search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Triplicane Sorcerer"

    திருவல்லிக்கேணி மந்திரவாதி கொலையில் கொலையாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசி வருவதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. எனவே அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதில் மர்மம் நீடிக்கிறது.
    சென்னை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சைய்யது பஸ்ருதீன் (63). மந்திரவாதியான இவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனது கட்டிடத்தில் குறி சொல்லும் தொழில் செய்து வந்தார்.

    கடந்த 27-ந்தேதி இவர் குறி சொல்லிக் கொண்டு இருந்தார். அவரது முன்பு ஆண்களும், பர்தா அணிந்த பெண்களும் அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு பெண் எழுந்து ஒரு வேதிப் பொருளை தூக்கி மந்திரவாதி மீது வீசினார். உடனே அவரது உடலில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    தீக்காயம் அடைந்த மந்திரவாதியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக திருவல்லிக்கேணி உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம், இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். கொலையாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. மந்திரவாதி கொலை செய்யப்பட்டபோது அங்கு பர்தா அணிந்திருந்த 10 பெண்கள் இருந்தனர். அவர்களில் 9 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி விட்டனர். ஒரே ஒரு பெண் மட்டும் போலீஸ் விசாரணையில் சிக்காமல் இருந்தார்.

    அந்த பெண்தான் கொலையாளியாக இருக்க வேண்டும் என்று போலீசார் கருதினார்கள். அவரது பெயர் நவீன் தாஜ் (44). சென்னை ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்தவர். இவரது கணவர் சாதிக் பாஷா ராயப்பேட்டையில் மரக்கடை நடத்தி வருகிறார்.

    நவீன் தாஜை போலீசார் விசாரிக்க சென்றபோது அவர் வீட்டில் இல்லை. அவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று இரவு அவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்த போது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசினார். இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    நவீன் தாஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரிடம் போலீசாரால் உடனடியாக விசாரணை நடத்த முடியவில்லை. அங்கு பாதுகாப்புக்கு நிற்கும் போலீசார் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    நவீன் தாஜ் அடிக்கடி மந்திரவாதியை சென்று சந்தித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருவரும் உருது மொழியில் பேசி சண்டை போட்டுள்ளனர். அவர்கள் சண்டை போடுவதை மந்திரவாதியின் நண்பர் பழனிவேல் அடிக்கடி பார்த்துள்ளார். அவர்கள் உருது மொழியில் பேசியதால் எதற்காக சண்டை என்பதை பழனிவேலால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    நவீன் தாஜ் வேதிப்பொருளை வீசியபோது பழனிவேலும் காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவர்தான் நவீன் தாஜ் அடிக்கடி வந்து மந்திரவாதியிடம் சண்டை போட்டதாக அடையாளம் காட்டினார்.

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மந்திரவாதி கொலையில் கொலையாளி சிக்கியும் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. எனவே அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதில் மர்மம் நீடிக்கிறது. நவீன் தாஜ் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரியவில்லை.

    எனவே அவர் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவர்தானா அல்லது மந்திரவாதியை கொன்றுவிட்டு அதில் இருந்து தப்புவதற்காக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடிக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×