என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசல் சவாரி"

    • சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்வதற்காக பரிசல் நிலையத்தில் வரிசையில் காத்து நின்று டிக்கெட் வாங்கினர்.
    • மணல்திட்டு சென்றுவர தனிக்கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பேரம் பேசி வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தில் கோடை வெயில் அதிக அளவில் நிலவி வருவதால் பொது மக்கள் முதியோர்கள் குழந்தைகள் என அனைவரும் வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

    இதனை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் தண்ணீர் சூழ்ந்த பகுதிகள் மற்றும் நீர் நிலைகளுக்கு சென்று சூட்டை தணிக்கின்றனர்.

    அந்த வகையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் வருவது வழக்கம்.

    இந்நிலையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதேபோல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு குவிந்தனர்.

    அவர்கள் ஒகேனக்கல்லில் வெப்பத்தை தணிப்பதற்காக, ஆயில் மசாஜ் செய்தும், அங்குள்ள அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

    பின்னர் அங்குள்ள மீன் உணவை சுவைத்து உண்டு மகிழ்ந்தனர்.

    அப்போது சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்வதற்காக பரிசல் நிலையத்தில் வரிசையில் காத்து நின்று டிக்கெட் வாங்கினர்.

    பயணிகள் சிலர் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். அப்போது பயணிகளிடம் மீண்டும் பரிசல் துறைக்கு கொண்டு சென்று இறக்கி விட கூடுதலாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை தரவேண்டும் என்று பரிசல் ஓட்டிகள் பேரம் பேசினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள், பரிசல் ஓட்டிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரிய தகராறாக மாறியது.

    இதைத்தொடர்ந்து ஒகேனக்கல் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதனைதொடர்ந்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பரிசல் ஓட்டிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பது குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலாபயணிகள் பரிசலில் மாமரத்துமடுவு பரிசல் துறையில் இருந்து ஐந்தருவி, காட்சி கோபுரம் வழியாக மணல்திட்டு வரை செல்லவேண்டும். மீண்டும் மாமரமத்து மடுவு பகுதிக்கு திரும்பி வரவேண்டும். இதற்காக 4 பேருக்கு ரூ.750 அளவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வசூலிக்கப்படுகிறது.

    ஆனால், சுற்றுலா பயணிகளை காலம் கடத்தி காட்சி கோபுரத்தில் இருந்து மணல்திட்டு சென்றுவர தனிக்கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பேரம் பேசி வருகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் பரிசல் நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளையும் சுற்றி காட்டிய பிறகு மீண்டும் மாமரத்துமடுவு பகுதிக்கு திரும்பி வர பரிசல் ஓட்டிகள் மறைமுகமாக கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த சம்பவம் ஒகேனக்கல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×