search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் வசதிக்கு தவிக்கும் மக்களுக்கு அதிர்ச்சி தந்த பேரூராட்சி"

    • ஆழ்துளை கிணறு ஒன்று பொதுமக்களுக்கு வறட்சி காலத்திலும் தண்ணீர் வழங்கி வந்தது.
    • அடிபம்பாகவே மாற்றியுள்ளோம். இதன் மூலம் தண்ணீர் அடித்து எடுத்து கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.

    பாப்பிரெட்டிபட்டி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி பொ. மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள பாரஸ்ட் ரோடு, விஜயநகரம் பிரிவு சாலையில் சுமார் 30 ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு ஒன்று பொதுமக்களுக்கு வறட்சி காலத்திலும் தண்ணீர் வழங்கி வந்தது.

    இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் விவசாயிகள் வாழக்கூடிய இப்பகுதியில் விவசாய கிணறுகள் கூட்டு கிணறாக இருந்ததால், தற்போது பயன்பாடு இன்றி தண்ணீர் எடுக்க முடியாத சூழ்நிலை நிலவி வந்தது

    இந்த நிலையில் இப்பகுதி பொதுமக்களும், விவசாய குடிமக்களும், சுத்தமான தண்ணீர் இப்பகுதியில் வேண்டுமெனவும், இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கடந்த ஓராண்டுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம்,கலெக்டர் , துறை சார்ந்த அமைச்சர் ஆகியோரிடம் மனு கொடுத்திருந்தனர்.

    இதன் பேரில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இப்பகுதியில் உள்ள வறட்சியிலும், வற்றாமல் நீரை வழங்கி வந்த ஒரு ஆழ்துளை கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து சின்டெக்ஸ் மூலம் பொதுமக்கள் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் வசதி பல லட்சம் செலவில் செய்து தரப்பட்டது.

    இதனால் கடந்த ஆறு மாத காலமாக இப்பகுதி மக்கள் அன்றாட தேவைக்கான தண்ணீரை இந்த மின் இணைப்பு மோட்டார் மூலம் பயன்படுத்தி வந்தனர்.இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் திடீரென கடந்த மின் மோட்டாரை ஆழ்துளை கிணற்றில் இருந்து கழற்றி எடுத்து சென்று விட்டனர்.

    இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அடிக்கடி மின்மோட்டார் பழுது அடைந்து விடுவதால் தொடர்ந்து மின் மோட்டாரை பழுது நீக்குவது சிரமமாக உள்ளது, செலவுகளும் அதிகமாகி வருகிறது. எனவே இந்த மின் மோட்டாரை எடுத்துவிட்டு அடிபம்பாகவே மாற்றியுள்ளோம். இதன் மூலம் தண்ணீர் அடித்து எடுத்து கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். இதைக் கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    நவீன யுகத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் சிரமமின்றி எடுத்துச் செல்வதற்கு வசதி வாய்ப்புகளை அரசு எடுத்து வரும் நிலையில், மீண்டும் பழைய கால மனிதர்களைப் போல அடிபம்பு மூலம் தண்ணீர் எடுக்க சொல்லும் பேரூராட்சியில் செயல்பாடு வேதனையையும் அதிர்ச்சியும் அளிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    ×