என் மலர்
நீங்கள் தேடியது "புதுக்கோட்டை இளம்பெண் போராட்டம்"
புதுக்கோட்டை அருகே காதல் கணவரை மீட்டுத்தரக்கோரி செல்போன் டவரில் ஏறி இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள பாசிப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). கீரனூர் பகுதியை சேர்ந்தவர் வினோதினி (22). பட்டதாரி. இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் மணிகண்டனும், வினோதினியும் பதிவு திருமணம் செய்ததோடு, கோவைக்கு சென்று கடந்த 2 மாதங்களாக அங்கு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். பின்னர் கடந்த மாதம் அங்கிருந்து கீரனூருக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென காரில் வந்த சிலர் மணிகண்டனை கடத்தி சென்றுவிட்டனர்.
இது குறித்து கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோதினி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கடத்தி சென்றவர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே வினோதினியை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இந்தநிலையில் திடீரென வினோதினி கீரனூரில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு மணிகண்டனுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும், கடத்தி சென்றவர்களிடம் இருந்து அவரை மீட்டுத்தர வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோதினியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் மணிகண்டன் வந்தால் மட்டுமே தான் கீழே இறங்கி வருவேன் என கூறினார்.
பின்னர் போலீசார்- பொதுமக்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதான மடைந்த வினோதினி, திடீரென கீழே இறங்கி வருகிறேன். ஆனால் நீங்கள் எனக்காக பஸ் மறியலில் ஈடுபட வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு பொதுமக்கள், நீ கீழே இறங்கி வா. உனக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என கூறினர். இதையடுத்து செல்போன் கோபுரத்தில் இருந்து வினோதினி கீழே இறங்கி வந்தார். பின்னர் போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
மேலும் வினோதினியின் காதல் கணவர் மணிகண்டனை யார் கடத்தி சென்றார்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கீரனூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






