search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புற்றுநோய் ஆராய்ச்சி மையம்"

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதலை பெற்ற தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
    வடவள்ளி:

    கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழக அரசு நிதி உதவியுடன் ரூ. 20 கோடி செலவில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டது.

    பல்கலைகழகத்தில் மொத்தம் 39 துறைகள் உள்ளது. இதில் 26 துறைகள் சேர்ந்து பல்கலை கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை அனுப்பபட்டது.

    இதனை ஏற்ற தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று பாரதியார் பல்கலை கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ. 50 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    பாரதியார் பல்கலை கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமையும் பட்சத்தில் புற்றுநோய்க்கான அனைத்து மருந்துகளும் இங்கு கண்டு பிடிக்கப்படும்.

    தாவரம் மற்றும் நுண்உயிரிகளிடம் இருந்து மருந்துகளை எடுத்து, அதனை விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு செலுத்தி மருந்துகள் கண்டு பிடிக்கும் துறை. புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் துறை. மலைவாழ் மக்களின் மருத்துவ முறைகளை பெற்று புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் துறை. திருமூலரின் மருத்துவ குறிப்பில் இருந்து புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் துறை என பல்வேறு துறைகள் இங்கு அமைய வாய்ப்பு உள்ளது.

    பாரதியார் பல்கலை கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுவதன் நோக்கம் புற்றுநோய் சிகிச்சைக்கு அதிகமான மருத்துவ செலவுகள் ஆகிறது, இதனை குறைப்பதற்கும், புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் நோயின் பாதிப்பு தெரிவதற்கு முன்பே இறந்து போகும் சூழ்நிலை தற்போது உள்ளது.

    எனவே குறைந்த செலவில் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் விரைவாக அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணமடைய செய்வதற்காகவும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×