என் மலர்
நீங்கள் தேடியது "Punjab Budget"
- மாபியா கும்பலை ஒழித்ததற்காக பகவந்த் மான் தலைமையிலான அரசாங்கத்தை நிதியமைச்சர் பாராட்டினார்.
- விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு மொத்தம் ரூ.13,888 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு தனது முதல் முழுமையான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ.1,96,462 கோடியில் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் சீமா தனது அறிமுக உரையில், பஞ்சாப் மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாபியா கும்பலை ஒழித்ததற்காக முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கத்தை பாராட்டினார். மாநிலத்தை கொள்ளையடித்த ஊழல்வாதிகள் ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
ஆம் ஆத்மி அரசாங்கம் செய்த பணிகளை கோடிட்டுக் காட்டிய அவர், 'ஆம் ஆத்மி கிளினிக்குகளில் பத்து லட்சம் பேர் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். அரசு உயர்நிலைப் பள்ளிகளைத் திறந்துள்ளது. அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் 26,797 நபர்களுக்கு ஆம் ஆத்மி அரசாங்கத்தால் வேலை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
அவர் மேலும் பேசியதாவது:-
பட்ஜெட்டில் பள்ளி கல்வி மற்றும் உயர் கல்விக்காக ரூ.17,072 கோடி ஒதுக்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டை விட 12% அதிகம் ஆகும்.
விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு மொத்தம் ரூ.13,888 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டைவிட 20 சதவீதம் அதிகம். புதிய விவசாயக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு ரூ.4,781 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 11% அதிகம். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக, காவல்துறைக்கு ரூ10,523 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 11% அதிகம், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ 26,295 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வரலாற்று முடிவை எடுத்தது, இதன்மூலம் கிட்டத்தட்ட 90 சதவீத குடும்பங்களுக்கு மின் கட்டணம் எதுவும் வருவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.






