search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராம தீர்த்தம்"

    • இந்த புண்ணிய தீர்த்தத்தில் 36 நாட்கள் 36 முழுக்கு செய்ய வேண்டும்.
    • தீர்த்தத்தில் நீராடி, இங்குள்ள நாகநாதரை வழிபட பிள்ளைப் பேறு கிட்டும்.

    சேது தீர்த்தம்

    வங்கக் கடலும், இந்து மகா கடலும் சேருமிடத்தில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை, ''கோடி தீர்த்தம்'' என்று கூறுவார்கள். இந்த இடத்திற்கு தனுஷ்கோடி என்று பெயர். ராமர், தன் வில்லின் நுனியால் இந்த அணையை உடைத்ததால் இந்தப் பெயர் ஏற்பட்டது.

    ராமேஸ்வரம் கோவில் வழிபாட்டுக்கு முன்னும், பின்னும் இங்கு முழுக வேண்டும் என்பது ஐதீகம். இங்கு பிதுர் கடன் செய்வதும், அஸ்தி கரைப்பதும் சிறப்பாகும். இந்த சேதுவில் ரத்தினாகரத்தில் (இந்துமா கடல்) முதலில் நீராட வேண்டும். இதனை ''மலநீக்கு முழுக்கு'' என்பார்கள்.

    இந்த புண்ணிய தீர்த்தத்தில் 36 நாட்கள் 36 முழுக்கு செய்ய வேண்டும் என்பார்கள். ஆடி அமாவாசை, தை அமாவாசை, அர்த்தோதயம், மகோதயம் முதலிய புண்ணிய காலங்களில் இங்கு நீராடுவது சிறப்பாகும். இந்த சிறப்பு நாட்களில் ராமநாத சுவாமி பஞ்சமூர்த்திகளோடு வந்து தீர்த்தம் கொடுப்பார்.

    ராம தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம், அனுமார் தீர்த்தம்

    இவைகளும் இங்குள்ள முக்கிய தீர்த்தங்கள் ஆகும். இந்த தீர்த்தத்தில் குளித்தும், தலையில் தண்ணீர் தெளித்தும் வழிபடுகிறார்கள். இந்த குளத்தில் காசு போட்டும், பொரி போட்டும் வழிபடுகின்றார்கள்.

    இதில் குறிப்பிடத்தக்கது. ''ராம தீர்த்தம்'' ஆகும். இத்தீர்த்தத்தில் நீராடி, இங்குள்ள நாகநாதரை வழிபட பிள்ளைப் பேறு கிட்டும். குறிப்பாக ராகு, கேது ஜாதக கட்டத்தில் ஐந்தாம் இடத்தில் இருந்து நாகதோசம் ஏற்பட்டிருந்தால், (பெண்களுக்கு ஒன்பதாம் இடத்தில் இருத்தல்) இந்த தீர்த்தத்தில் நீராடி, நாகப்பிரதிஷ்டை செய்தால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். துரோணரின் சாவுக்குக் காரணமாக இருந்த தர்மர், அந்த பாவம் தீர மூழ்கிய குளம்தான் இந்த ''ராம தீர்த்தம்'' ஆகும்.

    அக்கினி தீர்த்தம்

    ராமேஸ்வரம் கோவிலுக்கு எதிரே உள்ள கடலே ''அக்கினி தீர்த்தம்'' ஆகும். சீதை மீது சந்தேகப்பட்ட ராமர், சீதையைத் தீக்குளிக்கச் சொன்ன போது, சீதை தீக்குள் இறங்கியதும், சீதையின் கற்புக்கனல் தாங்காது, அக்கினி ஓடிவந்து

    இந்தகடலில் குளித்துதான் குளிர்ந்தது என்று புராணங்கள் கூறுகின்றன.

    இதனாலேயே இந்த தீர்த்தம் ''அக்கினி தீர்த்தம்'' என்று அழைக்கப்படுகிறது. அக்கினி தீர்த்தம் என்ற பெயருக்கேற்ப இந்த தீர்த்தத்தில் நீராடும் போது வெதுவெதுப்பாக இருக்கிறது.

