search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணப்ப நாயனார்"

    • சுவர்ணமுகரி நதி இத்தலத்தில் உத்திரவாகினியாகப் பாய்கின்றது.
    • அறுபத்து மூவரில் இறைவனிடம் அன்பு செலுத்துவதில் முதல் நிலையில் நிற்பவர் கண்ணப்பர்.

    பஞ்சபூத தலங்களுள் காளஹஸ்தி வாயுத்தலமாக கருதப்படுகிறது. இதற்கு ஒரு புராணக் கதை உண்டு.

    ஆதி சேஷனுக்கும் வாயு பகவானுக்கும் ஒரு பலப் பரீட்சை நடந்தது. மேரு மலையை ஆதிசேஷன் சுற்றி வளைத்துக் கட்டிப் பிடித்தது. வாயு தன் பலம் கொண்ட மட்டும் காற்றை எழுப்பி மலையை அசைத்தது.

    இதனால் அம்மலையின் பிஞ்சுகள் மூன்றாகப் பிய்த்து எறியப்பட்டன. அப்படி எறியப்பட்ட மலைப் பிஞ்சு ஒன்று இங்கு விழுந்தது. அதுதான் காளத்தி மலையாக உருவாகி இருக்கிறது என்பது ஒரு செவிவழி செய்தி.

    வாயுத்தலம் என்று அழைக்கப்படுவதினை உறுதிப்படுத்துவான் போல், இத்திருக்கோயிலின் கருவறைக்குள், சுடர்விட்டுக் கொண்டிருக்கும் விளக்குகளில், இறைவன் முகம் அருகே உள்ள ஒரு விளக்குச் சுடர் மட்டும் காற்றிலே அசைவுற்று கொண்டே இருக்கிறது.

    இந்த விளக்குக்கு மட்டும் காற்று எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் கண்டறியாத அதிசயமாகவே இருக்கிறது. இதுதான் வாயுத் தலத்திற்குரிய நிதர்சனமான உண்மையாக கருதப்படுகிறது.

    கண்ணப்ப நாயனார்

    அறுபத்து மூவரில் இறைவனிடம் அன்பு செலுத்துவதில் முதல் நிலையில் நிற்பவர் கண்ணப்பர். எனவே தான் மணிவாசகப் பெருமான் ``கண்ணப்பன் ஒப்புதோர் அன்பு தம்மிடம் இல்லையே'' என உருகுகிறார்.

    மாணிக்கவாசகப் பெருமானும், திருஞானசம்பந்தப் பெருமானும் போட்டி போட்டுக் கொண்டு பெருமை பாராட்டிய நாயனார் கண்ணப்பர்.

    இத்தகைய பேரன்பு எதனையும் எதிர்பாராத அருளன்பு, தெய்வீக அன்பு. எனவே தான் சேக்கிழார் பெருமான் அனைத்து நாயன்மார்களையும் விட உயர்வாக உச்சிமீது வைத்துப் பாடி மகிழ்ந்தார்.

    வெண்ணிறத்தோடு பிரகாசிக்கிற சிவலிங்கத்தை வாயுபகவான் பூசித்து அப்பேறு பெற்றான். ஆதலால் இதற்கு வாயுலிங்கம் எனப் பெயர் உண்டாயிற்று.

    பிறகு பிரம்மதேவன் அதே லிங்கத்தை ஆராதித்து, பரமசிவனாக்கி, அந்த சிவானந்த நிலையம் எ¢ன்னும் சிரகத்தை பூமியில் கொண்டு வந்து வைத்ததினால் இத்தலம் தட்சண கைலாயம் எனப் பெயர் பெற்றது. இது வாயுலிங்கம் என்பதற்கு அடையாளமாக இச்சன்னதியிலிருந்து திருவிளக்கு எக்காலத்திலும் எந்த வேளையிலும் சதா அசைந்து கொண்டே இருப்பது ஒரு அதிசயம்.

    சுவர்ணமுகரி நதி இத்தலத்தில் உத்திரவாகினியாகப் பாய்கின்றது. இதற்கு வியத்கங்கா, சர்வலோக தீர்த்த சேஷயா, அவிட்ட சின்தையா, பவானி, ஜெகத்தாத்திரி, பவித்திரீ, கிருதகின்முகா, சிவானந்த கரி, வேகவதி, யசல்ஹினி, வக்கிரஹ, கனநாதினி, பக்தபாச மூலநிகுர்தனி, மனோக்கிய சிக்கா என இருபத்தைந்து பெயர்கள் உண்டு.

    கூர்மையான லிங்கம்

    இப்பெருமான் சிவலிங்கத்தில் ஒரு புதிய உருவை ஏற்றிருக்கின்ற அற்புதக் கோலத்தைக் கண்டு வணங்கி மகிழலாம். நான்கடி உயரம். அடியில் பெருத்து; முடியில் கத்தி முனை போன்று கூர்மையாக ஒடுங்கிய நிலையில் உள்ள மூர்த்தி.

    மாலை போட்டு அலங்கரிக்க என்று ஒரு தனிச் சட்டம். அதை விலக்கி விட்டு அர்ச்சகர் தீபாராதனை பண்ணினால், சிலந்தி, நாகம், யானைக் கொம்புகளோடு கண்ணப்பனது ஒரு கண்ணும் லிங்கத் திருவுருவில் தெரியும். அந்தராளயத்திலே கூப்பிய கையானாய் வில்லத்தை தாங்கிக் கொண்டு கண்ணப்பரும் சிலை உருவில் நிற்பதைக் கண்டு மகிழலாம்.

    காளத்தி நாதரை வணங்கி மீண்டும் வலப்பக்கச் சுற்றில் திரும்பினால் கிழக்கு நோக்கியபடி ஞானப் பூங்கோதையின் கோயில் உள்ளது. கம்பீரமான தெய்வம் இது இங்கு பல சுற்றுக்கள் உள்ளன.

    நகரத்தார் திருப்பணி

    தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகப் போற்றி மகிழும் நகரத்தார் பெரு வணிகர்களில் ஒருவரான தேவகோட்டை மே.அருநா.ராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் காளத்தி நாதர் திருக்கோயிலைப் பழுது பார்த்துப் புதுப்பித்துத் திருப்பணி செய்துள்ளனர். இவரது திருவுருவச் சிலை பொன்முகலி ஆற்றுக்குச் செல்லும் படிக்கட்டின் பக்கத்திலே ஒரு சிறு மண்டபத்திலே நின்ற நிலையில் இருப்பதையும் பார்க்கலாம்.

    மணிகர்ணிகா கட்டம்

    கோயிலின் பின்புறத்தில் இரண்டு குன்றுகள் உள்ளன. ஒன்றில் பேரிலே கண்ணப்பர் தொழுத இறைவனான குடுமித் தேவர் உள்ளார். மற்றொன்றில் துர்க்கையம்மை அருளாட்சி புரிவதை பார்க்கலாம்.

    கண்ணப்பர் மலை ஏறும் மலைச்சரிவிலே மணிகண்டேசுவருக்கு ஒரு திருக்கோயில். அதை அடுத்து மலையைக் குடைந்து உண்டாக்கிய மண்டபம். இதற்கு மணிகர்ணிகா கட்டம் என்று பெயர்.

    அந்திமத் தசையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்துக்கு கொண்டு வந்து, வலப்பக்கமாக ஒருக்கச் சாய்த்துக் கிடத்தினால், சாகிற பொழுது உடல் திரும்பி, வலது காது வழியாக உயிர் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் என்கின்றார்கள்.

    ×