search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட்டி தற்கொலை"

    அறந்தாங்கி அருகே குடும்ப வறுமையால் 9 வயது பேரனை கொன்ற பாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பரமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா வேலார். இவரது மனைவி சொர்ணவல்லி (வயது 65). மண்பாண்ட தொழில் செய்து வந்த செல்லையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதையடுத்து தற்போது மண்பாண்ட தொழில் நலிவடைந்ததாலும், போதிய வரவேற்பு இன்மையாலும் சொர்ணவல்லி அந்த தொழிலை விட்டு விட்டு கூலி வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு பன்னீர் செல்வம், தங்கராசு என்ற இரண்டு மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அதே ஊரில் அருகருகே வசித்து வருகிறார்கள். இதில் தங்க ராசுவின் மனைவி நாகேஸ்வரி தம்பதியின் மகன் பாண்டி (9). பரமந்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    பாண்டி பிறந்த ஒரு சில ஆண்டுகளில் அவனது தாய் நாகேஸ்வரி நோய்வாப்பட்டு இறந்துவிட்டார். எனவே தங்கராசு, அவரது மகன் பாண்டி, சொர்ணவல்லி ஆகிய 3 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

    கூலி வேலைக்கு செல்லும் தங்கராசு, சொர்ணவல்லி ஆகியோரது வருமானத்தின் மூலம் பாண்டியை படிக்க வைத்து குடும்பத்தையும் நடத்தி வந்தனர். ஆனால் பெரும்பாலான நேரங்களில் சரியான வேலை கிடைக்காதததால் குடும்பம் வறுமையில் வாடியது.

    இந்த நிலையில் நேற்று சொர்ணவல்லியின் மற்றொரு மகன் பன்னீர் செல்வம் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் நூறு நாள் வேலைக்காக சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர். அப்போது சொர்ணவல்லியின் வீடு திறந்து கிடந்தது. அத்துடன் பாண்டியையும் காணவில்லை.

    அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தபோது, வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள சுடுகாட்டின் அருகே சொர்ணவல்லியும், அவரது பேரன் பாண்டியும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.

    உடனே அவர்களை மீட்ட அந்த பகுதியினர் ஆம்புலன்சு வேன் மூலம் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆனால் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். குடும்ப வறுமையால் தற்கொலை முடிவெடுத்த சொர்ணவல்லி, தான் இறந்த பின்னர் தனது பேரனை அக்கறையோடு யாரும் வளர்க்க மாட்டார்கள் என்று கருதி அவனுக்கும் வி‌ஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.

    இதுகுறித்து ஆவுடையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயையும், மகனையும் இழந்த தங்க ராசு இருவரின் உடல்களையும் பார்த்து கதறித்துடித்தார்.

    ×