search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கரநாராயண திருக்கோவில்"

    • ஆடி தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் திருநாளான வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் சங்கரன்கோவிலில் சங்கரநாராயண திருக்கோவிலும் ஒன்று.

    ஆடித்தபசு

    சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் ஆடித் திங்கள் உத்திராட நன்னாளில் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராகவும், ஸ்ரீ சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார்.

    இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    நாளை கொடியேற்றம்

    விழா நாட்களில் சுவாமி அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆடித்தபசு திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் சிறப்பு நாதஸ்வர இன்னிசை, தேவார இன்னிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான ஆகஸ்ட் 8-ந் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

    சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் திருநாளான வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை 5.30 மணிக்கு மேல் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தவசு காட்சி கொடுக்கிறார். இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி யாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

    பாதுகாப்பு

    2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா நடைபெற உள்ளதால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலும் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ஏற்பாடுகள்

    ஆடித்தபசுதிருவிழா கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.

    மண்டகப்படி நாள் நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். நாளை (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார். நாளை மறுநாள் தி.மு.க. அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    ×