search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ்"

    • ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, ஓமலூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.
    • மழையினால் குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்திற்கு எதிரே இருந்த நாகராஜன்- லட்சுமி தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.

    சேலம்:

    தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலும் கொளுத்தி வருவதால், பொதுமக்கள் யாரும் பகல் நேரத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவானது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயில் மாலை 4 மணி வரை அனலாக கொளுத்தியது. இரவிலும் காற்று குறைந்து வெப்ப அலை வீசியது. இதனால் இரவில் தூக்கமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று 1.30 மணி அளவில் இடியுடன் கூடிய கன மழை பெய்த தொடங்கியது. இந்த மழை மதியம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. கன மழையால் சேலம் 4 ரோடு, கலெக்டர் அலுவலகம், சாரதா கல்லூரி சாலை, செவ்வாய்ப்பேட்டை, நெத்திமேடு உள்ளிட்ட மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    புறநகர் பகுதிகளான எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, தேவூர், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, அரசிராமணி, கல்வடங்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் காற்றினால் வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தது.

    ஏற்காடு, ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, ஓமலூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.

    பல நாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது. வெப்ப சலனம் நீங்கி இரவில் வீடுகளில் குளிர்ச்சி நிலவியது.

    மேட்டூரில் நேற்று சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில் மாலை 3 மணிக்கு மேட்டூர், ஆர்.எஸ்.புரம், பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் உள்ள 60 ஆண்டு பழமையான பெரிய வேப்பமரம் ஒன்று சாய்ந்து சாலையில் சென்ற அரசு பஸ் மீது விழுந்தது. இந்த பஸ் சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஆகும்.

    மரம் சாய்ந்து விழுந்ததில் பஸ்சின் முன்புற கண்ணாடிகள் உடைந்தன. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். சாலையோரம் மின் கம்பத்தில் உள்ள மின் கம்பி மீதும் வேப்பமர கிளைகள் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் பஸ்சில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    நடுரோட்டில் பஸ்சின் மீது இந்த வேப்பம் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து சேலம், தர்மபுரி செல்லும் வாகனங்கள் தங்கமாபுரி பட்டணம், சிட்கோ, கருமலைக்கூடல் வழியே உள்ள மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேட்டூர் தீயணைப்பு குழுவினர் மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, பள்ளிப்பாளையம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, ராசிபுரம், புதுச்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல் குமாரபாளையத்தில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் குமாரபாளையம் நகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் குமாரபாளையம் சுற்றுப்புற பகுதிகளான எம்.ஜி.ஆர். நகர், சானார்பாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், சீராம்பாளையம், ஆல ங்காட்டு வலசு, கல்லாங்காடு வலசு, சத்யா நகர், தட்டான் குட்டை, வேமன் காட்டு வலசு, வளையக்காரனூர், வட்டமலை, சடைய ம்பாளையம், சாமிய ம்பாளையம், கத்தேரி மற்றும் புளியம்பட்டி உள்பட பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்ததையொட்டி பொதுமக்களும் மற்றும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த மழையினால் குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்திற்கு எதிரே இருந்த நாகராஜன்- லட்சுமி தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் தப்பினர். பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நகரில் மின்சாரம் தடைபட்டது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டிரைவர் யதுவை சில தினங்களுக்கு தற்காலிகமாக பணிக்கு வர கேரள அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்தது.
    • போலீசார் தனியாக 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவரான யது, திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனின் வாகனத்துக்கு வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மேயர், அவரது கணவர் சச்சின் தேவ் எம்.எல்.ஏ., சகோதரர் ஆகியோர் அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மேயர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு பஸ்சின் டிரைவர் யதுவை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதே நேரத்தில் மேயர் உள்ளிட்டோர் மீது அரசு பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு எதுவும் பதியவில்லை. மேலும் டிரைவர் யதுவை சில தினங்களுக்கு தற்காலிகமாக பணிக்கு வர கேரள அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்தது.

    மேயர் மற்றும் டிரைவருக்கு இடையே நடந்த மோதல் விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய பஸ்சில் இருந்த கேமராவை பரிசோதிக்க மந்திரி கணேஷ்குமார் உத்தரவிட்டார். ஆனால் அந்த பஸ் கேமராவின் மெமரி கார்டு மாயமானது. அதனை யாரும் திட்டமிட்டு எடுத்துச் சென்றார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.


    இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் ஒருவரின் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருவதால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி ஆபாசமாக வசைபாடுவதாகவும், அதனை தடுக்கக்கோரியும் மேயர் ஆர்யா ராஜேந்திரன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் தனியாக 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேயருக்கு ஆபாச தகவல்கள் மற்றும் மிரட்டல் அனுப்பியதாக அரசு பஸ் டிரைவரான கரை யாட்டுகுன்னல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித்(வயது35) என்பவர் மீது திருவனந்தபுரம் மத்திய சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்திருந்தனர்.

    அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீஜித் திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • இதையும் பொருட்படுத்தாமல் தொழில் நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    சமீபத்தில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பிய அரசு பஸ் புறப்பட்ட சில நேரத்தில் வளைவில் திரும்பும் போது பஸ்சின் இருக்கை கழன்று அதில் அமர்ந்திருந்த கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்டார். இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அரசு பஸ்களின் உள்புறத்தில் மழை நீர் வடிகிறதா? பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங் மற்றும் பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் பின்பக்க கண்ணாடி இல்லாமலேயே அரசு பஸ் ஒன்று இயங்கி வருகிறது. ஆம், வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பின்புற கண்ணாடி இன்றி முழுவதுமாக திறந்த நிலையில் பஸ் புறப்பட்டது. வேளாங்கண்ணி கடற்கரையோர பகுதி என்பதால் வெளியில் வீசும் குளிர்காற்று பஸ்சின் உள்ளே தான் முழுவதுமாக வீசுகிறது. இதையும் பொருட்படுத்தாமல் தொழில் நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

    அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த பஸ்சின் பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. திருச்சி பஸ் சம்பவம் பரவலாக பேசப்பட்டு வந்த சில நாட்களுக்குள் நாகையில் பின்பக்க கண்ணாடி இன்றி அரசு பஸ் இயங்கிய சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

    • கண்டக்டர் கார்த்திக்ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    கம்பத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி அதிகாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    இந்த பஸ்சை பாளையங்கோட்டை, மேலபுத்தனேரியை சேர்ந்த சுடலை மணி என்பவர் ஓட்டி வந்தார். இதில் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலைக்கிணறு பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் கண்டக்ராக பணியில் இருந்துள்ளார்.

    இந்த அரசு பஸ் அதிகாலை 3 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் அடுத்த நவலெட்சுமிபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நின்று அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி உள்ளனர். இதில் கண்டக்டர் கார்த்திக்ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே டிரைவர் சுடலை மணி சுதாரித்துக் கொண்டு பஸ்சை வேகமாக ஓட்டி உள்ளார். பின்னால் தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கியுள்ளது. இதில் பின்பக்க கண்ணாடியும் உடைந்தது.

    இதைத்தொடர்ந்து பஸ் டிரைவர் ஆழ்வார்திருநகரி அரசு மருத்துவமனையில் பஸ்சை நிறுத்தி விட்டு இருவரும் முதலுதவி சிகிச்சை பெற்றனர். அதன்பின்னர் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையில் அரசு பஸ் டிரைவர் பயணிகள் அனைவரையும் போலீஸ் பாதுகாப்புடன் திருச்செந்தூரில் கொண்டு இறக்கி விட்டு விட்டு ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நின்று அதிகாலையில் அரசு பஸ் மீது கல்வீச காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டி.எஸ்.பி. மாயவன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இரவு நேரங்களில் தாமிரபரணி ஆற்றில் மண் கடத்தலில் ஈடுபடும் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதா? அல்லது கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதா? என்பதை அறிந்து உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். .

    • சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம், விஜயவாடாவுக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.

    சென்னை:

    புனித வெள்ளியையொட்டி நாளை அரசு விடுமுறை ஆகும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைவரது கவனமும் தேர்தல் பிரசாரத்தை நோக்கி திரும்பியுள்ளதால், தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்பவர்களிடம், தனியார் ஆம்னி பஸ்கள் ஓசையில்லாமல் கட்டணத்தை உயர்த்திவிட்டன.

    சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று தனியார் ஆம்னி பஸ்களில் செல்வதற்கான கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கோவைக்கு செல்வதற்கும் ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.700 முதல் ரூ.1000 வரை ஆகும்.

