search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரம்பரிய முறையில் திருமணம்"

    • அரியலூரில் விஜயநகர பேரரசு கால முறையில் பாரம்பரிய முறைப்படி மணமக்களுக்கு திருமண விழா நடைபெற்றது
    • மணமகன் வெள்ளை குதிரையில் பட்டு உடுத்தி வாளும் கேடயமுமாக உற்றார் உறவினர்களுடன் ஊர்வலமாக வந்தார். மணப்பெண் திரைச்சீலை மூடிய சந்தன பல்லக்கில் அழைத்து வரப்பட்டார்

    அரியலூர்:

    இன்றைய திருமணங்கள் அவரவர் சமய, சம்பிரதாயங்களின்படி நடத்தப்பட்டாலும் ஏதோ ஓரிடத்தில் மேற்கத்திய, வடக்கத்திய கலப்பு இடம் பெற்று விடுகிறது. பண்டைக்கால நடைமுறைகள் பலவற்றை தற்போதைய திருமண நிகழ்வுகளில் பார்க்க இயலாது.

    முந்தைய காலத்தில் மணமக்கள் மீது அருகம் புல்லை தூவி ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் சூழ வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்தி வந்தனர். அருகம்புல் படரும் இடங்களில் எல்லாம் வேரூன்றி விடும். மழை இல்லாமல் மேல்பகுதி வாடி நின்றாலும் மீண்டும் மழை பொழியும்போது தழைக்கத் தொடங்கும்.

    கஷ்டங்கள் வந்தாலும் அதைத் தாங்கி மீண்டும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதை குறிப்பதற்காகவே அருகம்புல்லை மணமக்கள் மீது தூவி வாழ்த்தி வந்தனர். இப்போது வாக்கிங் செல்பவர்கள் அருகம்புல் ஜூஸ் குடிப்பதைத்தான் நாம் பார்த்திருக்கின்றோம். பல திருமண வீடுகளில் மணமக்கள் மீது அருகம் புல்லுக்கு மாறாக மஞ்சள் கலந்த அரிசியை தூவுகின்றனர். இது வட மாநில கலப்பாகும். மேலும் பெரும்பாலானவர்கள் மலர் தூவி வாழ்த்துகின்றனர்.

    இது அரிசியைவிட உத்தமமானது என்கிறார்கள். இவ்வாறு காலப்போக்கில் பல மாற்றங்கள் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள ப்பட்டுள்ளன. இன்றைய இளைய தலைமுறையினர் புதுமையான திருமணங்களை பார்க்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைக்கின்றன. ஆனால் அரியலூர் நகரவாசிகளுக்கு விஜயநகர பேரரசர்களின் சந்திர வம்சத்து திருமண வைபவத்தை பார்க்கும் அரிதான வாய்ப்பு இன்றைய தினம் கிடைக்கப்பெற்றது.

    அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள கீதா மஹாலில் பா.பாண்டியராஜ் -ரஞ்சிதா ஆகியோரின் திருமணம் மன்னர் கால திருமணத்தை நினைவூட்டுவதாக அமைந்தது. மணமகன் வெள்ளை குதிரையில் பட்டு உடுத்தி வாளும் கேடயமுமாக உற்றார் உறவினர்களுடன் ஊர்வலமாக வந்தார்.

    மணப்பெண் திரைச்சீலை மூடிய சந்தன பல்லக்கில் அழைத்து வரப்பட்டார். இந்த ஊர்வலத்தில் மரப்பாச்சி பொம்மை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வேடமடைந்த கலைஞர்கள், மன்னர் கால அமைச்சரவை சகாக்கள் வேடமடைந்தவர்கள் என வரிசையாக வர ஊர்வலம் களை கட்டியது. மணமக்களின் இந்த ஊர்வல நிகழ்வு மட்டுமே இரண்டு மணி நேரம் நகரை சுற்றி வந்தது. அதன் பின்னர் கீதா மஹாலில் சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெற்றன.

    ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படி பொன்னூஞ்சல் கட்டப்பட்டு, ஆண்டாளின் 16 திருவடி வாசகம் பாடி திருமண நிகழ்வுகள் நடந்தேறின. 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட திருமலை நாயக்கர் மன்னரின் சிலை முன்பு மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர். இதில் விஜய நகர பேரரசு கால சடங்குகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டன.

    இந்த தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத் தலைவர் கே.செந்தில்குமார் நாயுடு தலைமையில் திருமண விழா நடந்தது. இதில் மாநிலத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாநில பொது செயலாளர் வெங்கடேசன், மாநில துணைப் பொதுச் செயலாளர் ரமணன், மாநில பொருளாளர் ராஜசேகரன்,

    அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மகேஷ் குமார், கார்த்திகேயன், மணிகண்டன், மற்றும் நிர்வாகிகள் பி. ராஜசேகரன், சபரி ராஜன், ராஜேந்திரன், தயாளன், ராம் பிரசன்னா, வினோத், சதீஷ்குமார், நந்து (எ) ஆனந்தன், திருச்சி வெங்கடேஸ்வரா டிரேடிங் கார்ப்பரேஷன் கே.மதன்குமார், மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் ஹேராம் துளசிராமன்போன்ற முக்கியஸ்தர்கள் பிரபலங்கள் மணமக்களை மனதார வாழ்த்தினர்.

    மன்னர் கால திருமணத்தை கண்டு வியப்படைந்த அரியலூர் நகரவாசி ஒருவர் கூறும்போது, பண்டைக்கால மன்னர்களின் வாழ்வியல் முறைகள் மற்றும் வரலாறுகளை தெரிந்து கொள்ள இதுபோன்ற பாரம்பரிய திருமணங்கள் உதவுகின்றன. சரித்திரத்தை, முன்னோர்களின் தியாகத்தை உள் வாங்கிய சமூகமும், நாடும் வளரும் பாரம்பரிய மற்றும் மன்னர் கால திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றனர்.

    ×