search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman Born Baby"

    திருமணமான 35 நாட்களில் மகளுக்கு குழந்தை பிறந்ததால், அவமானம் தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி அருகே உள்ள தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் பெரியமுத்து (வயது 28). இவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பூக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள குளத்துப்பட்டியை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும் கடந்த மாதம் 1-ந்தேதி திருமணம் நடந்தது.

    திருமணமான 3 நாட்களிலேயே, பெரியமுத்து வேலைக்காக சென்னை சென்று விட்டார். நேற்று முன்தினம் மாலையில் அவர் சொந்த ஊருக்கு வந்தார். இரவில், திடீரென அந்த பெண் தனக்கு வயிறு வலிப்பதாக கணவரிடம் கூறினார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பெரியமுத்து அழைத்து சென்றார்.

    அங்கு பெண்களுக்கான பொதுவார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது, அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரசவ வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். சிறிதுநேரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இதுகுறித்த தகவல், மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டிருந்த பெரியமுத்துவுக்கு தெரிவிக்கப்பட்டது. திருமணமான 35 நாட்களில் குழந்தை பிறந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட அவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    திருமணத்துக்கு முன்பே அந்த பெண்ணுக்கு, வேறு ஒரு நபருடன் ஏற்பட்ட தொடர்பில் குழந்தை பிறந்திருப்பது தெரியவந்தது. இதனால் அந்த பெண்ணுடன், தன்னால் சேர்ந்து வாழ முடியாது என்று தனது மாமனாரிடம் பெரியமுத்து தெரிவித்ததாக தெரிகிறது.

    மேலும் திருமணமான 35 நாட்களில் தனது மகளுக்கு குழந்தை பிறந்ததால் அந்த பெண்ணின் தந்தையும் விவசாயியுமான முனியப்பன் (58) அவமானம் அடைந்தார். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×