என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 பேர் மீது வழக்குப்பதிவு"

    • தியாகதுருகம் அருகே முன் விரோதத்தில் தாக்குதலில் 7 பேர் காயமடைந்ததால் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சுவரை யாரோ உடைத்து விட்டதாக முருகனின் தந்தை பாவாடை திட்டியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாவாடை. இவரது மகன் முருகன் (வயது 45), அதே பகுதியைச் சேர்ந்த சடையன் என்பவரது மகன் சேகர் (40) இவர்கள் 2 பேரின் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முருகன் அதே பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே மினி டேங்க் கட்டியுள்ளார். அதில் கட்டியிருந்த சுவரை யாரோ உடைத்து விட்டதாக முருகனின் தந்தை பாவாடை திட்டியுள்ளார். இதனால் முருகன் தரப்பினரும், சேகர் தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி, கம்பியால் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக தியாகதுருகம் போலீசில் புகார் செய்தனர். அதில் ஏழுமலை மனைவி பத்மினி (52) கொடுத்த புகாரின் பேரில் பாவாடை, அவரது மகன் முருகன், மனைவி காந்தம்மாள், உறவினர்கள் அன்னக்கிளி, சதீஷ், ராஜேந்திரன் ஆகிய 6 பேர் மீதும், இதேபோல் பழனிவேல் மனைவி அன்னக்கிளி (37) கொடுத்த புகாரின் பேரில் சடையன் மகன் சேகர், இவரது மனைவி கவுரி, உறவினர்கள் ஏழுமலை, இவரது மனைவி பத்மினிஆகிய 4 பேர் மீதும், ஆக மொத்தம் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதில் இரு தரப்பிலும் காயமடைந்த சேகர், பத்மினி, கௌரி, அன்னக்கிளி, முருகன், ராஜேந்திரன், பாவாடை ஆகிய 7 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சேகர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ×