search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "running bus couple suicide"

    பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் கள்ளக்காதல் ஜோடி ஓடும் பஸ்சில் உயிரை மாய்த்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    களக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள புளியங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மணிகண்டன் தூத்துக்குடியில் உள்ள ஒரு கடலை மிட்டாய் கடையில் பணி புரிந்து வருகிறார். பணியின் காரணமாக தூத்துக்குடியில் தங்கியிருந்தாலும் அடிக்கடி ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

    இவரது தம்பி நயினார். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இலக்கியா (21). இவர்களுக்கு ரஞ்சனா(2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மணிகண்டனுக்கும், இலக்கியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நீண்ட நாட்களாக கணவன், மனைவி போல் பழகி வந்துள்ளனர்.

    இந்த விவகாரம் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் உறவினர்கள் கண்டித்தனர். இனிமேல் இருவரும் சந்திக்கக் கூடாது, பழக கூடாது என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும் அவர்களால் காதலை கைவிட முடியாமல் தவித்தனர். உறவினர்களுக்கு தெரியாமல் சந்திப்பை தொடர்ந்தனர்.

    கடந்த 5-ந்தேதி இலக்கியா தனது குழந்தை ரஞ்சனாவை அழைத்துக் கொண்டு, தீபாவளிக்கு உடன்குடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நயினார் தனது மாமனார் இசக்கிமுத்து விடம் விசாரித்தபோது, இலக்கியா அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    அதே வேளையில் நயினாரின் அண்ணன் மணிகண்டனையும் காணவில்லை. இதையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி குலசேகரன்பட்டினம் போலீசில் நயினார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இலக்கியா தனது குழந்தையை அழைத்துக்கொண்டு மணிகண்டனுடன் சென்றது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து கள்ளக்காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதை அறிந்த கள்ளக்காதல் ஜோடியினர் போலீசார் தங்களை பிரித்துவிடுவார்களோ என்று பயந்தனர். வாழ்க்கையில்தான் ஒன்று சேர முடியவில்லை. சாவிலாவது இணைவோம் என்று நினைத்த அவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவெடுத்தனர்.

    நேற்று அவர்கள் இருவரும் குழந்தையுடன் நெல்லை வந்தனர். நெல்லை பஸ் நிலையம் அருகே வைத்து மணிகண்டனும், இலக்கியாவும் வி‌ஷத்தை குடித்தனர். பின்பு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சாத்தான்குளம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி சென்று உள்ளனர். அப்போது அவர்கள் பஸ்சிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சக பயணிகள் இருவரும் தூங்குவதாக நினைத்தனர்.

    வெகுநேரமாக அவர்கள் எழுந்திருக்கவில்லை. குழந்தை ரஞ்சனா மட்டும் அழுதுகொண்டிருந்தாள். சந்தேகம் அடைந்த பஸ் டிரைவர் பஸ்சை மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து மூலக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிகண்டன், இலக்கியா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×