர்ந்து சீமாவும் நடித்தார்கள்.

    ஸ்ரீபிரியா "இம்சை அரசிகள்'' தொடரை விரைவில் முடிக்கிறார். அடுத்து புராணப் பின்னணியில் ஒரு தொடரை உருவாக்கும் வேலையில் பிசியாக இருக்கிறார். இதற்காக பெரியபுராணத்தை படித்து வருகிறார்.

    சொந்த தொடர் தவிர, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் "ஆனந்தம்'' தொடரிலும் நடித்து வருகிறார். இதுபோக தோழி ராதிகா தயாரிக்கும் "கண்ணாமூச்சி ஏனடா'' படத்தில் தோழி கேட்டுக் கொண்டதற்காக நடிக்கிறார். "எனக்கு கணவர், குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பு இருப்பதால் மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தாக வேண்டும். இந்த கண்டிஷனுக்கு தோழி ஒத்து வந்ததால் அவர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். "ஆனந்தம்'' தொடரிலும் மாலை 5ஷி மணிக்குள் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து விடுவார்கள். இப்படி குடும்பத்தின் பொறுப்புக்கு பங்கம் ஏற்படாதபடி நடிக்கிறேன்'' என்கிறார்.

    ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகா இப்போது சர்ச் பார்க்கில் 9-வது படிக்கிறார். அம்மா படித்த அதே பள்ளியில் மகளும் படிக்கிறார் என்பதில் இந்த அம்மாவுக்குள் நிறையப் பெருமை. மகன் அர்ஜ×ன் `ஷேர்வுட் ஹார்ட்' பள்ளியில் 5-வது படிக்கிறான்.

    "பிள்ளைகள் உங்கள் மாதிரி கலைத்துறைக்கு வருவார்களா?'' ஸ்ரீபிரியாவைக் கேட்டால், "பிள்ளைகள் விஷயத்தில், பெற்றோர் எந்த விருப்பத்தையும் திணிக்கக் கூடாது. கணவர் ராஜ்குமாரும் நானும் கலைத்துறையில் இருந்தாலும், பிள்ளைகள் விஷயத்தில் அவர்களின் விருப்பம் எதுவோ அதுதான் எங்கள் விருப்பமாகவும் இருக்கும். என் அக்காவின் மகன் சிவாஜி, திடீரென நடிக்க ஆசைப்பட்டான். அக்கா மீனா ராம்குமார், அம்மா கிரிஜா பக்கிரிசாமி, தம்பி சந்திரகாந்த் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகும் "சிங்கக்குட்டி'' படத்தில் அவன்தான் ஹீரோ, டைரக்டர் வெங்கடேஷ் இயக்கத்தில் படம் வளர்ந்து வருகிறது. எந்த ஆர்வமும் தானாக வந்தால் அதில் அதிக கருத்தூன்றி வெற்றி பெற முடியும்.''

    ஒரு அம்மாவுக்கு உரிய நெகிழ்ச்சியுடனே சொல்லி முடித்தார், ஸ்ரீபிரியா. 
    Next Story
    ×