search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yanai Gouni Flyover"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலம் வால்டாக்ஸ் சாலையையும், ராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து பாலமாகும்.
    • பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 57-வது வார்டுக்கு உட்பட்ட யானைக்கவுனி மேம்பாலமானது சென்ட்ரல் ரெயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதைகளுக்கு மேல் அமைந்துள்ளது.

    இந்தப் பாலம் வால்டாக்ஸ் சாலையையும், ராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து பாலமாகும். இப்பாலம் மிகவும் பழமையானதாகவும், பழுதடைந்த நிலையிலும் இருந்ததால் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இப்பாலத்தில் 50 மீ. நீளமுள்ள பகுதி ரெயில்வே துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது, இந்தப் பகுதியை இடித்து விட்டு 156.12 மீ. அளவிற்கு ரெயில்வே துறையின் மூலம் பாலம் அமைக்கவும், பாலத்தின் இருபுறமும் 364.23 மீ. அளவிற்கு சாய்தள சாலை பெருநகர சென்னை மாநகராட்சியாலும் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.

    அதனடிப்படையில், வால்டாக்ஸ் சாலையின் பக்கம் 165.24 மீ. மற்றும் ராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.99 மீ. நீளத்திற்கு சாய்தள சாலை மாநகராட்சியின் சார்பில் மூலதன நிதியின் கீழ், ரூ.30.78 கோடி மதிப்பிலும், ரெயில்வே துறையின் மூலம் ரூ.40.48 கோடி மதிப்பிலும் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் வால்டாக்ஸ் சாலையிலிருந்து, ராஜா முத்தையா சாலையை சென்றடையும் வகையில் ஒருவழிப்பாதை முடிக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது.

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மேயர் பிரியா, இணை ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், வட்டார துணை ஆணையாளர்கள் கட்டாரவி தேஜா, (வடக்கு), கே.ஜெ.பிரவீன் குமார், (மத்தியம்), மண்டலக் குழுத் தலைவர் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் ஜெயின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×