search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sri kalligambal Temple"

    • காளிகாம்பாள் மேற்கு நோக்கி இருந்து பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்து வருகிறாள்.
    • குபேரன் இத்தலத்திற்கு வந்து அம்மனை வணங்கி தனவந்தனாக ஆனான் என்பது வரலாறு

    இந்த கோவிலில் சிறப்பு அம்சங்களில் ஒன்று அம்மன் மேற்கு நோக்கி எழுந்தருளியிருப்பது. பொதுவாக அம்மன்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருப்பதைப் பார்த்து இருப்போம்.

    ஆனால் இங்குள்ள காளிகாம்பாள் மேற்கு நோக்கி இருந்து பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்து வருகிறாள். இவ்வாறான நிலை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

    செல்வத்துக்கு அதிபதியான குபேரன் இத்தலத்திற்கு வந்து ஸ்ரீகாளிகாம்பாள் அம்மனை வணங்கிய பிறகு தான் பெரும் தனவந்தனாக ஆனான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    தென்னிந்திய பகுதியில் மராட்டிய வீர சிவாஜி படையெடுத்த போது காளிகாம்பாள் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

    இத்திருக்கோவிலில் ஸ்ரீகாளிகாம்பாள் அர்த்த பத்மாசனத்தில் பாசங்குசத்தை கையில் ஏந்தி கமலத்தில் புன்னகை செய்து வீற்றிருக்கிறாள். அம்பாளின் திருவடியில் திரிசிரனின் மூன்று தலைகள் நன்கு செதுக்கப்பட்டுள்ளன.

    மூலவர் உட்பிரகாரத்தின் மேற்கில் உற்சவர் மண்டபம் அமைந்துள்ளது. ஸ்ரீஅம்பாள் பெரிய நாயகி (உற்சவர்) மகாதேஜசுடன் மகாலட்சுமியாகவும், மகாசரஸ்வதியாகவும் இரு பக்கங்களிலும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள்.

    உற்சவ மண்டபத்திற்கு கிழக்கில் சிற்ப வேலைபாடுகளுடன் கருங்கல்லிலான பதினாறு கால் மண்டபம் மிக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மண்டபத்தில் அமைந்துள்ள எட்டுத் தண்களில் சிற்சிறு வடிவங்களில் பாலகிருஷ்ணன் வழிபாடும் பெண்தபசி, பெண் சேவார்த்திகள் சிற்பங்கள் கலை வேலைப் பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.

    வடமேற்கு பகுதியில் துணைவிகள் சமேதராக காட்சியளிக்கும் சித்தி-புத்தி விநாயகரும் அருகில் உள்ள அகோர வீரபத்திர சுவாமி, மாகாளியும் மகிமை நிறைந்தவர்கள் என்கிறார்கள்.

    பவுர்ணமி தினத்தன்று அகோர வீரபத்திர சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தினால் பில்லி,சூனியம் ,பேய், பிசாசு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

    தென் மேற்கு மூலையில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மையாருடன் அமர்ந்து அன்னை நெய்தல், நிலக்காமாட்சியாக காட்சி அளிக்கிறாள். வடக்கில் ஸ்ரீ வீரபிரமங்கார் சன்னதி அமைந்துள்ளது.

    எலும்புக்கூடாக பிருங்கி முனிவர்

    காளிகாம்பாள் சந்நிதியில் பிருங்கி முனிவர் மூன்று கால்களுடன் உடல் இளைத்து எலும்புக்கூடாக நிற்கிறார். அவர் பார்வதிதேவியை அவமதித்து பெற்ற சாபம் காரணமாக பல தலங்களுக்கு சென்று கடைசியாக இங்கு வந்து சேர்ந்தார். சக்தி இன்றி சிவனில்லை என்பதை அவர் உணர்ந்த பிறகே சாபவிமோசனம் பெற்றார்.

    வழிபாட்டின் பயன்

    தஞ்சம் என்று வருவோரின் சஞ்சலம் போக்கி மங்கலம் அருள்வாள். பல மகத்துவங்களை புரிவதன் மூலம் கலியுகத்தில் ஓர் கண்கண்ட தெய்வமாக காட்சி தருகிறாள்.

    அன்னை காளிகாம்பாள் திருத்தலம் திருத்தலம் நோக்கி வருவோர் அம்பாளிடம் சரணடைந்து, அவளைத் தோத்தரித்து ஐந்து வாரங்கள் தொடர்ந்து எலுமிச்சை பழத்தை பெற்றுச் செல்கின்றனர். அதனால் குறைபாடு நீங்கப் பெறுகின்றனர். தாய்மைப்பேறு பேறு அடைகின்றனர்.

    தீராத பிணிகள் யாவும் தீர்க்கப் பெற்றுத் திரும்பு-கின்றனர். பேய், பிசாசு, பில்லி சூன்யம் விலகப் பெற்று புத்துணர்ச்சி பெறுகின்றனர். மாங்கலயப் பலம் நிலைக்கப் பெறுகின்றனர்.

    பொதுவாக குறைகள் அத்தனையும் விலகி நிறைவு பெற்றுத் திரும்புகின்றார்கள். இவ்வரிய உண்மையை அறிய ஒருமுறை வடசென்னை தம்புச் செட்டித் தெரு அன்னை காளிகாம்பாள் ஆலயத்திற்கு சென்று வந்தால்தான் தெரியும். அன்னை காளிகாம்பாள் அருளடி சரணே!

    ×