search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி சுட்டுக்கொலை"

    • சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார்.
    • மூர்த்தியின் மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலால் ஏற்காட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே காக்கம் பாடி கிராமத்தை சேர்ந்த மெய்யன் மகன் மூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், மூர்த்தி ஆடுகளுக்கு இலை வெட்டுவதற்காக வனப்பகுதிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மேலும் மூர்த்திக்கு அடிக்கடி வலிப்பு வருவது வழக்கம். இதனால் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று அவரது வீட்டினர் தேடி வந்தனர்.

    இதனிடையே அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஏற்காடு போலீசார் மூர்த்தி உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    மூர்த்தி இறப்பதற்கு 3 நாட்கள் முன்பு இருந்தே தனக்கு அடிக்கடி தலை சுற்றல் வருவதாக கூறி மருத்துவமனைக்கு சென்று, மருந்துகள் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் மூர்த்தி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்பு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பின்னர் மூர்த்தி சாவு குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மூர்த்தி கொலை செய்யப்பட்டதாகவும், அவரை 7 பேர் கொண்ட கும்பல் சுட்டு கொன்று விட்டதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகனிடம் கேட்ட போது, இந்த சம்பவம் தொடர்பாக நன்கு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் உடல் கூறு ஆய்வில் மூர்த்தியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் குச்சி குத்தி ஏற்பட்டது தான் என் உறுதியாக தெரியவந்த பின்பு தான் நாங்கள் இயற்கை மரணம் என முடிவு செய்தோம்.

    சமூக வலைத்தளத்தில் இவ்வாறு அவதூறு பரப்புவது தவறு. மேலும் தேவைப்பட்டால் மூர்த்தியின் உடலை மறுஆய்வு செய்ய தயாராக உள்ளோம் எனவும், இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

    மூர்த்தியின் மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலால் ஏற்காட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை சுட்டு கொன்றதாக கூறப்படும் 7 நபர்கள் யார்? என்றும் கேள்வி எழுதுள்ளது. எனவே இந்த விசயத்தில் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி உண்மை விவரங்களை தெளிவுபடுத்தவேண்டும் என்று ஏற்காடு பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×