என் மலர்
நீங்கள் தேடியது "மோர்குழம்பு ரெசிப்பி"
- மோர் குழம்பு என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
- சேப்பங்கிழங்கு சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவை அருமையாக இருக்கும்.
அனைவருக்கும் மோர் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். மோர் குழம்பு வைத்து அதனுடன் உருளைக்கிழங்கு மசாலா அல்லது ஊறுகாய் வைத்து சாப்பிட பலருக்கும் மிகவும் பிடிக்கும். மோர் குழம்பில் நாம் பலவிதமான காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டு இருப்போம். உதாரணமாக வெண்டைக்காய் பூசணிக்காய் வெள்ளரிக்காய் சௌசௌ காய் என பல காய்கறிகளை வைத்து மோர் குழம்பு செய்து சாப்பிட்டு இருப்போம்.
ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக சேப்பங்கிழங்கு சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவை அருமையாக இருக்கும். மோர் குழம்பு சேப்பக்கிழங்கா என்று யோசிக்க வேண்டாம். ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த மோர் குழம்பு மிகவும் பிடித்தமானதாக அமையும். இப்பொழுது வாங்க இந்த சேப்பக்கிழங்கு மோர் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சேப்பங்கிழங்கு - 300 கிராம்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
சேப்பங்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து குழைய வேகவைக்கவும். அது ஆறிய பிறகு தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாய்களை பொடிதாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின்னர் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு அதில் சேப்பங்கிழங்கை போட்டுக் கிளறி அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இந்த கலவை கொதித்து தண்ணீர் சற்று சுண்டி வரும் நேரத்தில், ஒன்றிரண்டு சேப்பங்கிழங்கை கரண்டியால் நன்றாக நசுக்கிவிடவும். சிறிது நேரத்தில் குழம்பு கெட்டியாகும்.
அப்போது அதில் தயிரை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும். பின்னர் அடுப்பில் மற்றொரு சிறிய வாணலியை வைத்து, அதில் மீதம் இருக்கும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் கறிவேப்பிலையை போட்டு வதக்கவும். இந்த தாளிப்பை தயாரித்து வைத்திருக்கும் குழம்பில் ஊற்றி கிளறவும். இந்த குழம்பை இட்லி, தோசை மட்டுமில்லாமல் சூடான சாதத்திலும் கலந்து சாப்பிடலாம்.






