search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil youth arrest"

    தடை விதித்த தடுப்பணையில் குளித்ததை தட்டிக் கேட்ட ஆத்திரத்தில் ஆந்திர போலீசாரை தாக்கிய தமிழக வாலிபர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். #arrestcase

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையான புல்லூரில் கனகநாச்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆந்திர அரசால் 12 அடி உயரத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் இந்த அணையில் குளிக்க ஆந்திர அரசு தடை விதித்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை தடுப்பணையில் 4 வாலிபர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து ஆந்திர மாநில குப்பம் போலீசார் முருகேஷ், வெங்கடேஷ் ஆகிய 2 பேரும் அந்த வாலிபர்களிடம் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து செல்லுங்கள் என கூறினர். ஆனால் அதனை ஏற்காத வாலிபர்கள் தொடர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர். இதனால் போலீசாருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த 4 வாலிபர்களும் ஆந்திர போலீசாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை பிடித்து அங்கிருந்து கோவிலுக்கு சொந்தமான அறையில் வைத்து பூட்டினர்.

    பின்னர் குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த குப்பம் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த 2 போலீசாரை மீட்டு குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் போலீசாரை தாக்கியது வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கோடியூர் கிராமத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் அருண் (28) மற்றும் அவரது நண்பர்கள் புவனேஸ்வர் (27), ஜீவா (28), பாரி (28) என்பதும் தெரியவந்தது. விடுமுறையில் ஊருக்கு வந்த அருண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு அணையில் குளித்துக் கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து ஆந்திர போலீசார் சி.ஆர்.பி.எப். வீரர் அருண் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #arrestcase

    ×