என் மலர்
- பாகிஸ்தானும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. எனவே, அந்நாட்டுக்கு இந்தியா மரியாதை அளிக்க வேண்டும்.
- அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனென்றால், பாகிஸ்தானிடமும் அணுகுண்டு இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் முன்னாள் மத்திய மந்திரியும், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்து, அரசியல் அரங்கில் விவாதப்பொருளாகி இருக்கிறது.
அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. எனவே, அந்நாட்டுக்கு இந்தியா மரியாதை அளிக்க வேண்டும். அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனென்றால், பாகிஸ்தானிடமும் அணுகுண்டு இருக்கிறது.
அப்படி மரியாதை அளிக்காவிட்டால், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டை பயன்படுத்துவது பற்றி பரிசீலிப்பார்கள். பாகிஸ்தானில் யாராவது பைத்தியக்கார மனிதர் பதவிக்கு வந்து, அணுகுண்டை பயன்படுத்தினால், அது நல்லதல்ல. அது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் 'வைரல்' ஆகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், அது பழைய வீடியோ என்று மணிசங்கர் அய்யர் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீடியோவில் நான் அணிந்திருக்கும் ஸ்வெட்டரை பார்த்தால், அது சில மாதங்களுக்கு முன்பு குளிர்காலத்தில் அளித்த பேட்டி என்று தோன்றுகிறது. பா.ஜனதாவின் பிரசாரம் எடுபடாததால், பழைய வீடியோவை தோண்டி எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அவர்களின் தாளத்துக்கு நான் ஆட முடியாது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட எனது 2 புத்தகங்களில் சரியான தகவல்கள் இருக்கின்றன. விருப்பம் இருப்பவர்கள் அதை படிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், மணிசங்கர் அய்யரின் கருத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகிக்கொண்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை செய்தித்தொடர்பாளர் பவன் கேரா கூறியதாவது:-
மணிசங்கர் அய்யர் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்த கருத்துகளில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை. அதில் இருந்து முழுமையாக விலகி நிற்கிறது. பிரதமர் மோடியின் அன்றாட உளறல்களில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக, பா.ஜனதா அந்த வீடியோவை தோண்டி எடுத்துள்ளது.
மேலும், மணிசங்கர் அய்யர் காங்கிரசின் குரலாக எவ்வகையிலும் பேசவில்லை. இதுபோல், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், சீனாவை பார்த்து இந்தியா பயப்பட வேண்டும் என்று சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும், மணிசங்கர் அய்யர் கருத்தை பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியை பா.ஜனதா தாக்கி வருகிறது.
பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:-
பாகிஸ்தானிடம் இந்தியா பயப்பட வேண்டும், மரியாதை அளிக்க வேண்டும் என்று மணிசங்கர் அய்யர் விரும்புகிறார். ஆனால் 'புதிய இந்தியா' யாருக்கும் பயப்படாது. காங்கிரசின் உள்நோக்கம், கொள்கை, சித்தாந்தம் ஆகியவற்றை அவரது கருத்து பிரதிபலிக்கிறது.
ராகுல்காந்தி கீழ் உள்ள காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தானுக்கும், அதன் பயங்கரவாதத்துக்கும் வக்காலத்து வாங்கும் கட்சியாகி விட்டது.
சமீபகாலமாக, காங்கிரஸ் தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அவற்றில் இருந்து விலகி நிற்பதாக காங்கிரஸ் கட்சி சொல்வது வாடிக்கையாகி விட்டது
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக,
காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவராக இருந்த சாம் பிட்ரோடா, சில வெளிநாடுகளில் உள்ள பரம்பரை சொத்து வரியை இந்தியாவில் அமல்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும் என்று பேசினார். அதை வைத்து, காங்கிரஸ் கட்சியை பா.ஜனதா விமர்சித்தது.
பின்னர், தென் இந்தியாவில் இருப்பவர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் இருப்பதாக அவர் கூறிய கருத்தும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. அதற்கும் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்தது. சாம் பிட்ரோடா தனது கட்சிப்பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை, டெல்லி, லக்னோ தலா ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 4 முதல் 6 இடங்களை பிடித்துள்ளன.
- குஜராத் அணி ஐந்து வெற்றிகள் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 35 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மட்டும் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற அணிகள் 12 போட்டிகளில் விளையாடிவிட்டன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா 8 வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா முதல் இடத்தையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.
சன்ரைசர்ஸ் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று வெற்றி பெற்றிருந்தால் 7 வெற்றிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை பிடித்திருக்கும். தற்போது 4-வது இடத்தில் உள்ளது.
டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி ரன் ரேட் அடிப்படையில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. லக்னோ 6-வது இடத்தை பிடித்துள்ளது.
ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் தலா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி 7-வது இடத்தை பிடித்துள்ளது. குஜராத் 8-வது இடத்தை பிடித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டன. ஆர்சிபி டெல்லி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுடன் விளையாட வேண்டியுள்ளது. ஏதாவது ஒரு அணியிடம் பிளேஆஃப் சுற்றை வாய்ப்பை இழந்து விடும். குஜராத் கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுடன் மோத உள்ளது. இதற்கும் அதே நிலைதான். ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விடும்.
சென்னை, டெல்லி, லக்னோ அணிகள் இரண்டு போட்டிகளில் ஒன்றிலாவது வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால்தான் வாய்ப்பில் நீடிக்க முடியும். டெல்லிக்கும் லக்னோவுக்கும் இடையே போட்டி உள்ளது. இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் இடையிலான பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை நீட்டிக்கும். இந்த மூன்று அணிகளும் இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
- அட்சயம் என்றால் வளர்வதும், பெருகுவதும் ஆகும்.
- மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
அட்சய திருதியை இந்த ஆண்டு மே 10ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொறு ஆண்டும் சித்திரை அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் நாள் திருதியை திதியில் அட்சய திருதியை சுப தினமாக கொண்டாடப்படுகிறது.
அட்சயம் என்றால் வளர்வதும், பெருகுவதும் ஆகும். அதனால், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அது பெருகி வளம் சேர்க்கும். குறைவில்லாத செல்வத்தை அள்ளித் தரும் திருநாளாக அட்சய திருதியை போற்றப்படுகிறது.
தர்மர் சூரிய பகவானை வேண்டி அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், இவ்வளவு ஏன் சிவபெருமான் அன்னபூரணித் தாயாரிடம் தனது பிச்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் இந்நாளில் தான்.
இந்நாளில் தங்கம் மட்டும் வாங்காமல் உப்பு, அரிசி, ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பது ஐதீகம்.
அன்றைய தினம் கல் உப்பு. மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும்.
அதன்படி, மே 10ம் தேதி காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையில் அட்சய திருதியை வருவதால் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இரு தினமும் காலை 5.33 மணி முதல் மதியம் 12.18 மணி வரை தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரமாகும்.
இந்நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு லலிதா ஜூவல்லரி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, தங்க நகைகள் மீதான சேதாரம் ஒரு சதவீதம் குறைத்து சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வைர நகைகள் மீது கேரட்டுக்கு ரூ.5 ஆயிரம் குறைக்கப்படுகிறது.
இந்த சலுகை கடந்த 3ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. நாளை தினம் அட்சய திரிதியை என்றாலும், இந்த சலுகை வரும் 12ம் தேதி வரை நீட்டித்து லலிதா ஜூவல்லரி அறிவித்துள்ளது.
- திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு சித்திரை-28 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி மறுநாள் விடியற்காலை 5.17 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : மிருகசீர்ஷம் நண்பகல் 1.08 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை
திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் பூத வாகனத்தில் திருவீதி உலா. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் ரத உற்சவம். திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திரபதீஸ்வரர் தேரோட்டம். வீரன்மீண்ட நாயனார் குருபூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - அனுகூலம்
ரிஷபம் - ஆதரவு
மிதுனம் - சுபம்
கடகம் - வெற்றி
சிம்மம் - தனம்
கன்னி - நற்செயல்
துலாம் - உதவி
விருச்சிகம் - பாசம்
தனுசு - பணிவு
மகரம் - தெளிவு
கும்பம் - பண்பு
மீனம் - உவகை
- குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோரின் சதங்களால் 231 ரன்கள் குவித்தது.
- சிஎஸ்கே 196 ரன்கள் அடித்து 35 ரன்னில் தோல்வியை சந்தித்தது.
குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத்தை மீண்டும் ஒரு முறை வீழ்த்தி சிஎஸ்கே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் முதலில் விளையாடிய குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோரின் சதங்களால் 231 ரன்கள் குவித்து விட்டது. பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-
எங்கள் பீல்டிங் எங்களை வீழ்த்தியது, நாங்கள் கூடுதலாக 10-15 ரன்களை கொடுத்தோம். திட்டத்தை செயல்படுத்துவதில் நாங்கள் நன்றாக இருந்தோம், ஆனால் அவர்கள் சில நல்ல ஷாட்களை விளையாடினர். பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடி, சிறப்பாக நிலையில் சென்று கொண்டிருக்கும்போது உங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது.
இது மிகவும் விரைவானது (சென்னையில் நடைபெறும் போட்டி குறித்து). நாங்கள் விரைவாக சென்னைக்கு செல்ல வேண்டும். சென்னையில் எங்களுக்கு ஒரு கடினமான ஆட்டம் உள்ளது. அதில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் மாற வேண்டும்.
இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
நாளை சென்னை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சிஎஸ்கே விளையாட இருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் போட்டி இருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
குஜராத் அணி பேட்டிங் செய்யும்போது சென்னை அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. பல கேட்ச்களை தவறவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டேரில் மிட்செல் 63 ரன்னிலும் மொயின் அலி 56 ரன்னிலும் வெளியேறினர்.
- குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டும் ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் -சாய் சுதர்சன் சதம் அடித்தனர். சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். 1 ரன் எடுக்க ஆசைப்பட்டு 1 ரன்னில் ரச்சின் அவுட் ஆனார். உடனே ரகானேவும் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.
இதனால் சிஎஸ்கே அணி 10 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனை தொடர்ந்து டேரில் மிட்செல் மற்றும் மொயின் அலி ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்தது.
டேரில் மிட்செல் 63 ரன்னிலும் மொயின் அலி 56 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த துபே 21, ஜடேஜா 18, சாண்டனர் 0 என வெளியேறினர்.
இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டும் ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு.
- ரூ.2 லட்சம் பணம், கஞ்சா சிகரெட்டுகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல்.
யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர்.
சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது.
இந்த சோதனையில் ரூ.2 லட்சம் பணம், கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- குற்றம் கடிதல் 2 படத்தை எஸ்.கே. ஜீவா எழுதி இயக்குகிறார்.
- படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகிறது.
திரைப்பட விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என பல்வேறு துறைகளில் இயங்கி வருபவர் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார். இவர் 'குற்றம் கடிதல் 2' படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்து தேசிய விருது உள்ளிட்ட அங்கீகாரங்களையும் பெரும் வரவேற்பையும் பெற்ற திரைப்படம் "குற்றம் கடிதல்."
ஜே.எஸ்.கே. தயாரிப்பில் உருவான 'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ்.கே. ஜீவா எழுதி இயக்குகிறார். ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்த படம் குறித்து பேசிய ஜே.எஸ்.கே. சதீஷ் குமார், "கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நடிக்கிறேன். ஓய்வு பெறும் சமயத்தில் குடியரசுத் தலைவர் கரங்களால் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
'குற்றம் கடிதல் 2' படத்தின் படப்பிடிப்பு ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கி கொடைக்கானல், திண்டுக்கல், சென்னை மற்றும் கேரளாவில் நடைபெறுகிறது. இதர நடிகர்கள் மற்றும் படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு குற்றம்சாட்டியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
- இது தொடர்பாக அவருக்கு தெரிந்திருந்தால், எதுவுமே செய்யாமல் இருந்தது ஏன்?.
அதானி, அம்பானி டெம்போ மூலம் எதிர்க்கட்சிக்கு பணம் கொடுத்ததாக பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதானி, அம்பானி குற்ச்சாட்டு குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடியை தடுப்பது எது? என ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
கடந்த 8-ந்தேதி டெம்போ மூலம் எதிர்க்கட்சிகளுக்கு அதானி மற்றும் அம்பானி பணம் சப்ளை செய்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு குற்றம்சாட்டியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அவருக்கு தெரிந்திருந்தால், எதுவுமே செய்யாமல் இருந்தது ஏன்?. அவரிடம் அத்தகைய விரிவான மற்றும் நடவடிக்கை எடுக்கக்கூடிய தகவல்கள் இருந்தால் விசாரணை அமைப்புகளை (சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை) பயன்படுத்த தடுத்தது என்ன?
கடந்த ஆண்டு ஹம் அதானி கே ஹைன் கவுன் (HAHK) சீரிஸ் கீழ் பிரதமரிடம் 100 கேள்விகளைக் கேட்டோம். தற்போது, டெம்போக்களில் பணப் பைகளைப் பெறுவது குறித்து நாட்டு மக்களுக்கு வாக்குமூலத்தோடு தனது நீண்ட மௌனத்தைக் கலைக்கிறாரா பிரதமர்?
அதானியை சட்டத்திற்குப் புறம்பாக பாதுகாக்க பிரதமர் எவ்வளவு தூரம் சென்றார் என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு நன்கு தெரியும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
- விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயங்களுடன் மீட்பு.
- படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொய்கா ஆற்றின் மேம்பாலத்தில் பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த பேருந்தில் மொத்தம் 20 பேர் பயணித்துள்ளனர். இதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீரில் மூழ்கிய பேருந்தில் இருந்து 12 பேரை அவசர உதவியாளர்கள் மீட்டுள்ளனர். மீட்பு பணி முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்து விபத்தில் சிக்கிய வீடியோ காண்பவர்களை பதற வைத்துள்ளது. மேலும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.