    இந்த அக்கினி தீர்த்தக் கடல் ஆழமும் இல்லை, அலையும் இல்லை. ஆனால், இந்த அக்கினி தீர்த்தத்தில் குளிக்க எந்தவித நியமமும் கிடையாது. யாரும், எந்நேரமும் அக்கினி தீர்த்தத்தில் குளிக்கலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    நம் நாட்டில் வேறு எங்கும் கடல் ''அக்கினி தீர்த்தத்தில்'' இருப்பது போல் அமைதியாக இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த அக்கினி தீர்த்தக் கரையில் ஆதி சங்கரர் வந்து நின்ற இடம் இருக்கிறது. இந்த அக்கினி தீர்த்தக் கடலில் குளிப்பது, கடலில் குளிப்பது போல் அல்லாமல் பெரிய ஏரியில் குளிப்பது போல் அமைதியாகக் குளிக்க முடியும். இந்த அக்கினி தீர்த்தக் கரையில் மண்ணால் லிங்கம் செய்து, பூஜித்து, பித்ரு தர்ப்பணம் செய்வது சிறந்த ஒரு புண்ணியம் ஆகும்.

    இந்த தீர்த்தங்கள் யாவும் இயற்கையில் காந்த சக்தி மிகுந்தவையாகவே உள்ளன. இது உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்தக் கூடியதாகும். உடம்பின் அணுசக்தியை வலுப்படுத்தக் கூடியதும் ஆகும்.

    இந்த தீர்த்தங்களின் மின்னோட்ட மகிமையைத் தங்களது ஞானத்தாலும், யோகத்தாலும் அறிந்த நமது முன்னோர்கள் இந்த தீர்த்தங்களை ஏற்படுத்தி, அதை ஆன்மிகத்தோடு இணைத்து நமக்கு வழங்கி உள்ளார்கள். இத்தகைய சிறப்புமிக்க தீர்த்தங்களில் நீராடுவதால் புத்திர பாக்கியம் உண்டாகிறது.

    உடல் பிணி தீருகிறது. பாவங்கள் தொலைகிறது. அனைத்து நலன்களும் கிடைக்கின்றன. இந்த தீர்த்தங்களில் நீராடித்தான் நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பிறந்தனவாம்.

    இதனால்தான் ''ராமேஸ்வரம் போய் குளிக்காதவன் போல'' என்று ஒரு பழமொழி சொல்கிறார்கள். இப்பழமொழி, ராமேஸ்வரத்தில் தீர்த்தம் ஆடுவது எவ்வளவு சிறப்பு என்பதை எடுத்துரைக்கிறது.

    அயோத்தி சென்று முடிசூட்டிக் கொண்ட ராமர், மீண்டும் ராமேஸ்வரத்திற்கு வந்து தீர்த்தமாடியதாக ''ஆனந்த ராமாயணம்'' கூறுகிறது.

    இத்தகைய சிறப்புமிக்க தீர்த்தங்களில் ஒவ்வொருவரும் நீராடுவது அவசியம் ஆகும். இங்கு, தங்குவதில் இருந்து உணவு, போக்குவரத்து என அனைத்து வசதிகளும் உள்ளன.

    ஆலயத்தின் உள்ளே உள்ள இருபத்தி இரண்டு தீர்த்தக் கிணறுகளிலும் குறிப்பிட்ட காசு கொடுக்க, அங்குள்ள பையன்கள் நமக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுவார்கள். ஒவ்வொரு இந்துவும், ''காசி ராமேஸ்வரம்'' பயணம் மேற்கொள்வது முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

    இதனை மேற்கொள்ளும் முறையானது, முதலில் ராமேஸ்வரம் வந்து கடலில் நீராடி, ராமநாதரை வழிபட்ட பின்பு, இங்கிருந்து மண்ணை எடுத்துக் கொண்டு காசி சென்று, கங்கையில் கரைத்து, கங்கையில் நீராடி விசுவநாதரை வழிபட்டு, பின்பு அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வணங்கி, ''காசி ராமேஸ்வர'' பயணத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    மேலும் ராமேஸ்வரம் தீர்த்தமாட செல்லும் முறையானது முதலில் ராமநாதபுரத்தை ஒட்டி உள்ள ''உப்பூர் விநாயகர்'' கோவில் தீர்த்தத்தில் நீராடி, விநாயகரை வணங்கி தொடங்க வேண்டும். இலங்கை செல்ல கடலைக் கடப்பதற்கு முன், ராமர் இங்கேதான் நீராடிவிட்டு, சங்கல்பம் செய்து கொண்டு சென்றார்.

    இதன்பின் தேவிபட்டினத்தில் கடலுக்குள் உள்ள நவ பாஷாண நவக்கிரகங்களை வழிபட்டு, அங்குள்ள கடலிலும், சக்கர தீர்த்தத்திலும் நீராட வேண்டும். பின்பு, திருப்புல்லாணி வந்து இங்குள்ள சக்கர தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்பு, தனுஷ்கோடி வந்து சேது தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்பு ஆலயத்தின் வெளியே உள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்பு ஆலயத்தின் எதிரே உள்ள கடல் ஆகிய ''அக்கினி தீர்த்தத்தில்'' நீராட வேண்டும்.

    பின்பு ஆலயம் வந்து 22 தீர்த்தங்களிலும் நீராடி, இறைவனையும், அம்பாளையும் வழிபட்டு, பின்பு மீண்டும் திருப்புல்லாணி வந்து தீர்த்தமாடி, அன்னதானம் செய்துவிட்டு, ராமநாதபுரம் சென்று அங்கு அரண்மனையில் உள்ள சேதுபதி மன்னன் சிலையை தரிசிக்க வேண்டும். இதுவே ராமேஸ்வரம் தீர்த்தமாடலின் விதிமுறையாகும்.

    ராமேஸ்வரம் திருக்கோவில் காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரையில் திறந்திருக்கும். இதில் மதியம் ஒரு மணி முதல் மூன்று மணி வரை கோவில்நடை சாத்தி இருக்கும். நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆடி அமாவாசை அன்று நாள் முழுவதும் பூஜையும், அர்ச்சனையும், தரிசனமும் பக்தர்களுக்கு உண்டு.

    தினமும் காலை ஐந்து மணிக்கு நடைபெறும் ''திருவனந்தல் பூஜை''யில் முக்கிய அபிஷேகங்கள் உண்டு. இதில், ''மரகதலிங்கத்தை'' மூலவருக்கு முன்பாக வைத்து, அபிஷேகம் செய்வார்கள். இதை தரிசிப்பது மிகவும் விசேஷமானது ஆகும்.

    இத்தலத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய, கட்டணத்திற்கு கங்கை தீர்த்தம் கிடைக்கும். இதேபோல், கங்கை தீர்த்தம் கொண்டு வருபவர்கள் கட்டணம் செலுத்தியே இறைவன் அபிஷேகத்திற்குக் கொடுக்க வேண்டும்.

    இந்த தீர்த்த சொம்பு பித்தளை, வெங்கலப் பாத்திரம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

    மேலும் இந்த ராமேஸ்வர தலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது, புத்திர பாக்கியத்துக்கான பரிகாரம், பிதுர்கள் தோஷம் போக்குதல் முதலியன சிறப்பான முறையில் நடைபெறுகிறது. இத்தகைய சிறப்புமிக்க, இந்தியாவின் தலை சிறந்த தீர்த்தமாகிய ''ராமேஸ்வரம்'' பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆலய நிர்வாக அதிகாரியைத் தொடர்பு கொள்ளாலம்.

    இத்தகைய சிறப்புமிக்க ராமேஸ்வரம் தீர்த்தங்களில் ஒவ்வொரு இந்துவும் நீராட வேண்டியது முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

    ×