search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டுக்கூடு பொது ஏலம்"

    • பட்டு வளர்ப்பை கைவிடும் நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
    • விவசாயிகளுக்கு உரிய விலை உடனுக்குடன் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் வெண்பட்டு உற்பத்திக்கான சிறந்த தட்ப வெப்ப நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் வெண்பட்டு உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அத்துடன் இங்கு உற்பத்தி செய்யப்படும் வெண்பட்டுக்கூடுகள் தரத்திலும் சிறந்து விளங்குவதால் நல்ல வரவேற்பு உள்ளது. பட்டு வளர்ச்சித்துறையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் பட்டு வளர்ப்பை கைவிடும் நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் முட்டைத் தொகுதிக்கான விலை கடந்த சில மாதங்களில் 100 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் செல்வராஜ் கூறியதாவது:- இன்றைய நிலையில் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களும் பல சிரமங்களை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இரட்டைக் கலப்பின 100 முட்டை தொகுதிக்கான விலை கடந்த ஜனவரி மாதம் ரூ. 550 லிருந்து ரூ.750 ஆக உயர்த்தப்பட்டது. முட்டைத் தொகுதிக்கு ரூ.250 விலை உயர்ந்த நிலையில் உடனடியாக இளம்புழுக்களுக்கு ரூ.300 வரை விலை உயர்த்தப்பட்டது. இது விவசாயிகளுக்கு கடும் சிரமத்தை உருவாக்கியது.

    இந்தநிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த 14-ந் தேதி முதல் 100 முட்டைத் தொகுதிக்கான விலை ரூ.1,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதற்கு பட்டுக்கூடு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்த நிலையில் விலை உயர்வு வரும் மார்ச் 1-ந் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 100 சதவீதம் வரை ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வால் பட்டு விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க விலை உயர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். மேலும் வெண்பட்டு விவசாயிகளுக்கான காப்பீடு காலாவதியாகி 1 மாதம் கடந்த நிலையிலும் இன்னும் காப்பீடு செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் எதிர்பாராத இழப்புகளுக்கு நிவாரணம் பெற முடியாத நிலை ஏற்படும்.

    எனவே உடனடியாக அனைத்து பட்டு விவசாயிகளுக்கும் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் பட்டுக்கூடுகளுக்கு பணம் வழங்குவதற்கு 100 நாட்கள் வரை ஆகிறது. ஆனால் வெளி மாநிலங்களில் உடனுக்குடன் பணப்பட்டுவாடா என்பதுடன் கூடுதல் விலையும் கிடைக்கிறது. எனவே பல விவசாயிகள் வெளி மாநிலங்களை தேடி செல்லும் நிலை உள்ளது. இதனால் இ-மார்க்கெட் மூலம் ெபாது ஏல முறையை கொண்டு வரவும், விவசாயிகளுக்கு உரிய விலை உடனுக்குடன் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×