    இதேபோல் சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம், விஜயவாடாவுக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு முதல் 5 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

    மற்ற பண்டிகை காலத்தில் வரும் வார இறுதி நாட்களை போலவே, தற்போதும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் தட்கல் முறையிலும் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி பொதுமக்கள் ஆம்னி பஸ்களை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் பஸ் கட்டணம் கிட்டத்தட்ட விமானக் கட்டணத்துக்கு இணையாக உள்ளது. எனவே, குடும்பத்துடன் ஊருக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் கூடுதல் கட்டணத்தால் தவிக்கிறார்கள்.

    அதே நேரத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. இந்த வார இறுதியில் மேலும் 650 பஸ்கள் புதிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்திற்கு வரும் ஒவ்வொரு பஸ்சிலும் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. இதனால் முன்பதிவு செய்யாத பயணிளுக்கு இருக்கை கிடைப்பதில்லை. இதனால் முன்பதிவு செய்யாத பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

    ஒவ்வொரு வார இறுதியிலும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பிறகுதான் கூடுதல் பஸ்கள் இயக்கபடுவதாகவும் பயணிகள் தெரிவிக்கி ன்றனர். எனவே வார இறுதி நாட்களில் முன்பதிவு செய்யாத பஸ்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
    • திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் உணவு, தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை மற்றும் கிராமங்களில் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

    சாலையில் சுற்றித்திரியும் யானை அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு இருக்கிறதா என தேடியும் அலைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் செல்லும் போது கவனத்துடன் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    முதியனூர் மற்றும் நெய்தாலபுரம் கிராமங்களுக்கிடையே உள்ள வனப்பகுதி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.

    பஸ் டிரைவர் யானை துரத்தி வந்ததால் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். சிறிது தூரம் துரத்தி வந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து நிம்மதி பெறும் மூச்சு விட்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை இயக்கினார்.

    • அரசு விரைவு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன.
    • போதிய உபகரணங்கள் இல்லாததால் பஸ்களை பழுது பார்க்கவும் முடியவில்லை என கூறப்படுகிறது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி ரெயில்வே மேம்பாலத்தில்நேற்றிரவு அரசு பஸ் பழுதடைந்து நடு வழியில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    பண்ருட்டி பகுதி வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. போதிய உபகரணங்கள் இல்லாததால் பஸ்களை பழுது பார்க்கவும் முடியவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து இருந்து பண்ருட்டி வழியாக சென்னைக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு வந்தது. அதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரெயில்வே மேம்பாலம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரெனபழுதானது.

    இதனை தொடர்ந்து நடுவழியில் அரசு பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் தவித்தனர்.

    • பயணிகளை ஆம்புலன்ஸ் உதவியுடன் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
    • 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நத்த மாங்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.

    மேட்டுப்பட்டி அருகே வந்து கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் அங்குமிங்கும் ஓடி. சாலை ஓரத்தில் இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ் பயணிகள் ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் துடி துடித்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் ஓடிவந்து, காயத்து டன் காணப்பட்ட 15க்கு மேற்பட்ட பயணிகளை ஆம்புலன்ஸ் உதவியுடன் லால்குடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லால்குடி இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிவு செய்து பேருந்து கவிழ்ந்தது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, பூவாளூர் பின்னவாசல் முதல் ஆலங்குடி மகாஜனம் வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. சாலை அகலப்படுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.

    • திடீரென பிரேக் போட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த அரசு பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    சென்னையில் இருந்து அரியலூருக்கு அரசு பஸ் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இதனை டிரைவர் பிரதீஸ்வரன்(42) ஓட்டி வந்தார்.

    திண்டிவனம் அருகே சாரம் பாஞ்சாலம் ஜங்ஷன் அருகே வந்த போது முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த அரசு பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அரசு பஸ் டிரைவர் பிரதீஸ்வரன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 17-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுபவிக்கப்பட்டனர்.

    இதில் 9-க்கும் மேற்பட்டோர் சென்னை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
    • சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணார் செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் வாகன மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் இருந்து உடுமலை வழியாக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மூணாருக்கு சென்றது.

