என் மலர்
நீங்கள் தேடியது "உமோஜா பெண்கள்"
- உமோஜா பெண்கள், ஆண்களை வெறுப்பவர்கள் அல்ல.
- பெண்களை மதிக்கும் ஆண்களை அவர்களும் மதிக்கின்றனர்.
கென்யா - கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு நாடு. கென்யா மலைத்தொடர் முடிந்து அதன் அடிவாரத்தில் பாலைவனம் தொடங்கும் இடத்தில் சம்புரு என்ற பழங்குடி இனம் வாழ்ந்து வருகிறது. அங்கு வாழும் ஆண்கள் ஆடு மற்றும் மாடுகளை வரதட்சணையாக கொடுத்து பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள். ஒரு பொருளை வாங்குவதுபோல் பெண்களை விலைக்கு வாங்குவார்கள்.
அப்படி விலைக்கு வாங்கப்பட்ட பெண்கள், ஆண்களுக்கு அடிமையாக வாழ்க்கை நடத்த வேண்டும். பெண்களுக்குக் கல்வி கிடையாது. வேலை செய்து சம்பாதிக்க முடியாது.

இப்படி ஒரு இக்கட்டான காலகட்டத்தில் தான் அங்கு வாழ்ந்து வந்த ரெபேகா லோலோசோலி என்ற பெண்ணால் இந்த கொடுமைகள் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள முடியாமல் முதல் முறையாக குரல் எழுப்பத்தொடங்கினார்.
இவர் பள்ளி படிப்பை மட்டுமே முடித்திருந்த அவருக்கு 18 வயதில் திருமணம் நடைபெற்றது. 5 குழந்தைகள் பிறந்தன. 30 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் ராணுவ வீரர்கள் 15 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதில் ரெபேகாவும் இருந்தார்.
பலாத்காரத்தை காரணம் காட்டி, அவருடைய கணவர் ரெபேகாவை விற்க முடிவெடுத்தார் . அப்போது ரெபேக்கா இந்த கொடுமைகளுக்கு எதிராக பேசத் தொடங்கினார். அதை பொறுக்க முடியாத சில ஆண்கள் அவரை அடித்து சித்ரவதை செய்தனர்.
அங்கே பாலியல் பலாத்காரத்துக்கு பலியான பெண்களைக் கணவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. சில பெண்கள் உணவின்றி இறந்துபோவார்கள். ஆனால் இதை பொறுக்க முடியாத ரெபேக்கா பாதிக்கப்பட்ட பெண்களையும் அவர்கள் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு, தனியாக வீடு கட்டி தங்கினர்.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்றுதிரட்டிக்கொண்டு கிராமத்தை விட்டுக் கிளம்பினார் ரெபேகா. `உமோஜா' என்ற பெண்கள் அமைப்பை ஆரம்பித்தார். `உமோஜா' என்றால் ஒற்றுமை என்று அர்த்தம்.
கணவர்கள், உமோஜா பெண்களால் தங்களின் மதிப்பு குறைந்து போவதாக முடிவு செய்து, அவர்களை அங்கிருந்து துரத்த பல தகராறுகள் செய்தனர்.
இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில், குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் துன்புறுத்தப்பட்டு, அதை பொறுக்க முடியாமல் தப்பிப் பிழைத்து குழந்தை குட்டிகளுடன் இந்த கிராமத்தில் தஞ்சம் அடைந்தார்கள். பொட்டல் நிலத்தில் தங்குவதற்கு ஓர் எளிமையான வீட்டைக் கட்டினார்கள்.
2 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய நகைகள், கைவினைப்பொருட்கள் செய்து சுற்றுலாப் பயணிகளிடம் விற்றனர். இந்த தொழில் சூடுபிடித்தது. அதோடு பழங்குடி நடனம், பாட்டு என்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர். ஆண்களால் இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதுபோல கிராமத்துக்குள் நுழைந்து தகராறு செய்தனர். இடத்தை காலி செய்ய வற்புறுத்தினர். சொந்தமான இடமாக இருந்தால் யாரும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தார் ரெபேகா.

இதனால், தமக்கென்று ஒரு இடம் வேண்டும் என முடிவு செய்து, அங்கு வாழும் பெண்கள் பாரம்பரிய நகைகளும், கைவினைகளும் விற்று பணம் சேர்த்து, சொந்தமாக அந்த இடத்தை விலைக்கு வாங்கினர். சுற்றி வேலிகள் எழுப்பி, குடில்கள் அமைத்து வாழத் தொடங்கினர்.
ரெபேக்கா முதலில் 15 பெண்களுடன் 1990-ம் ஆண்டு இந்த கிராமத்தை தொடங்கினார். இப்போது பெண்கள், குழந்தைகள் என 250 பேர் கொண்ட கூட்டுக்குடும்பமாக வளர்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அங்கு ஒரு பள்ளியையும் நிறுவி உள்ளனர். உமோஜா பெண்கள், ஆண்களை வெறுப்பவர்கள் அல்ல. பெண்களை மதிக்கும் ஆண்களை அவர்களும் மதிக்கின்றனர்.






