search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sankaranthi"

    • கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் சேவல் சண்டை மிகவும் பிரபலம்
    • சேவல் சண்டை சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் பணம் கை மாறுகிறது

    2024ல் நாடு முழுவதும் ஜனவரி 14, 15 மற்றும் 16 தேதிகளில் "மகா சங்கராந்தி" எனப்படும் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை என விமரிசையாக கொண்டாடப்படும் இக்காலகட்டத்தில் காளைகளை இளைஞர்கள் பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும்.

    இதே போல் ஆந்திர பிரதேச குண்டூர், கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களின் பல பகுதிகளில் சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம்.

    இதற்கென பல கிராமங்களில் பலர் தங்கள் சேவல்களை சண்டை சேவல்களாக பழக்கப்படுத்தி வைக்கின்றனர். இப்போட்டிகளில் சண்டையிடும் சேவல்கள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக போட்டியிடும் போது ஒரு சேவல் இறப்பதும், உயிருடன் இருக்கும் சேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவதையும் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.

    வெற்றி பெறும் சேவல் மீது பணம் கட்டும் சூதாட்டமும் நடைபெறும். கோடிக்கணக்கான பணம் இந்த சூதாட்டத்தில் கைமாறுகிறது.

    இந்நிலையில், ஆந்திராவில் உள்ள சேவல்கள் "ரனிகெட்" (Ranikhet) எனும் நோயால் பாதிக்கப்பட்டு வருவது சேவல் வளர்ப்பவர்களிடம் கவலையை ஏற்படுத்தியது.

    போட்டிக்கு சில நாட்களே உள்ளதால், நோயுற்ற சேவல்களுக்கு சக்தி ஊட்டும் விதமாக ஆண்மை குறைவு சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் "வயாகரா" மாத்திரைகளை தங்கள் சேவல்களுக்கு கொடுக்க வளர்ப்பாளர்கள் துவங்கியுள்ளனர்.

    மேலும் சிலர், இத்துடன் பல வைட்டமின் மாத்திரைகளையும், வேறு சிலர் ஆயுர்வேத ஆண்மை குறைவு மருந்தான "சிலாஜித்" போன்றவற்றையும் சேவல்களுக்கு வழங்குகின்றனர்.

    ஆனால், இப்பழக்கம் சில காலம் சேவல்களுக்கு உற்சாகத்தை அளித்து, நீண்ட நாட்களுக்கு பிறகு சேவல்களை முடக்கி விடும் என கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    அவர்கள் அறிவுரையை புறக்கணிக்கும் சேவல் வளர்ப்பாளர்கள், "பல வருடங்களாக சண்டை சேவல்களை வளர்க்க பெருமளவு செலவு செய்துள்ளோம். ஆனால், தற்போது அவை நோயினால் சக்தி குறைந்து காணப்படுகின்றன. எனவே அவற்றிற்கு தெம்பூட்ட இந்த மாற்று வழியை கையாளுகிறோம். சண்டைக்காகத்தான் இம்மருந்துகளை கொடுக்கிறோம். இதுவரை சேவல்களை ஆய்வு செய்ததில் பரிசோதனை முடிவுகள் ஊக்கம் அளிப்பதாகவே உள்ளன" என சேவல்களை வளர்ப்பவர்கள் தெரிவித்தனர்.

    ×