என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகனை மிதித்து கொன்ற யானை"

    குமுளியில் பாகனை யானை மிதித்துக் கொன்றதால் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    கூடலூர்:

    குமுளி அட்டப்பள்ளம் பகுதியில் ஏராளமான தனியார் யானை சவாரி நிலையங்கள் உள்ளன. இங்குள்ள எலிபேண்ட் ஜங்‌ஷன் என்ற நிலையத்தில் 5 யானைகள் உள்ளன. இதில் மீனாட்சி என்ற யானை துணை பாகனான பாஸ்கரன் (55) என்பவரை கீழே தள்ளி விட்டு மிதித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். படுகாயமடைந்த பாஸ்கரனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து குமுளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து யானை சவாரி நிலைய உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாஸ்கரன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார். முதன்மை பாகன் இல்லாததால் உதவியாளரான அவரே யானையை அழைத்துச் சென்றுள்ளார்.

    சரியான பழக்கம் இல்லாததால் புதிய பாகனின் கட்டளையை ஏற்க மறுத்து யானை அவரை தாக்கியுள்ளது. அதன் பிறகு அந்த யானை வேறு எந்த பிரச்சினையும் செய்யாமல் மற்ற யானைகளுடன் சகஜமாக பழகி வருகிறது என்றனர்.

    இருந்த போதும் யானை தாக்கிய சம்பவத்தால் பயணிகள் சவாரி செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    ×