search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனந்த தாண்டவம்"

    • அந்தரங்க அறையில் அம்பாள் சிலை உள்ளது.
    • பார்வதிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த இடம்.

    உத்தரகோசமங்கை கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி கோவில் உள்ளது. இக்கோவிலின் மத்தியில் ராஜகோபுரம் மிக சிறப்பாக அமைந்துள்ளது. இதை சுற்றி அகழியுள்ளது.

    அகழியை சுற்றிலும் தீப்பிழம்பை மலைபோல் வளர்த்துக் கொண்டு ஈசன், ஈஸ்வரி அக்கினி கோளத்தில் யாரும் அறியாமல் மூலஸ்தனத்தின் ரகசிய அறைக்குள் முதல் பெண் பார்வதி தேவிக்கு பரத நாட்டிய கலையையும், அந்தரங்க கலை முழுவதையும் கற்றுக் கொடுத்துள்ளார். மற்றும் தேவ ரகசியத்தை தன்னில் பாதியாகக் கொண்ட பார்வதி தேவிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த இடமாகும்.

    இந்த அந்தரங்க அறையில் அம்பாள் சிலை உள்ளது. இந்த அறைக்கு யாரும் செல்ல மாட்டார்கள். ஆதியில் அந்தரங்க அறையில் ஈசன் ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடியதற்குத்தான் ஆதி சிதம்பரம் என்ற உத்தரகோசமங்கை என்று வழங்கப்படுகிறது. முதலில் அறையில் ஆடிய பிறகுதான் பின்பு அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.

    எனவே இந்த மரகத நடராஜர் சன்னதிக்கு தெற்குபுறமாக வாசல் அமைந்துள்ளது. ஈசன்-ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடிய மரப்பலகை ஐந்தை இப்பொழுதும் காணலாம்.

    பரத நாட்டியத்தை முதல் முதலில் உத்திரகோசமங்கையில் ஆடல் அரசன் என்ற தெய்வம் சிவபெருமான் தான் அறிமுகம் செய்தார்.

    முதல் நாளில் சிவனும், பார்வதியும் `ஆனந்த தாண்டவம்' ஆடுகின்றார்கள். இரண்டாவது நாள் `சந்தியா தாண்டவம்'. மூன்றாவது நாள் `சம்ஹாரத் தாண்டவம்' ஆடுகின்றார்கள்.

    இந்த மூன்று நாட்களும் நடந்த நாட்டியத்திற்கு சிவபெருமான், பார்வதி ஆகியோரின் நடனம் ஒரே மாதிரியாக இருந்ததால் நடுவர்களால் சரியான தீர்ப்பு கூற முடியவில்லை. எனவே திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோரிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது.

    நான்காவது நாள் ஊர்த்துவதாண்டவம் நடந்தது. ஆடவல்லான் நடராஜரின் கால் சதங்கை சப்தம் ரம்மியமாய் ஒலித்தது. பார்வதி, நடராஜன் ஆடும் சபையை நோக்கி நடந்தாள். நடராஜனின் அருகே சென்றாள்.

    சுவாமி ஆடல், கலை பெண்களுக்கே உரியது. நீர் ஆடி ஆட வல்லான் என்று பெயர் பெறுவது நல்லது அல்ல. என்னுடன் போட்டி நடனம் ஆடிப்பாரும் என பார்வதி தேவி சவால் விட்டாள்.

    ஈசனும் போட்டி நடனம் ஆட சம்மதித்தார். ஒருபுறம் பார்வதி, இன்னொருபுறம் சிவபெருமானான, நடராஜன் ஆட்டம் தொடங்கியது.

    இந்த போட்டி நடனத்துக்கு நாரதர் யாழை இசைத்தார். மகா விஷ்ணு மத்தளம் கொட்டினார். நந்திய பெருமான் தாளமிட்டார். பிரம்மா ஜதி சொல்லத் தொடங்கினார். ருத்திரன் நாதசுரம் வாசித்தார். சரஸ்வதி வீணையை மீட்டினாள்.

