search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை மதுரை நான்கு வழிச்சாலை"

    தஞ்சை-மதுரை நான்கு வழிச்சாலைக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விவசாய நிலங்களில் கற்கள் நடப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். #Farmers #Opposition
    திருவரங்குளம்:

    தமிழகத்தில் தஞ்சை- மதுரை, சென்னை-சேலம், கரூர்-கோவை உள்ளிட்ட 9 பசுமை வழிச்சாலை திட் டங்களுக்கு ரூ.43 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற் காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அந்தந்த பகுதிகளில் நடந்து வருகிறது.

    சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாயிகள் வழக்கு தொடர்ந்ததால் பணியை தொடர ஐகோர்ட்டு தடை விதித்தது.

    இந்தநிலையில் தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தஞ்சை-மதுரை இடையேயான 200 கிலோ மீட்டர் தொலைவுள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணிக்காக 6 குழுக்களில் 50 பேர் இடம் பெற்றுள்ளனர். கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை, பெருங்களூர், புதுக்கோட்டை, திருவரங்குளம் பகுதியில் உள்ள நிலங்களில் அளவீடு செய்து கற்களை ஊன்றி அதில் மஞ்சள் வர்ணத்தை பூசி வருகின்றனர். இதையறிந்ததும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலங்களின் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

    திருவரங்குளம், பெரிய நாயகிபுரம், தோப்புக் கொல்லை கிராமங்களில் உள்ள விவசாயிகள் பம்பு செட் பாசனம் மூலம் வெண்டை, கத்திரி போன்ற காய்கறிகளை சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் இவர்களுடைய நிலங்களில் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எதிர்த்து ஏற்கனவே ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் பாஸ்கர் கூறுகையில், தற்போது புழக்கத்தில் உள்ள சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு போதுமான இடவசதி உள்ளது. அதை தவிர்த்து விட்டு வேண்டுமென்றே விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே பல ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்யாததால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். தற்போது அவர்கள் நிலத்தையும் இழந்துவிட்டால் வாழமுடியாத நிலை ஏற்படும். எனவே விவசாயிகளுக்கு நியாயமான நீதி கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #Farmers #Opposition


    ×