search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியலூர் மழை"

    அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 6 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. 288 ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. 987 வீடுகள் சேதமடைந்துள்ளன.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் சராசரி அளவை காட்டிலும் 6 சதவீதம் கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் 613.38 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு சராசரி மழை அளவை காட்டிலும் கூடுதலாக 22 சதவீதமாக கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் தற்போது வரை 1,336.84 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித்துறையின் மூலமாக பராமரிக்கப்பட்டு வரும் 2,477 ஏரி மற்றும் குளங்களில் 288 ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    உடையார்பாளையம் தாலுகாவில் சுத்தமல்லி, பொன்னேரி அணைக்கட்டுகள் உள்ளன. மழை காரணமாக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் 2 நாட்களுக்கு முன்பு உபரிநீர் திறந்து விடப்பட்டது. வாரணவாசியில் ஓடும் மருதையாறில் முழுமையாக நீர் செல்கிறது. திருமானூரில் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் இருகரையை தொட்டபடி செல்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் முழுமையாக நீர் செல்வதால் பாலத்தில் நின்று ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

    மேலும், 226.8 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் தற்போது 211.05 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. தற்போது வினாடிக்கு 256 கன அடி நீர் நீர்த்தேக்கத்திற்கு வருகிறது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரியில் 114.45 மில்லியன் கனஅடி கொள்ளளவில் தற்போது வரை 94.50 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. தற்போது சித்தமல்லி நீர்த்தேக்கம், பொன்னேரியில் இருந்து நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகிய நீர்நிலைகளின் அருகே யாரும் செல்ல வேண்டாம். தங்களது குழந்தைகள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    வடகிழக்கு பருவமழையின் காரணமாக மாவட்டத்தில் 987 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 655 குடிசை வீடுகள் பகுதியாகவும், 20 குடிசை வீடுகள் முழுமையாகவும், 300 ஓடு மற்றும் இதர வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. வீடு ேசதமடைந்ததற்கு நிவாரணமாக இதுவரை 184 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 56 ஆயிரத்து 800 வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் மழையின் காரணமாக உயிரிழந்த 9 கால்நடைகளுக்கு ரூ.80 ஆயிரமும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சம் நிவாரணமாகவும் என மொத்தம் 645 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சத்து 90 ஆயிரத்து 300 நிவாரணமாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் 342 பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    வடகிழக்கு பருவமழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் 217.55 எக்டேர் பரப்பளவில் நெற்பயிரும், 56.68 எக்டேர் பரப்பளவில் சோளம், கம்பு பயிர்களும், 14.24 எக்டேர் பரப்பளவில் பருப்பு வகை பயிர்களும், 1,588.18 எக்டோர் பரப்பளவில் பருத்தி பயிரும் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக 524 எக்டேர் நெற்பயிரும், 80 எக்டேர் சோளம், கம்பு பயிர்களும், 301 எக்டேர் பருப்பு வகை பயிர்களும், 6 எக்டேர் கரும்பு பயிர்களும், 7.40 எக்டேர் எண்ணெய்வித்து பயிர்களும், 4003 எக்டேர் பருத்தி பயிர்களும் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. மழைநீர் வடிவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    தற்போது மேட்டூருக்கு அதிக அளவில் உபரிநீர் வருவதால், அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு திருச்சி அருகே உள்ள முக்கொம்பில் இருந்து உபரிநீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆற்றின் நீர்மட்டம் இன்னும் 50 ஆயிரம் கனஅடி அளவிற்கு உயர வாய்ப்பு உள்ளது. இருப்பினும் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மழை அளவு குறைவாக உள்ளதால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்காமல் கொள்ளிடம் ஆற்றில் கலந்து விடுகிறது.

    பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான கரைவெட்டி ஏரி, வேட்டக்குடி ஏரி, மானேரி, பளிங்காநத்தம் ஏரி, சுக்கிரன் ஏரி அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. அனைத்து ஏரிகளிலும் கரை காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்த நேரமும் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் நீர் வயல்களில் தேங்காமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த மாதத்தோடு மழையின் தாக்கம் குறைந்தால் இந்த வருடம் கரும்பு, நெல் மற்றும் மற்ற பயிர்கள் அனைத்தும் நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்றும், யூரியா தட்டுப்பாடு அதிகமாக உள்ளதை சரி செய்து கொடுத்தால் இன்னும் உதவியாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கனமழைக்கு மாடி சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பாட்டி மற்றும் பேரன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடை வீதி அருகேயுள்ள தேவாங்கர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அங்குள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் 2 பேருக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் கடைசி மகன் அஜித்குமார் (வயது 25) ஐ.டி.ஐ. படித்துவிட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தார். மகனின் காதலை ஏற்றுக்கொண்ட ஆறுமுகம் வருகிற 15-ந்தேதி திருமணம் நடத்தவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே அரியலூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் குளம் போல் மாறியுள்ளன.

    இந்த நிலையில் ஆறுமுகத்தின் தாய் லெட்சுமி அம்மாள் (67) அங்குள்ள ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். அதன் அருகிலேயே சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான வீடும் அமைந்துள்ளது. அவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் சிமெண்டால் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி அமைத்திருந்தார்.

    நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய அஜித் குமார் தனது பாட்டில் வீட்டில் தூங்கினார். கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் தண்ணீர் தொட்டிக்கு அருகிலிருந்த சுவர் மிகவும் பலமிழந்து காணப்பட்டது. இன்று அதிகாலை சுமார் 2.15 மணியளவில் அந்த பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது.

    இதில் தண்ணீர் தொட்டியுடன் சுற்றுச்சுவர் இடிந்து பக்கவாட்டில் உள்ள ஓட்டு வீட்டின் மீது சரிந்து விழுந்தது. அப்போது வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த லெட்சுமி அம்மாள், அவரது பேரன் அஜித்குமார் ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரையும் மீட்ட போது அவர் பலியாகி இருந்தனர். பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தனது பாட்டியுடன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×