என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரு.20 கோடி பறிமுதல்"

    • மலை போல் குவிக்கப்பட்டிருந்த ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டு கட்டுக்கள்.
    • வங்கி ஊழியர்கள் உதவியுடன் ரு.20 கோடி பணத்தை எண்ணிய அதிகாரிகள்.

    திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் மேற்கு வங்காள மாநிலத்தில் பள்ளி சேவை ஆணையம் மற்றும் தொடக்கக் கல்வி வாரியம் ஆகியவற்றில் ஆள் சேர்ப்பில் பெரும் அளவு மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. திரிணாமுல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆரம்ப, தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் பெரும் ஊழல் நடைபெற்றதாக அம்மாநில பாஜகவும் குற்றம் சாட்டி இருந்தது. 


    இந்நிலையில் அம்மாநிலத்தின் தற்போதைய வர்த்தகத்துறை அமைச்சரும், முன்னாள் கல்வி அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரும், அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜி என்பவரது குடியிருப்பு வளாகத்தில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது அர்பிதா வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.500 மற்றும் 2000 ரூபாய் பணக்கட்டுக்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். அந்த பணம் மலை போல் குவிக்கப்பட்டிருந்தது. அவற்றை எண்ணுவதற்கு வங்கி ஊழியர்கள் உதவி நாடப்பட்டது. பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் அந்த பணம் மொத்தம் 20 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது. 


    அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆவணங்கள், பதிவுகள், சந்தேகத்திற்குரிய நிறுவனங்களின் விவரங்கள், மின்னணு சாதனங்கள், வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்கம் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின.  அமைச்சர்கள் பார்த்தா சாட்டர்ஜி, பரேஷ் அதிகாரி ஆகியோரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

    பெரும் அளவில் லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது இந்த விசாரணையில் தொடர்புடையவர்களே என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.

    ×