search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srilankan political crisis"

    • அதிபர், பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்த பின்னரும் இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
    • இலங்கை நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக, வெளியிறவுத்துறை அமைச்சகம் தகவல்.

    கொழும்பு:

    கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

    ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் நேற்று இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அங்கேயே தங்கி உள்ள போராட்டக்காரர்கள் குளியல் அறைகளிலும், நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர்.

    இதனிடையே, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலகிய நிலையிலும் அவரது விட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலகுவதாக அறிவித்த பின்னரும் இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மேலும் அவர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.

    இலங்கையில் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்தியா ராணுவத்தை அனுப்ப உள்ளதாக சமூக வலைதங்களில் வெளியான தகவல்களை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது போன்ற கருத்துக்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரானது என்று இந்திய தூதரக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இலங்கையும், அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகும் பட்சத்தில் ஒரு வாரத்துக்குள் தற்காலிக அதிபர் பதவி ஏற்க வேண்டும்.
    • இலங்கை பாராளுமன்றம் 3 நாட்களில் கூடி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே மக்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளார். அவர் வருகிற 13-ந்தேதி அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    இதையடுத்து இலங்கையில் அடுத்து என்ன அரசியல் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே விலகியிருப்பதால் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் யார் என்பதை அறிய இலங்கை மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

    இது தொடர்பாக நேற்று மாலையில் இருந்து இலங்கை சபாநாயகர் மகிந்த யப்பா அபவக்தனே தலைமையில் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடந்தபடி உள்ளது. மகிந்த யப்பா இடைக்கால அதிபர் பொறுப்பை ஏற்பார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் பிரதமர் பதவியை ஏற்கக்கூடும் என்று மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் இன்று மதியம் இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதற்காக இலங்கையில் உள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மற்றும் சிறிய கட்சிகள் கொண்ட சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பில் நடக்கிறது. அதில் கூட்டாட்சிக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகும் பட்சத்தில் ஒரு வாரத்துக்குள் தற்காலிக அதிபர் பதவி ஏற்க வேண்டும். இலங்கை பாராளுமன்றம் 3 நாட்களில் கூடி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்பிறகு 30 நாட்களில் நிரந்தர அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    இதற்கிடையே பிரதமரையும் இதே முறையில் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய இலங்கை தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்காக அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள்.

    ×