    வெற்றி யாருக்கு என புரியாத நிலையில் திகைத்து இருந்தார்கள் தேவர்கள். இந்த நாட்டியத்தில் பார்வதி சுழன்றாடினாள். வெற்றி யாருக்கு என்று புரியாத நிலையில் அனைவரும் சிவதாண்டவத்தையும், பார்வதி ஆட்டத்தையும் கண்டு களித்தனர்.

    ஆட்டம் சூடு பிடித்தது. இருவரும் சுழன்று சுழன்று ஆடினர். பார்வதியின் கால் சலங்கை கழன்று கீழே விழுந்தது. ஆடலரசன் தன் காதில் இருந்த ஒரு குண்டலத்தை கீழே விழச் செய்தார். பார்வதி கால் சதங்கையை சரி செய்து சிவபெருமானின் செயல்களைக் கூர்ந்து கவனித்தார்.

    சக்கரமாய் ஆடிவந்த சிவபெருமானின் ஒரு காலின் விரல்கள் கீழே கிடந்த குண்டலத்தை மெல்லக் கவ்வியது.

    சிவபெருமான் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று புரியாது பார்வதி ஆடிக்கொண்டே நடப்பதைக் கவனித்தாள். கூடி இருந்தவர்களுக்கு ஈசனின் இந்த செய்கை புரியவில்லை. புரியாத குழப்பத்திலேயே ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அடுத்த கணம் நடராஜர் தன் இடது காலை அழுந்த ஊன்றி வலது காலை நாட்டியமண்டபத்துக்கு அருகில் மரங்கள் சூழ்ந்த வனம் பகுதியை நோக்கி தில்லையின் எல்லையை நோக்கி நடந்தார். பின்னர் நடராஜன் தன் வலது காலை தூக்கி இடது காதை தொட்டார். ஆனால் அது போன்று பார்வதிதேவி செய்ய முடியவில்லை. தள்ளாடி கீழே விழுந்து மயக்கம் நிலையை அடைந்து தோல்வியுற்றாள்.

    இந்த `தலம்' ஊர்த்துவ தாண்டவம் ஆடி தன்னுடன் போட்டி நடனம் ஆடிய பார்வதியை ஈசன் வென்ற `தலம்' தான் உத்திரகோசமங்கை திருத்தலமாகும். இந்த போட்டி நடனத்திற்கு திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோர்கள் நடுவர்களாக இருந்து பார்வதி தோல்வியுற்றதாகத் தீர்ப்பு வழங்கிய திருத்தலமாகும்.

    உத்தரகோசமங்கை திருத்தலத்தில் ஈசன், ஈஸ்வரியை பரதவ மகளாகவும், காளியாகவும், போகும்படி சாபம் இட்டத்தையும் இத்திருத்தலத்தில் ஈசனோடு ஆடிய நாட்டிய போட்டியில்தான் தோல்வியுற்றதையும் எண்ணி மிகுந்த மனவேதனைப்பட்டு தன் கணவர் என்று பாராமல் பார்வதி உத்தரகோசமங்கை திருத்தலத்தில் தன்னுடைய உருவ விக்கரகத்துக்கு பக்தர்கள் தினந்தோறும் பூ, பழம், தேங்காய், மேளதாளங்கள், இசை, சப்தம், ஒலி, ஒளியுடன் வழிபட்டு செல்வார்கள்.

    ஆனால் இத்திருத்தலத்தில் ஈசனுடைய உருவ விக்கிரகத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ஆருத்திர தரிசனம் பக்தர்கள் வழிபட்டு செல்ல வேண்டும். எனவே உத்தரகோசமங்கை திருத்தலத்தில் சக்திக்குத்தான் அதிக சக்தியுண்டு என்று ஈசனுக்கே ஈஸ்வரி சாபம் விடுத்தாளாம். இந்த சாபத்தினால்தான் ஈசனுடைய உருவச்சிலை மரகத கல்லால் அமைந்துள்ளது என்கிறார்கள். இந்த சிலை ஒலி, ஒளி, சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    ×