    பின்னர் அங்கு பயணிகளை இறக்கி விட்டு விட்டு இரவு மூணாறில் இருந்து அந்த பஸ் புறப்பட்டு உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. தலையார் அருகே வந்த போது உடுமலை-மூணார் சாலையில் ஆக்ரோசத்துடன் சுற்றித்திரிந்த ஒற்றை யானை அந்த பஸ்சை வழிமறித்து தாக்கியது. இதில் பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

    இதை சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார். இதன் காரணமாக அச்சமடைந்த பயணிகள் அலறினர். காட்டு யானையின் அடாவடி செயலால் உடுமலை- மூணார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை பஸ்சை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக உடுமலை- மூணார் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. மேலும் சாலையின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது.யானைகளை துன்புறுத்தும் வகையில் ஒலி எழுப்புவதோ, கற்களை வீசுவதோ கூடாது. யானைகள் சாலையை கடக்கும் நிகழ்வு நேர்ந்தால் தூரத்தில் வாகனங்களை நிறுத்தி அவை சாலையை கடந்த பின்பு இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு பஸ்சானது வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும்.
    • பஸ்சில் பயணிக்க tnstc செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு ஒரே நாளில் ஒரே பஸ்சில் பயணம் செய்யும் வகையில் சிறப்பு பஸ் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதனை ஏற்று, நவக்கிரக சிறப்பு பஸ் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

    அதன்படி, இன்று (சனிக்கிழமை) நவக்கிரக சிறப்பு பஸ் தொடக்க விழா கும்பகோணத்தில் நடந்தது. விழாவில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அன்பழகன் எம்.எல்.ஏ., அரசு போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் மோகன், துணை மேயர் சு.ப. தமிழழகன் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் சிவசங்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த 52 பக்தர்கள் இந்த சிறப்பு பஸ்சில் பயபக்தியுடன் பயணித்தனர். இன்று ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் பொதுமக்கள் வரவேற்பு மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

    இந்த சிறப்பு பஸ்சானது வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும். இதற்கு பயண கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, இந்த சிறப்பு பஸ்சானது முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக் கொண்டு காலை 6 மணிக்கு கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திங்களூர் சந்திரன் கோவிலுக்கு சென்றது. பின்னர் அங்கு பக்தர்கள் தரிசனம் செய்து முடித்தனர். அதனை தொடர்ந்து 2-வதாக திருவாரூர் மாவட்டம் ஆலங்குடிக்கு காலை 7.15 மணிக்கு சென்று அங்கு குரு பகவான் தரிசனம் செய்ய பக்தர்கள் இறக்கி விடப்பட்டனர். தரிசனம் முடிந்த பின்னர் காலை உணவு இடைவேளை விடப்பட்டது.

    தொடர்ந்து, ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் ராகு பகவான் கோவில், 10 மணிக்கு சூரியனார் கோவில் சூரிய பகவான் கோவிலில் தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கஞ்சனூர் சுக்கிரன் கோவில் தரிசனம், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் தரிசனம், பிற்பகலில் மதிய உணவுக்கான இடைவேளை விடப்படும்.

    பின்னர், 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோவில் தரிசனம், மாலை 4 மணிக்கு கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், இறுதியாக 4.45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் கோவில் தரிசனத்திற்காக பக்தர்கள் இறக்கி விடப்படுவார்கள். அத்துடன் தரிசனம் நிறைவடையும்.

    இதையடுத்து திருநள்ளாறில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் பஸ் இரவு 8 மணிக்கு கும்பகோணத்தை வந்தடையும்.

    மொத்தம் 9 நவக்கிரக கோவில்களை ஒரே நாளில் பக்தர்கள் தரிசனம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பஸ்சில் பயணிக்க tnstc செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
    • மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் குத்தியாலத்தூர் பஞ்சாயத்து மற்றும் திங்களூர் பஞ்சாயத்தை கொண்டு கடம்பூர் பகுதியை இரண்டாகப் பிரித்து கிராமங்கள் 2 பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்நிலையில் திங்களூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியூர் எனும் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த ஒன்றறை மாதமாக குடிநீர் வரவில்லை. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தொலைவு சென்று வருகின்றனர்.

    இதுகுறித்து இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக கடந்த மாதம் நடந்த கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முறையான குடிநீர் வழங்க வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் தற்போது வரை குடிநீர் வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று காலை கதுபஸ்வண்ணபுரம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திரண்டு வந்து சத்தியமங்கலத்தில் இருந்து தேர்மாளம் செல்லும் அரசு பஸ்சை சிறைபிடித்து திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து கடம்பூர் போலீசார் மற்றும் திங்களூர் பஞ்சாயத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×