search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனித புதைகுழிகள்"

    • "இலங்கையில் உள்ள பெரிய மனித புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுகளும்" என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • அரசியல் தலையீட்டின் பிரதான உதாரணமாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்சேவின் நடவடிக்கை ஆகும்.

    இலங்கையில் 1988-89 காலகட்டத்தில் நிகழ்ந்த மார்க்சிஸ்ட் கிளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த மோதல்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ஆங்காங்கே கொத்துக்கொத்தாக புதைக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பணிகளின்போது இந்த புதைகுழிகள் வெளிப்பட்டதையடுத்து, அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதைகுழிகள் தோண்டப்பட்டன.

    குறிப்பாக 2013ம் ஆண்டு மத்திய இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 155 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்தில் 81 உடல்களும், மற்றொரு இடத்தில் 318 எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

    இந்நிலையில், இலங்கையில் மோதல்கள் நடந்த பல்வேறு காலப்பகுதியைச் சேர்ந்த மனித புதைகுழிகளை இலங்கை அரசு எவ்வாறு கையாண்டது? என்பது தொடர்பாக புள்ளி விவரங்களுடன் சர்வதேச மனித உரிமைகள் குழு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

    "இலங்கையில் உள்ள பெரிய மனித புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுகளும்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், இலங்கை முழுவதிலும் இன்னும் ஆயிரக்கணக்கான சடலங்கள் புதையுண்டு கிடப்பதாக கூறியதுடன், மனித புதைகுழிகள் தொடர்பான காவல்துறை ஆவணங்களை அப்போதைய ராணுவ அதிகாரியாக இருந்த கோத்தபய ராஜபக்சே அழித்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளது.

    அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

    அகழ்வு பணிகளில் உள்ள பெரிய பிரச்சனை, அதில் உள்ள அரசியல் தலையீடு ஆகும். அரசியல் தலையீட்டின் பிரதான உதாரணமாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்சேவின் நடவடிக்கைகை குறிப்பிடலாம். (கோத்தபய ராஜபக்சே 1989 ஜூலை முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை மாவட்டத்தின் ராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும், பின்னர் இலங்கையின் அதிபராகவும் இருந்தார்). அவர் மாத்தளை மாவட்டம் உள்பட மத்திய மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்த ஐந்து வருடத்திற்கு முந்தைய கால கோப்புகள் அனைத்தையும் அழித்துவிடுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, சர்வதேச சட்டத்தின்படி கோத்தபய ராஜபக்சே மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×