search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை"

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை நடைபெற உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை அனுப்பி வைக்கப்பட்டது
    • பட்டு வஸ்திரங்கள் மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது

    திருச்சி:

    ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும், தொண்டு செய்து அவருக்கு மனைவியானாள். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் என்பதால் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்தமும், உறவும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது. எனினும் பல காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது.

    பின்னர் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடத்து வருகிறது.

    இந்த ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடக்கிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

    இதையொட்டி நேற்று மாலை பட்டு வஸ்திரங்கள் மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    பின்னர் கோவில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் பட்டுவஸ்திரங்களை கோவில் யானை ஆண்டாள் மீது அமர்ந்து எடுத்து வர, திருச்சி மண்டல இணைஆணையர் செல்வராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்களப் பொருட்களை கையில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    இன்று காலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கலப்பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகனத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை (1-ந்தேதி) நடைபெறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தில் தேரில் எழுந்தருளுவார்.

    ×