என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் தீவிபத்து"

    சேலம் அருகே சந்துகடைகளில் மது கிடைக்காத ஆத்திரத்தில் தொழிலாளி வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சேலம்:

    சேலம் ஜாகீர் அம்மா பாளையம் காளியம்மன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 37). கூலி தொழிலாளி.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை இவர் திடீர் என தனது வீட்டிற்கு தீ வைத்தார். தீ எரிவதை பார்த்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டுவெளியே ஓடி வந்து சத்தம் போட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் வந்து தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென பரவியதால், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

    இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில் வெங்கடாஜலம் சந்துகடைகளில் மது வாங்கி குடித்து வந்தார் என்பதும் தற்போது சந்துகடைகள் மூடப்பட்டதால் மது கிடைக்காத ஆத்திரத்தில் அவர் வீட்டிற்கு தீ வைத்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    சேலம் நெத்திமேடு அருகே இட்டேரி ரோட்டில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீயை அரை மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
    சேலம்:

    சேலம் நெத்திமேடு அருகே உள்ள இட்டேரி ரோட்டில் ஒரு பழைய பிளாஸ்டிக் குடோன் உள்ளது.

    அந்த பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பழைய பிளாஸ்டிக் மற்றும் பழைய பாட்டில்களை அந்த குடோனில் சேகரித்து வைத்து மொத்தமாக விற்பனை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் அந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அந்த பகுதியினர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து வந்த செந்தில்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். மேலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அருகில் செல்ல முடியவில்லை.

    இதனால் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீ விபத்து நடந்த இடம் முன்னாள் எம்.எல்.ஏ. நடேசனுக்கு சொந்தமானது. செந்தில்குமாருக்கு அந்த இடத்தை நடேசன் வாடகைக்கு கொடுத்துள்ளார்.
    ×