search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி டாக்டர் பட்டம்"

    • கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் புகார் அளித்தார்.
    • வழக்கை ரத்து செய்யக்கோரி மகாராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி சென்னையைச் சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில், இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, ஈரோடு மகேஷ் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருது வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

    ஆனால் தனியார் அமைப்பு டாக்டர் பட்டம் வழங்கியதும், பல்கலைக்கழகம் இடத்தை ஒதுக்கியதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்கலைக்கழக பதிவாளர், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல் தனது கையெழுத்து தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறி, நீதிபதி வள்ளிநாயகம் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அந்த அமைப்பின் இயக்குனர் ராஜூ ஹரிஷ், மகாராஜன் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    போலி ஆவணங்களை காட்டி நிகழ்ச்சி நடத்த முறைகேடாக அனுமதி பெற்றதாக பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி மகாராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்தினால் அது காவல்துறையின் விசாரணையில் தலையிடும் வகையில் மாறிவிடும் என்பதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதேசமயம் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், 3 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை கிண்டி அண்ணா பல்கலை.யில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது.
    • பாடத்திட்டங்களை மேம்படுத்துவது, மாநில கல்வி கொள்கை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை கிண்டி அண்ணா பல்கலை.யில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உயர்கல்வித்துறை செயல்பாடுகள், புதிய கல்வி கொள்கை, உயர்கல்வித்துறையின் தரத்தை உயர்த்துவது, பாடத்திட்டங்களை மேம்படுத்துவது, மாநில கல்வி கொள்கை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

    அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல், மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பினை கருத்தில் கொண்டு தற்போதுள்ள பாடங்களுடன் திறன் வளர்க்கும் பாடப்பிரிவுகளை நடத்துவது, வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாநில பாடத்திட்டங்களை வகுப்பது, முதலமைச்சரின் ஆராய்ச்சி நிதி திட்டத்தின் கீழ் மாணவர்களை தேர்வு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    பல்கலைக்கழக தேர்வுகளில் வினாத்தாள் தயாரித்தல் மற்றும் விடைத்தாள் திருத்துவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை களைதல் குறித்தும், பல்கலைக்கழகங்களில் பதிவாளர், இயக்குனர் போன்ற முக்கிய பணியிடங்கள் தேர்வு செய்யப்படாமல் உள்ளது குறித்தும், புதிய முயற்சி திட்டங்களின் கீழ் சட்டப்பேரவையில் வெளியிடப்பட இருக்கக்கூடிய அறிவிப்புகள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    குறிப்பாக, போலி டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து பெரும் சர்ச்சை எழுந்து வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உள்ளிட்ட உயர்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர்களும் பங்கேற்றனர்.

    ×