search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசல்கள்"

    நாகமரை மற்றும் பண்ணவாடி இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக படகு-பரிசல்கள் இயங்காததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். #Hogenakkal

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம் ஏரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாகமரை பரிசல் துறையில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர், கொளத்தூர் பகுதிகளுக்கு பரிசல் மற்றும் படகில் சென்று வந்தனர். கடந்த ஒரு மாதமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பரிசலில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    தற்போது நீர்வரத்து குறைந்து உள்ளதால் மீண்டும் படகு மற்றும் பரிசல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகமரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் உறவினர்கள் பலர் கொளத்தூர் மற்றும் மேட்டூரில் உள்ளனர்.

    மேலும் நாகமரை, ஏரியூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் விளையும் காய்கறிகளை படகு மற்றும் பரிசலில் கொண்டு சென்று மேட்டூர், கொளத்தூரில் விற்பனை செய்வார்கள். பரிசலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ. 10 வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தங்களது பொருளாதா நிலை கேள்விக்குறியாகிவிட்டதாக கிராம மக்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

    கடந்த 22 நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் பரிசல் ஓட்டிகள் வருமானம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு மாற்றுவழியில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை பொறுத்து மாமரத்துகடவு, ஊட்டமலை, கோத்திக்கல் ஆகிய 3 வழிகளில் பரிசல் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கோத்திக்கல் என்ற இடத்தில் பரிசல் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பசேகரன் ஆய்வு மேற்கொண்டார். காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவை பொறுத்து மாற்று வழிகளில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×